எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 10 செப்டம்பர், 2016

துன்பம் உங்களை துரத்துகிறதா?

அன்று வழக்கத்திற்கு மாறாக மாவீரன் அலெக்ஸாண்டர் மிகுந்த கவலையோடு இருந்தார். அவரின் முகம் சோகத்தில் வாடியிருப்பதை அவருக்கு நெருக்கமான நண்பர்கள் சிலர் கவனித்தனர். ஆனால் அதன் காரணம் யாருக்கும் தெரியவில்லை.

சற்று நேரத்திற்கு முன்னர் தான், இந்தியாவில் கிடைத்த முதல் வெற்றியின் செய்தி அவருக்கு கிடைத்திருந்தது. சந்தோஷமாக இருக்க வேண்டிய சமயத்தில் அவர் கவலையுடன் இருப்பது அனைவருக்கும் வியப்பாக இருந்தது.

அனைவரும் வருவதற்கு முன்னால், அலெக்ஸாண்டர் தன் அறையில் ஒரு முதியவருடன் பேசிக் கொண்டிருப்பதாக சிலர் கூறினார்கள். அந்த பெரியவரிடம் கேட்டால், ஒருவேளை அலெக்ஸாண்டரின் சோகத்திற்கான காரணம் தெரியும் என அவரைத் தேடிச் சென்றனர்.

ஒருவழியாக அவரைப் பிடித்து, "நீங்கள் மாவீரரிடம் என்ன சொன்னீர்கள்? இந்தியாவில் கிடைத்த வெற்றியைக் கூட கொண்டாடாமல் ஏன் சோகத்தில் இருக்கிறார்?" எனக் கேட்டனர்.

அந்த பெரியவர், "நான் உங்கள் மாவீரரிடம் அப்படி ஒன்றும் பெரிதாக சொல்லிவிடவில்லை. அவரிடம் 'நீங்கள் இதுவரை ஒன்றைப் பற்றி சிந்தித்ததுண்டா?' எனக் கேட்டேன். அதற்கு அவரும் 'எதைப் பற்றி?' என்று கேட்டார்.

நான் 'இன்னும் சிறிது நாட்களில் இந்தியா முழுதும் வென்றுவிடப் போகிறீர்கள். அவ்வாறு நடந்தால், நீங்கள் இந்த உலகத்தையே வென்றவர் ஆவீர்கள். ஆனால், அதன் பிறகு என்ன செய்வீர்கள்? ஒரு உலகம் தானே இருக்கிறது!' என்று கேட்டேன்.

அதற்கு அவரும் 'ஆம்! ஒரு உலகம் தானே இருக்கிறது. பிறகு நான் எந்த உலகத்தை வெற்றி கொள்வது? இதை நினைத்தால் எனக்கு மிகவும் கவலையாக உள்ளது' என்று கூறி, அப்போதிலிருந்து சோகத்துடன் இருக்கிறார். வேறு எதுவும் பேசவில்லை" என்றார்.

உலகமே நமது காலடியில் இருந்தாலும், சிகரத்தின் உச்சியில் இருந்தாலும் ஏதாவது ஒன்று நம்மை துன்புறுத்திக் கொண்டே இருக்கும்.