எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 28 செப்டம்பர், 2016

எதிர்பாராத வெற்றி!!!

முற்காலத்தில் இங்கிலாந்தை ஆள்வதற்கு ராஜா யாரும் இல்லை. ஊர்ப் பெரியவர்கள் சேர்ந்துதான் ஒவ்வொரு பிரதேசத்தையும் நிர்வாகம் செய்து வந்தார்கள். தங்களுக்கு ஒரு வலிமையான ராஜா வேண்டும் என்று மக்களுக்குத் தோன்றியது.

வலிமையாக இருந்தால் மட்டும் போதாது. அறிவாளியாகவும், நேர்மையானவராகவும், மக்கள் நலனில் அக்கறை உடையவராகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை எப்படிக் கண்டுபிடிப்பது என்று மக்கள் ஆலோசனை செய்தார்கள்.

இதற்கு இடையே ஒரு நாள், நகர மையத்தில் ஒரு பாறை திடீரெனக் காட்சி அளித்தது. இது வரை யாரும் பார்த்திராத பாறை அது. அந்தப் பாறையில் ஒரு வாள் ஊன்றப்பட்டு இருந்தது. அந்த வியப்பான பாறையைக் காண்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள்.


''இந்தப் பாறை மிகவும் அதிசயமாக இருக்கிறதே! ஒரு வாள் வேறு இருக்கிறதே! இங்கே எப்படி வந்தது?'' என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டார்கள். அந்த வாளை எடுப்பதற்காக முயற்சி செய்தார்கள். ஆனால், அது மிகவும் வலுவாகப் பாறையில் ஊன்றப்பட்டு இருந்தது. 'நமக்கான ராஜாவைத் தேர்ந்து எடுப்பதற்காக, கடவுளே இந்தப் பாறையையும் வாளையும் உருவாக்கி இருக்க வேண்டும்’ என்று மக்கள் நினைத்தார்கள். 'பாறையில் ஊன்றப்பட்டு இருக்கும் வாளை இழுத்து எடுப்பவரே அரசர் ஆவதற்குத் தகுதியானவர்’ என்றும் முடிவு செய்தார்கள்.

இந்தச் செய்தி நாடெங்கும் பரவியது. ராஜா ஆகும் எண்ணத்துடன் வாளை உருவப் பலரும் முயன்றார்கள். ஆனால், எவ்வளவுதான் முயன்றாலும் வாளை அசைக்கக்கூட முடியவில்லை.
பலசாலிகளான பலரும் முயற்சி செய்தும் பயன் எதுவும் ஏற்படவில்லை. பாறையும் பாறையில் இருக்கும் வாளும் எல்லோருக்கும் சவால்விட்டபடி நகரின் மத்தியில் பல மாதங்களாக இருந்தன.

இந்தச் சமயத்தில் ஆர்தர் எனும் பெயருடைய சிறுவன் ஒருவன் அங்கே வந்தான். ஆர்தரின் அண்ணன் ஒரு படைவீரன். வாளைப் பார்த்தபோது ஆர்தர் மகிழ்ச்சி அடைந்தான். அந்த வாளைப் பாறையில் இருந்து பிடுங்கி எடுத்தால் ராஜா ஆகிவிடலாம் என்பது அவனுக்குத் தெரியாது. அவன் எண்ணம் எல்லாம் வேறு ஒன்றாக இருந்தது.

'அடடா, எவ்வளவு அருமையான வாள்! இதை எடுத்துச் சென்று அண்ணனுக்குப் பரிசாக அளிக்கலாம். போருக்குப் போகும்போது அண்ணனுக்கு இந்த வாள் மிகவும் உபயோகப்படும்’ என்று நினைத்தான்.

ஆர்தர், வாளைப் பிடித்து ஒரு முறைதான் இழுத்தான். மிகச் சுலபமாக அவன் கையோடு அது வந்துவிட்டது.
''ஹா.... ஹா... ஹா... பிரமாதம்!'' திடீரென்று அங்கே வெடிச் சிரிப்பு கேட்டது. மந்திரவாதி மெர்லினுடைய சிரிப்புதான் அது. தன் மந்திர வித்தையால் பாறையையும் வாளையும் அங்கே உருவாக்கியது மெர்லின் தான்.

மந்திரவாதி சொன்னான், ''சிறுவனே! நான்தான் இவற்றை இங்கே ஸ்தாபித்தேன். நீ இப்போது செய்த செயலின் மூலமாக, இந்த நாட்டுக்கு ராஜாவாக ஆகி இருக்கிறாய். நீதான் இந்த நாட்டை ஆள்வதற்குத் தகுதியானவன். வா! நான் எல்லா வித்தைகளையும் உனக்குக் கற்றுக்கொடுக்கிறேன்'' என்றான்.
ஆர்தர், மெர்லினுடன் சென்றான். 


மெர்லினும் ஆர்தருக்கு எல்லாக் கலைகளையும் கற்றுக்கொடுத்தான்.
திறமை மிகுந்த சிறுவனான ஆர்தர் அனைத்தையும் வெகு விரைவில் கற்றுக்கொண்டான். சீக்கிரமே அவன் இங்கிலாந்தின் அரசனாக முடிசூட்டிக் கொண்டான். அவன் ஆட்சி தர்ம நியாயத்தின்படி இருந்தது. மக்கள் எல்லா நலன்களுடன் வாழ்ந்தார்கள்.

ஆர்தர், எதிரிகளைத் துரத்தி அடித்தான். துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்தான். மக்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி அவன் வெகு காலம் ஆட்சி செய்தான். இங்கிலாந்தை ஆட்சி செய்தவர்களில் மிகச் சிறந்த ராஜா அவன்தான்.

ஒரு செயலை செய்யும் போது எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் ரசித்து செய்யுங்கள். வெற்றி நிச்சயம் கிட்டும்.