எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 23 பிப்ரவரி, 2017

உண்மை!!!

ஒரு ஊரில் நன்றாக படித்த ஒருவன் இருந்தான். வேலை கிடைக்காமல் திருடனாகி விட்டான். அவன் ஏதேச்சையாக ஒரு துறவியை சந்தித்தான். அவர் அவனை திருத்த பல நல்லுரைகளைச் சொன்னார். துறவியின் போதனைகளில் ஈர்க்கப்பட்ட திருடன், "சுவாமி, உங்களுக்காக ஒரேயரு நல்ல விஷயத்தை மட்டும் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கிறேன்'' என்றான். 
"அப்படியானால், எந்த நிலையிலும் பொய்யே சொல்லாதே'' என்றார் துறவி. திருடனும் சத்தியம் செய்து கொடுத்தான். 

ஒருநாள் அவன் அரண்மனைக்கு திருடப் போனான். அங்கே இன்னொரு திருடனை சந்தித்தான். "இந்த அரண்மனையில் நான் வேலை பார்த்தவன். அதனால் உன்னை அரசரின் பொக்கிஷ அறைக்கே அழைத்துப்போகிறேன். நீ திருடு. நான் காவல் காக்கிறேன். திருடுவதில் ஆளுக்குப் பாதி'' என்றான். இவனும் 'சரி' என சம்மதித்தான். 

சுவர் ஏறிக்குதித்து கள்ளச்சாவி போட்டு திறந்து உள்ளே போனவனுக்கு ஆச்சர்யம். விலை உயர்ந்த ஆறு வைரங்கள் இருந்தன. 'ஆறு வைரங்களையும் எடுக்கக்கூடாது. தனக்கு இரண்டு, வழிகாட்டிய திருடனுக்கு இரண்டு, ராஜாவுக்கு இரண்டு விட்டுவிடுவோம்' என முடிவு செய்தான். அதன்படியே திருடிவிட்டு வெளியே வந்தான். வாசலில் காத்திருந்த திருடனுக்கு இரண்டை கொடுத்து விட்டு நடந்ததைக் கூறினான். 

அதைக் கேட்ட அவன், "பொய் சொல்லவில்லையே'' என்றான். உடனே முனிவருக்கு தான் செய்து கொடுத்த சத்தியத்தை கூறி, தன் முகவரியையும் தந்துவிட்டு இருளில் மறைந்து விட்டான். காவல் காத்த திருடன் உண்மையில் மாறுவேடத்தில் வந்திருந்த ராஜா. திருட்டிலும் நேர்மையாக நடந்து கொண்ட திருடனை வியந்தபடியே உறங்கச் சென்றார். 


மறுநாள் காலையில் அமைச்சரை அழைத்து பொக்கிஷ அறையை சோதிக்க அனுப்பினார். நான்கு வைரங்கள் திருட்டு போயிருந்ததை கவனித்த அமைச்சர், 'மிச்சமிருக்கும் இரண்டு வைரங்களையும் நாம் எடுத்துக் கொண்டு திருடன் மேல் பழி போட்டுவிடுவோம். யாருக்குத் தெரியப்போகுது?' என்று நினைத்து அமைச்சர் இரண்டு வைரங்களை திருடிக்கொண்டார். ராஜாவிடம், "ஆறு வைரங்களும் காணவில்லை'' என்றார். ராஜா அதிர்ச்சியடைந்தார்.

முகவரியை கொடுத்து நேற்றிரவு வந்த திருடனை பிடித்து வர உத்தரவிட்டார். திருடனும் நடந்தவற்றைச் சொல்லி, தன்னிடம் இருந்த இரண்டு வைரங்களை ராஜா எதிரில் வைத்தான். "நீ இன்னொரு திருடனுக்கு கொடுத்த இரண்டு வைரங்கள் இவைதானே'' என்று தன்னிடம் இருந்த இரண்டு வைரங்களை ராஜா காட்டினார். அதை பார்த்து திருடனும், அமைச்சரும் திகைத்து போயினர். இப்போது அமைச்சர் வசமாக மாட்டிக் கொண்டார். அவருடைய பதவியும் போனது. "பொய் சொல்லாத, பலசாலியான உன்னை அமைச்சராக்குகிறேன்'' என்று திருடனுக்கு பதவியும் கொடுத்தார் ராஜா. எத்தனை தப்புக்கு மத்தியிலும் பொய் சொல்வதில்லை என்கிற ஒரு நல்ல பழக்கம் திருடனை, அமைச்சராக்கியது.

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும் - வள்ளுவர்
பொய் சொல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; அது ஒருவன் அறியாமலேயே அவனுக்கு எல்லா நலன்களையும் கொடுக்கும்.


புதன், 22 பிப்ரவரி, 2017

நம்மைச் சுற்றி...

அனைத்து செல்வ செழிப்பும் நிறைந்த ஒரு நாட்டின் அரசன் மிகவும் திறமையாக ஆட்சி செய்து வந்தான். அதனால் அந்த நாட்டு மக்கள் அனைவரும் கவலைகள் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அரசன் எப்போதும் அரண்மனை நாவிதன் ஒருவனிடம் சவரம் செய்து கொள்வான். அவ்வாறு ஒருநாள் சவரம் செய்து கொண்டிருந்த சமயத்தில், நாவிதனிடம் நாட்டு நிலைமை பற்றியும், மக்களின் நிலை குறித்தும் விசாரித்தான். 

அதற்கு நாவிதன், "மன்னா! உங்களின் ஆட்சியில் நாடு வளமாகவும், செழிப்பாகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் மக்களின் நிலைமைதான் மிகவும் மோசமாக இருக்கிறது" என்றான். இதைக் கேட்ட மன்னனுக்கு அதிர்ச்சி. நாவிதனிடம், "நான் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்கள் நலனில் மிகுந்த அக்கறை காட்டுகின்றேனே! இருந்தும் அவர்களுக்கு என்ன குறை?" எனக் கேட்டான்.


"மன்னா! மக்களுக்கான திட்டங்கள் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன. இருந்தும் என்ன பிரயோஜனம்? யாரிடமும் ஒரு குண்டுமணியளவு தங்கம் கூட இல்லையே!" எனக் கூறினான் நாவிதன். இதைக் கேட்ட மன்னனுக்கு ஒரு குழப்பம் ஏற்ப்பட்டது. நாவிதன் சென்றதும், மன்னன் தன் சேவகனை அழைத்து, "நீ இன்று இரவு நாவிதனுடைய வீட்டிற்கு சென்று நான் கொடுக்கும் தங்க கட்டியை யாருக்கும் தெரியாமல் வைத்துவிட்டு வர வேண்டும்" என கட்டளையிட்டான். அவனும் அவ்வாறே செய்தான்.

சில நாட்களுக்கு பிறகு, மன்னனுக்கு சவரம் செய்ய அரண்மனைக்கு அதே நாவிதன் வந்தான். மீண்டும் மன்னன் நாட்டு நிலைமை பற்றியும், மக்களின் நிலை குறித்தும் விசாரித்தான். இப்போது நாவிதன் மகிழ்ச்சியுடன், "அரசே! நாடும் மக்களும் மிகுந்த செழிப்போடு இருக்கின்றனர். மக்கள் அனைவரிடத்திலும் ஒரு கட்டி தங்கம் உள்ளது. எந்தக் குறையும் இல்லை" என்றான். நாவிதன் சென்றதும், மன்னன் மீண்டும் தன் சேவகனை அழைத்து, "இன்று இரவு நீ நாவிதனுடைய வீட்டிற்கு சென்று நான் கொடுக்கும் இரண்டு தங்க கட்டியை யாருக்கும் தெரியாமல் வைத்துவிட்டு வர வேண்டும்" என கட்டளையிட்டான். அவனும் அவ்வாறே செய்தான்.


அடுத்த சில நாட்களுக்கு பிறகு, மீண்டும் அரண்மனைக்கு வந்தான் நாவிதான். "இப்போது மக்களின் நிலைமை என்ன?" என்று கேட்டான் அரசன். நாவிதன், "மன்னா! நாட்டின் வளமையும், மக்களின் வளமையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இப்போது அனைவரிடத்திலும் இரண்டு கட்டி தங்கம் இருக்கிறது" என்றான். அவன் சென்றதும், சேவகனை அழைத்தான் அரசன். "இன்று இரவு நீ நாவிதனுடைய வீட்டிற்கு சென்று நான் கொடுத்த அனைத்து தங்க கட்டியையும் யாருக்கும் தெரியாமல் எடுத்து வர வேண்டும்" என கட்டளையிட்டான். சேவகனும் அவ்வாறே எடுத்து வந்து மன்னனிடம் கொடுத்தான்.

மீண்டும் சில நாட்களுக்கு பின்னர், அரண்மனைக்கு வந்த நாவிதனிடம் மக்களின் நிலைமை குறித்து விசாரித்தான் மன்னன். மிகுந்த வெறுப்புடன் நாவிதன், "நாட்டின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. திருடர்களின் தொல்லை அதிகரித்து விட்டது. மக்கள் அனைவரும் வறுமையில் வாடுகின்றனர்" என பதிலளித்தான். இதைக் கேட்ட மன்னன் சிரித்துக் கொண்டே நடந்த உண்மையை கூறினான். நாவிதனுக்கு தன் தவறு புரிந்தது.

நாமும் பல சமயங்களில் இவ்வாறு தான் நடந்து கொள்கிறோம். நாம் கஷ்டப்படும் சூழ்நிலையில், 'எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை?' எனப் புலம்புகிறோம். அல்லது நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களைக் கொண்டு 'இந்த உலகம் இப்படித்தான்' என முடிவு செய்து விடுகிறோம்.

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

மறைந்த மனித நேயம்!!!

ஒரு நாட்டின் ராஜா, நிர்வாகம், வீரம், மனிதாபிமானம், புத்திசாலித்தனம், நீதி மற்றும் நேர்மை ஆகியவற்றில் சிறந்து விளங்குபவன். மாறுவேடத்தில் நகர்வலம் வந்து மக்களின் பிரச்சனைகளை அறிந்து களைவது வழக்கமாக கொண்டிருக்கின்றான். ஒருமுறை, நகர்வலத்தின்போது, கால் ஊனமுற்ற ஒருவன் நடக்க முடியாமல், சிரமபட்டு கொண்டு இருப்பதை பார்த்து 'அவனுக்கு உதவலாமே' என்ற எண்ணத்தில், அவனையும் தன்னுடைய குதிரையில் அமர்ந்துகொள்ள அழைக்கின்றான். 

உண்மையில் அவன் ஒரு திருடன், வந்திருப்பது ராஜா என்றறியாமல் குதிரையை அபகரிக்கும் நோக்குடன், ஊனமுற்றவன்போல நடிக்கின்றான். திருடனும் ராஜவின் அழைப்பினை ஏற்று, ராஜாவை கீழே இறங்கி, குதிரை மேல் ஏற உதவுமாறு கேட்கின்றான். ராஜாவும் கீழேஇறங்கி அவனை ஏற்றிவிட்டு, அவர் ஏற எத்தனிக்கையில், திருடன் ராஜவின் குதிரையை ஓட்டிககொன்டு சென்றுவிடுகின்றான். ராஜா திகைத்து நின்றுவிட்டு, பிறகு நடந்தே அரண்மனைக்கு சென்றுவிடுகின்றார்.


பின்நாளில் அதே திருடன் வேறொரு குற்றத்திற்காக காவலர்களிடம் மாட்டி தண்டனைக்காக ராஜாவிடம் அழைத்து வரப்பட்டான். அவனை அடையாளம் கண்ட ராஜா, அவனுக்கு சிறை தண்டனை கொடுத்தார். பிறகு சிறைச்சாலைக்கு சென்று அவனிடம் தான் மாறுவேடத்தில் வந்தபொழுது தன் குதிரையை அவன் ஏமாற்றி திருடிச்சென்றதை சொன்னார். 

உடனே அந்த திருடன், ராஜாவின் கால்களில் விழுந்து 'மன்னியுங்கள்' என்று கதறினான், உடனே ராஜா அவனை மன்னித்துவிட்டதாக கூறி, படாரென அவன் காலில் விழுந்து, "கல்வி, கேள்வி, மனித நேயம் அனைத்திலும் சிறந்தவன் நான். அவைகளனைத்தும் என் நாட்டு மக்களிடையேயும் தழைத்தோங்க வேண்டும் என்று நினைப்பவன். யாரோ ஒருவன் கஷ்டப்படுபவன் போல ஏமாற்றி திருடிவிட்டான் என்று மக்கள் அறிந்தால், அடுத்து உண்மையில் கஷ்டப்படுபவர்களுக்கு, யாரும் உதவ மாட்டார்கள். மனித நேயம் மறைந்துவிடும், எனவே என்னிடம் குதிரையை திருடிய விதத்தினை யாரிடமும் கூறிவிடாதே!" என்று கெஞ்சுகின்றார். 


அந்த திருடன் அப்படியே திகைத்து நின்றுவிட்டு, "அடடா! இப்படிப்பட்ட மன்னனின் ஆட்சியிலா இப்படி ஒரு காரியம் செய்தோம்?" என வருந்தினான். அப்படியே கண்ணீர்விட்டு கதறி அழுது, "ராஜா! என்னை மன்னியுங்கள். இனிமேல் இப்படி செய்யமாட்டேன்" என்று சொல்லி, அக்கனம் முதல் திருந்தி நல்லவனாகிவிடுகின்றான்.

ஒருவர் நம்மை ஏமாற்றி விட்டால், இந்த உலகத்தில் உள்ள அனைவருமே ஏமாற்றுக்காரர்கள் என முடிவு செய்து விடுகிறோம். இதன் விளைவு இன்றைய காலக்கட்டத்தில் மனிதனை மனிதனாக மதிப்பதில்லை. ஒருவரை ஒருவர் நம்பும் சூழ்நிலை இல்லை. அன்பு, பாசம் போன்ற உணர்வுகள் மறக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வருகின்றன. மனித மனமானது அதிக வருமானம், பணம், பேராசை, பதவி மோகம், கேளிக்கை  என ஒரு ஆடம்பரமான வாழ்க்கையைத் தேடி அலைகிறது. 

திங்கள், 20 பிப்ரவரி, 2017

தாமதம்!!!

மாலை நேரம். அந்த பூங்காவில் இருந்த மர பெஞ்சில், ஒரு ஆணும், பெண்ணும் அமர்ந்திருந்தனர். அந்த பெண் புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தாள். ஆண் குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தான். தற்செயலாக இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர். அந்த பெண் மீண்டும் புத்தகத்தை படிக்கத் தொடங்கினாள்.

அவன் தன் கடிகாரத்தை பார்த்துவிட்டு, கொஞ்ச தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை அழைத்தான். அந்த சிறுவனுக்கு ஆறு வயது இருக்கும். அவனிடம், "இன்னும் 5 நிமிஷம்" என்று கூறினான். அவனும் சிரித்துக் கொண்டே 'சரி' என்றபடி விளையாட்டை ரசிக்கத் தொடங்கினான். அருகில் அமர்ந்திருந்தவள் இதை கவனித்தாள்.


அவனிடம், "உங்கள் மகனா?" எனக் கேட்டாள். அவனும் "ஆம்" என்றான். அவள் அங்கே விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தையை காட்டி, "அது என்னுடைய மகள்" என்றாள். அந்த சிறுமியை பார்த்து விட்டு, "உங்கள் மகள் மிக அழகாக இருக்கிறாள்" என்றான் அவன். பிறகு இருவரும் தங்கள் குழந்தைகளைப் பற்றி பேசிக் கொண்டனர்.

சில நிமிடங்கள் கழித்து, மீண்டும் அவன் கடிகாரத்தை பார்த்து விட்டு, "வீட்டிற்கு போகலாம்" என்று தன் மகனை அழைத்தான். சிறுவன், "இன்னும் கொஞ்ச நேரம்..." என்றபடி அங்கிருந்து செல்ல மறுத்தான். அவனும், "சரி. விளையாடு. ஆனால் இதுதான் கடைசி முறை" என்றான். சிறுவன் மகிழ்ச்சியோடு விளையாட ஓடினான்.


இதைக் கேட்ட அவள், "உங்களுக்கு பொறுமை மிகவும் அதிகம்" என்றாள் அவனிடம். அவன், "போன வருடம், ஒருநாள் இதே போன்று என் மகனை பூங்காவில் விளையாட அழைத்து வந்திருந்தேன். அவன் இன்னும் கொஞ்ச நேரம் விளையாடி விட்டு வருவதாக என்னிடம் சொன்னான். ஆனால், நான் வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றேன்.

பாதி தூரம் சென்றிருந்த சமயத்தில், ஒரு லாரி என் வண்டியில் மோதி விபத்து ஏற்பட்டது. எனக்கு காயம் அதிகமில்லை. ஆனால் என் மகனுக்கு தலையில் அடிபட்டது. மிகப் பெரிய போராட்டத்திற்கு பிறகு தான் மருத்துவர்களால் அவனைக் காப்பாற்ற முடிந்தது. ஒருவேளை அன்று அவனை கொஞ்ச நேரம் விளையாட அனுமதித்திருந்தால், அந்த விபத்து ஏற்படாமல் இருந்திருக்கும்" என்றான்.

நீங்கள் விரும்பிய ஒன்று கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், கவலைப்படாதீர்கள். நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பான ஒன்று காத்திருக்கிறது என்று கருதுங்கள்   


வியாழன், 16 பிப்ரவரி, 2017

மாய உலகம்!!!

அந்த சிறு குருவிக்கு அன்று ஒரு அழகிய கனவு வந்தது. கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது. இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை. வண்ண வண்ண விளக்குகள், அழகான நதிகள், மரங்கள், எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது. எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும். அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது. ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.

அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது.
"காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா?" என நினைத்து அவரிடம் வழி கேட்டது.
“எனக்கு முழு விபரம் தெரியாது. தெரிந்த வரை சொல்கிறேன். 
அதற்கு விலையாக நீ உன் சிறகுகளில் ஒன்றைத் தர வேண்டும்” என்றார் ஜோதிடர். "ஒரேயோரு சிறகுதானே" என்று குருவியும் சரி என்றது. குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது.


குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க, 
அந்த வழியே ஒரு பாம்பு வந்தது. பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, “அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன். எனக்கு வழி காட்டேன்” என்றது. பாம்பு “இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும். சொல்கிறேன். பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய்? உன் அழகான சிறகில் ஒன்றைத் தந்து விடு” என்றது. "இன்னொரு சிறகுதானே, தந்தால் போச்சு" என்று குருவியும் சம்மதித்தது.


பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது. அதற்குப் பிறகு வழி தெரியவில்லை.
இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது. அவர்களும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு சிறகை விலையாக கேட்டார்கள். குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு சிறகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.

முடிவாக, கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது. குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
"வந்து விட்டோம்.....வந்தே விட்டோம்......இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம். ஆனால், இதென்ன....ஏன் என்னால் பறக்க முடியவில்லை? ஐயோ! என் உடம்பெல்லாம் கனக்கிறதே. கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே" என்று கதறியது.
மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது. 


பறப்பதற்கான சிறகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது. குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. "இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம். ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன்" எனப் புலம்பியது. அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது அந்தக் குருவி.

இன்று நம்மில் பலரது நிலைமை இது. “நவீன வசதிகளே சந்தோஷம்” என்று அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம். 

குடும்பத்துடன் வெளியே செல்வது, பிடித்த புத்தகம் படிப்பது, பிடித்த படம் பார்ப்பது, பிடித்த உடை உடுத்துவது, பிடித்த உணவு உண்பது என்று எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம். கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, உடலும் மனசும் தளர்ந்து போகிறது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை. நாம் செய்யும் ஒவ்வொரு செயலில் இருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்.

புதன், 15 பிப்ரவரி, 2017

கவலை

அந்தக் காட்டில் குரங்குகள் பல, கூட்டமாக இருந்தன. அவற்றில் சுட்டித்தனம் செய்யும் ஒரு குட்டிக் குரங்கும் உண்டு. ஒரு நாள் அந்தக் குட்டிக்குரங்கு, தரையில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த பாம்பு ஒன்றைக் கண்டது. நெளிந்து, வளைந்து சென்ற அந்தப் பாம்பைக் கண்டதும், அதற்கு குதூகலமாக இருந்தது. அது ஒரு பெரிய நச்சுப் பாம்பு. குட்டிக் குரங்கானது, மெதுவாகப் போய் அந்தப் பாம்பை தன் கையில் பிடித்து விட்டது.

பிடிபட்ட பாம்பு, குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக்கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது. குட்டிக் குரங்குக்கு கொஞ்சம் பயம் வந்து விட்டது. இதைப் பார்த்து குரங்குகள் அனைத்தும் அங்கே கூடிவிட்டன. ஆனால் எந்தக் குரங்கும், குட்டிக்கு உதவ முன்வரவில்லை.


‘ஐயய்யோ.. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு. இது கடித்தால் உடனே மரணம்தான்’ என்றது ஒரு குரங்கு. மற்றொன்றோ, ‘அவன் தனது பிடியை விட்டதுமே, பாம்பு அவனைக் கடித்துவிடும். பாம்பிடம் இருந்து அவன் தப்பிக்கவே முடியாது’ என்றது. இப்படியே ஒவ்வொரு குரங்கும், குட்டியின் பீதியை அதிகரித்து விட்டு அங்கிருந்து அகற்று போய்விட்டன.

தன்னுடைய கூட்டமே, தன்னை கைவிட்டுவிட்டதால், விரக்தியின் உச்சத்தில் இருந்தது குட்டிக் குரங்கு. எந்த நேரமும் கடிக்கத் தயாராக சீறிக்கொண்டிருக்கும் பாம்பைப் பார்த்து பயந்தபடியே, தன் பிடியை விட்டுவிடாமல் இறுக்கமாக பிடித்துக்கொண்டது. மரண பயம் அந்தக் குரங்கை வாட்டி வதைத்தது.


‘ஐயோ.. புத்தி கெட்டுப் போய் இந்தப் பாம்பை கையால் பிடித்துவிட்டேனே’ என்று பெரிய குரலெழுப்பி புலம்பியது. நேரம் கடந்து கொண்டே இருந்தது. உணவும், நீரும் இல்லாமல் குரங்கின் உடல் சேர்ந்து போய்விட்டது. கிட்டத்தட்ட மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தது அந்தக் குரங்கு. கண்கள் இருளத் தொடங்கின. ஆனால் பாம்பை பிடித்திருந்த கையினை மட்டும் தளர்த்தவே இல்லை. இறுக்கமாக பற்றியபடியே இருந்தது.

அந்த நேரம் பார்த்து ஒரு ஞானி அந்த வழியாக வந்தார். சொந்தங்களெல்லாம் கைவிட்ட நிலையில், இந்தத் துறவி நம்மைக் காப்பாற்றுவார் என்று அந்த குட்டிக் குரங்கு நினைத்தது. அதற்கு கொஞ்சம் நம்பிக்கையும் வந்தது.

குட்டியின் அருகில் வந்த துறவி, ‘எவ்வளவு நேரம்தான் அந்தப் பாம்பை கையில் பிடித்துக் கொண்டே கஷ்டப்படப் போகிறாய்? அதைக் கீழே போடு’ என்றார். குரங்கோ, ‘ஐயோ.. சுவாமி! நான் பாம்பை விட்டு விட்டால், அது என்னைக் கொன்றுவிடுமே’ என்றது. 


அதற்கு துறவி, ‘பாம்பு செத்து ரொம்ப நேரமாகிவிட்டது. அதை கீழே வீசு’ என்றார். அவரது வார்த்தையைக் கேட்ட குரங்கு, பயத்துடனேயே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.

துறவி சொன்னது உண்மைதான். குரங்கின் இறுகிய பிடியில் நெடுநேரம் இருந்த அந்தப் பாம்பு இறந்து போயிருந்தது. அதைப் பார்த்த பிறகுதான், அந்தக் குரங்கு குட்டிக்கு உயிர் வந்தது. பின்னர் அந்தக் குரங்கு, துறவியை நன்றியுடன் பார்த்தது. அவர், ‘இனிமேல் இதுபோன்ற முட்டாள் தனம் பண்ணாதே’ என்றபடி தன் வழியில் நடந்து போனார்.

நம்மில் பலரும் இப்படித்தான், மனக்கவலை என்ற செத்தப் பாம்பை, கையில் பிடித்து வைத்துக் கொண்டு, விட முடியாமல் கதறிக்கொண்டிருக்கிறோம். எனவே கவலையை விட்டொழியுங்கள். மகிழ்ச்சி தானாகவே வந்து சேரும்.


திங்கள், 13 பிப்ரவரி, 2017

நிழல்!!!

தோட்டம் ஒன்றில் பெரிய ஆப்பிள் மரம் ஒன்று நன்கு வளர்ந்து கிளை பரப்பி நின்றது. ஒரு சிறுவன் அந்த மரத்தினடியில் விளையாடிக்கொண்டிருப்பான். அந்த மரத்தின் மீது ஏறி விளையாடுவதும் அதன் கனிகளை பறித்து புசிப்பதும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். களைப்பாக இருக்கும்போது அந்த மரம் தரும் நிழலில் உறங்கி ஓய்வெடுப்பான்.

காலம் உருண்டோடியது. அந்தச் சிறுவன் கொஞ்சம் வளர்ந்து விட்டான். இப்போதெல்லாம் அந்த மரத்தின் நிழலில் விளையாட அவன் வருவதில்லை. ஒரு நாள் அவன் மரத்தை நாடி வந்தான். அந்த மரம் அவனை அன்போடு வரவேற்றது. “வா குழந்தாய்! வந்து என் நிழலில் விளையாடு!” அந்தச் சிறுவன், “நான் இன்னும் சின்னக் குழந்தை அல்ல. மரங்களுடன் என்னால் விளையாட முடியாது. நான் விளையாடுவதற்கு விளையாட்டு பொம்மைகள் தேவை. அவற்றை வாங்க பணம் தேவை” என்றான்.


அந்த மரம், “என்னிடம் பணம் கிடையாது. ஆனால் நீ என்னிடமிருந்து ஆப்பிள் பழங்களை பறித்துச் சென்று அவற்றை விற்றால் உனக்கு தேவையான பணம் கிடைக்கும்”என சொன்னது. அந்தச் சிறுவன் அப்படியே செய்தான். பழங்களை விற்றதில் அவனுக்கு நிறைய பணம் கிடைத்தது. அதைக் கொண்டு தனக்கு பிடித்தமான விளையாட்டுப் பொருட்களை அவன் வாங்கிக் கொண்டான். ஆனால் அவன் மீண்டும் மரத்தின் பக்கம் போகவில்லை. மரம் மீண்டும் தனிமையில் விடப்பட்டது.

சில ஆண்டுகள் கழித்து ஒரு இளைஞன் அந்த மரத்தை நோக்கி வந்தான். அந்தச் சிறுவன் தான் இப்போது வளர்ந்து இளைஞனாக இருக்கிறான். அந்த மரம் அவனை அடையாளம் கண்டு கொண்டது. “வா மகனே! ஏன் இப்படி சோகமாக இருக்கிறாய்? வந்து என் நிழலில் கொஞ்ச நேரம் உட்கார். இவ்வளவு நாட்களாக உன்னைக் காணாமல் நான் ஏங்கிப் போயிருக்கிறேன்” என்று அவனை அழைத்தது.

அந்த இளைஞனோ சலித்துக் கொண்டான், “எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை. என் குடும்பத்திற்காக நான் உழைக்கிறேன். அவர்களுக்காக நான் ஒரு வீடு கட்ட வேண்டும். அதற்கு எனக்கு பணம் தேவைப்படுகிறது” என்றான். அந்த மரம், “கவலையை விடு மகனே! இப்போதும் என்னிடம் பணமில்லை. ஆனால், நீ எனது கிளைகளை வெட்டி உனது வீட்டை கட்டிக் கொள்ளலாம்” என்றது. அந்த இளைஞன் சந்தோஷமாக அந்த மரத்தின் கிளைகளையும் நடுப்பகுதியையும் வெட்டி எடுத்துச் சென்று தனது குடும்பத்திற்காக வீடு கட்டிக்கொண்டான். அடிப்பகுதி மட்டுமே மிச்சமிருந்த அந்த மரம் மீண்டும் தனிமையிலாழ்ந்தது.


நீண்ட காலம் கழித்து அவன் மீண்டும் அந்த மரத்தை நாடி வந்தான். இப்போது மூப்படைந்திருந்த அவன் மிக களைப்படைந்தவனாகவும் சோகமானவனாகவும் இருந்தான். மரம் அவனிடம் கேட்டது, “மகனே, ஏன் இப்படி சோகமாக இருக்கிறாய்? என் உதவி எதுவும் உனக்கு தேவையா? ஆனால், உனக்கு உதவ என்னிடம் இப்போது ஆப்பிள்களும் இல்லை, கிளைகளும் இல்லை. உனக்கு ஆறுதலாக நிழல் கொடுக்கக்கூட முடியாத நிலையில் நான் இருக்கிறேன்” என்றது. 

அந்த மனிதன் விரக்தியாக, “எனக்கு வாழ்க்கையே வெறுப்பாகி விட்டது. நான் மிக களைத்து விட்டேன். தனியானவனாகவும் ஆகிவிட்டேன். எனக்கு உன் ஆறுதல் மொழிகள் தேவை. உனது வேரில் நான் அமர்ந்து கொள்ளலாமா?” என்று கேட்டான். மரம் ஒன்றும் சொல்லவில்லை. அந்த மனிதன் அங்கு அமர்ந்து கொண்டான். தனிமையாக இருந்த இருவரும், ஒருவர் மற்றவருக்கு துணை என்ற எண்ணத்தில் மகிழ்வடைந்தார்கள். தங்கள் நிலையை எண்ணி அவர்களுக்கு அழுகையும் வந்தது.


ஒருவகையில் நாம் அனைவருமே அந்த சிறுவனைப்போலத்தான் நடந்து கொள்கிறோம், நமது பெற்றோர்களை பொறுத்த வரையில்!
நாம் சிறுவயதாக இருக்கும்போது பெற்றோரின் அரவணைப்பு நமக்கு தேவைப்படுகிறது. அவர்களுடன் இருக்கும்போது நாம் மிக பாதுகாப்பாக உணர்கிறோம். நாம் வளர்ந்த பிறகு அவர்களின் நிழலில் இருப்பது நமக்கு பிடிப்பதில்லை. அவர்களை தனிமையில் விட்டு நாம் விலகிச்செல்கிறோம். அவர்களின் உதவி தேவை எனும்போது மட்டுமே நாம் திரும்ப வருகிறோம். அவர்களுடன் செலவழிக்க நமக்கு நேரம் கூட கிடைப்பதில்லை. ஆனால் பெற்றோர் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னிடம் இருக்கும் அனைத்தையும் தரத் தயாராக இருக்கிறார்கள். பதிலுக்கு அவர்கள் எதிர்பார்ப்பது என்னவோ தம் பிள்ளைகளின் பாசமும் கவனிப்பும்தான்.


வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

நீதி தேவதை!!!

ஒரு கிராமம். ஒரு காலத்தில் செழிப்பாக இருந்தது. இன்று நிலைமை மாறிப்போய் கிடக்கிறது. பஞ்சம் பிடித்து ஆட்டுகிறது.
அந்தக் கிராமத்தின் கோடியில் ஒரு கந்தல் குடிசை. அந்தக் குடிசை, இருவர் அடைக்கலமாகி வசித்து வந்தனர். அதில், ஒருவர் பார்வையற்றவர். மற்றவர் கால்கள் அற்றவர். அவர்களுக்கென்று பிழைப்பு வழி எதுவுமில்லை. மாலையில் கடைத்தெரு மூடப்படும்போது அவர்கள் போவார்கள். பழையது, மிஞ்சிய காய் கனி தானியங்களை மக்கள் அவர்களுக்குத் தருவார்கள். அதை உணவாக்கி அவர்கள் உண்டு வாழ்ந்தனர். 

ஆனால் பஞ்சம் வந்த பிறகு, இருவருக்கும் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, இருவரும் பெரும்பாலும் பட்டினி கிடந்தனர். தொடர்ந்து ஐந்து நாட்கள் எதுவும் கிடைக்காமல் பட்டினி கிடந்த போது,  'திருடி சாப்பிட்டாவது உயிரைக் காப்பாற்றிக் கொள்வது'  என்ற முடிவுக்கு வந்தனர். போகிற வழியில் வயல்கள் எல்லாம் கருகிக் கிடந்தன.
கொஞ்சம் தூரத்தில் ஊர்த்தலைவரின் தோட்டம். அவருக்கென்று தண்ணீர் வசதிகள். தோட்டம் இன்றைக்கும் செழித்துக் கிடந்தது.
அங்கே போவதென்று முடிவு செய்தார்கள். 


முடவரைக் குருடர் சுமந்து கொண்டார். முடவர் வழிகாட்ட, குருடர் நடந்தார். ஒருவழியாய் ஊர்த்தலைவர் தோட்டத்துக்கு வந்துவிட்டார்கள். ஊருக்குள் யாரும் நெருங்க பயப்படும் தோட்டம். பிடிபட்டால், கட்டி வைத்துத் தோலை உறித்து விடுவார்கள். தோட்டத்தில் தானியங்களும், காய் கனிகளும் குவிந்து கிடந்தன. முடவரை வரப்பிலேயே இறக்கிவிட்டு குருடர் தட்டுத் தடுமாறி உள்ளே போய் கைக்கு அகப்பட்டதை எடுத்துக் கொண்டார். யாருக்கும் தெரியாமல் குடிசைக்கும் திரும்பி விட்டனர்.

அவர்கள் கொண்டு வந்தது இரண்டு நாட்களுக்கு போதுமாயிருந்தது. நெடுநாளைக்குப் பிறகு இருவரும் வயிறார உண்டு உறங்கினார்கள். காலையில் எழும்போதே பெருங்கூச்சல் கேட்டது. ஊர் முச்சந்தியில் நின்று தலைவர், “எவண்டா, எந்தோட்டத்தில் எறங்கித் திருடினவன்?” என கத்திக் கொண்டிருந்தார். யாரும் திருட்டை ஒப்புக் கொள்ள முன்வராததால், ஊர்த் தலைவர். ‘நீதி தேவதை’யின் கோயிலுக்குப் போய் மண்டியிட்டு வேண்டி நீதி தேவதையை ஊருக்குள் அழைத்து வந்தார்.

நீதி தேவதையின் முன் ஒவ்வொருவரும் ஆஜராகி உண்மையைச் சொல்ல வேண்டும். திருடியவரைத் தேவதை கண்டு பிடித்துவிடும். ஊர்மக்கள் ஒவ்வொருவராக ஆஜராகி திருடவில்லை என்று வாக்குமூலம் கொடுத்தனர். யாரையும் நியாய தேவதை கொல்லவில்லை.
இனி மிச்சம் குருடரும், முடவரும் மட்டுமே. யாருக்கும் அவர்கள் ஞாபகம் வரவில்லை. திடீரென ஊர்த்தலைவர், “அந்தக் குருடனையும், நொண்டியையும் இழுத்துட்டு வாங்கடா” என கத்தினார். இருவரும் சிரமத்தோடு தடுமாறி வந்தார்கள். ஊர் மக்களுக்கு கண்கலங்கியது.


நியாய தேவதை முன் முதலில் குருடர் ஆஜரானார். “தேவதையே! நான் பிறவிக்குருடன். எதையும் கண்கொண்டு பார்க்க முடியாதவன். தலைவர் தோட்டத்தையும் நான் பார்த்ததில்லை” என்றார். குருடரைத் தேவதை ஒன்றும் செய்யவில்லை.
அடுத்து முடவர் ஆஜரானார். “அம்மா! நான் பிறவியிலேயே முடவன். நடக்க மாட்டாதவன். தலைவர் தோட்டத்தில் என் கால் படவேயில்லை” என்றார். முடவரையும் தேவதை எதுவும் செய்யவில்லை. இனி யாரும் மிச்சமில்லை. ஊர் மக்களுக்கு திகைப்பு. 

அப்போது யாரும் எதிர்பாராமல் அந்தச் சம்பவம் நடந்தது. கண்ணுக்குத் தெரியாத இரு கைகள் ஊர்த்தலைவரின் கழுத்தை நெறித்தன. ஊர்த்தலைவர் சுருண்டு விழுந்து இறந்தார். ‘ஊர்த்தலைவரா... திருடர்!’ என்று எல்லோருக்கும் ஆச்சரியம்! ஊர்மக்கள் நீதி தேவதையிடம் விளக்கம் கேட்டனர். தேவதை மக்களிடம், "குருடரும், முடவரும் திருடியது உண்மைகளென்றால், ஊர்த்தலைவர் ஊரையேக் கொள்ளையடித்து அவர் மட்டும் வசதியாக இருப்பது பெரிய உண்மையாகும். எனவே இந்த ஊரிலே மிகப் பெரிய திருடன் தலைவன் தான்" என்றது.

நம் நன்மையை மட்டுமே நினைக்கின்ற சுயநலம், பாவங்கள் அனைத்திலும் முதற்பாவமாகும். சுயநலம் கொண்டவன் எல்லா கோயில்களையும் வழிபட்டிருந்தாலும், புண்ணியத் தலங்கள் அனைத்தையும் பார்த்திருந்ததாலும் அவன் கடவுளிடமிருந்து விலகியே இருக்கிறான் - சுவாமி விவேகானந்தர்.  


புதன், 8 பிப்ரவரி, 2017

வீண் விவாதம்!!!

ஓர் அரசன் தன் நாட்டை ஆட்சி செய்து வந்தான். திடீரென்று ஒரு நாள் அவனுடைய நாட்டை, பக்கத்து நாட்டு அரசன் படையெடுத்து வந்து முற்றுகையிட்டான். உடனே அரசன் எல்லோரையும் அழைத்து, பகைவர்களின் படை விரைந்து வந்துகொண்டிருக்கிறது! அவர்களை எப்படி எதிர்கொள்வது? இப்போது நாம் என்ன செய்யலாம்? என்று ஆலோசனை கேட்டான். 

அங்கிருந்த பொறியியல் வல்லுநர்கள், "நம் தலைநகரைச் சுற்றிலும் பெரிய ஒரு மண் சுவர் எழுப்பி, அதைச் சுற்றி ஓர் அகழி அமைக்க வேண்டும்" என்றார்கள். தச்சர்களோ, "மண் சுவர் பயனற்றது, மழை வந்தால் கரைந்துவிடும். எனவே மரத்தினால் சுவர் அமைக்க வேண்டும்" என்று கூறினார்கள். இதைக் கேட்ட சக்கிலியர், "இரண்டும் பயனற்றவை. தோலால் தலைநகரத்தைச் சுற்றிலும் சுவர் அமைப்பது போன்று பாதுகாப்பானது வேறு எதுவுமில்லை" என்றனர். 


அப்போது கொல்லர்கள், "நீங்கள் சொல்வது எதுவுமே சரியில்லை. இரும்புச்சுவரைப் போன்று ஒரு பாதுகாப்பை வேறு எதனாலும் தர முடியாது. இரும்பினால்தான் மதிற்சுவரைக் கட்ட வேண்டும்" என்று கூக்குரலிட்டனர். அப்போது அங்கே வந்த சட்ட நிபுணர்கள், "நாம் பகையரசனிடம் நீங்கள் இப்படி வலுவில் வந்து எங்கள் நாட்டின் மீது படையெடுப்பது முறையல்ல. இது சட்டத்திற்குப் புறம்பானது. எதையும் சட்டப்பூர்வமாக அணுகுவதுதான் சிறப்பு. எனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, 'நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின்படி நீங்கள் நடப்பதுதான் நியாயமாகும்' என்று, அவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும்" என்று வாதிட்டார்கள். 

கடைசியாக அரசாங்கப் பூஜாரிகள் வந்தார்கள். அவர்கள் அது வரையில் ஆலோசனை கூறிய எல்லோரையும் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள். அவர்கள், "நீங்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள்போல் பேசுகிறீர்கள்! முதலில் யாகங்கள் செய்து தேவர்களை மகிழ்விக்க வேண்டும். அப்படிச் செய்தால் நம்மை யாராலும் வெல்ல முடியாது!" என்றார்கள்.


இப்படியெல்லாம் அவர்கள் நாட்டைக் காப்பாற்றுவதற்குப் பதில் வீண் வாக்குவாதம் செய்வதிலும், தங்களுக்குள் சண்டையிடுவதிலும் காலத்தை வீணாக்கிக்கொண்டிருந்தார்கள். இதற்குள் பகை அரசன் புயல்போல் தன் படைகளுடன் தலைநகரத்திற்குள் புகுந்தான். அவன் எந்த எதிர்ப்பும் இன்றி, மிகவும் சுலபமாகத் தலைநகரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத் தரைமட்டமாக்கினான்.

ஒரு பிரச்னை என்று வரும்போது, அதைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான ஒரு வழியைக் கண்டறிந்து செயல்படுத்தி பிரச்னையைத் தீர்ப்பதுதான் வெற்றி பெறுவதற்கான அறிவுடைமையாகும். இதற்கு மாறாக புரிந்துகொள்ளாமல் விவாதம் செய்வது, ஒருபோதும் ஆக்கபூர்வமான எந்த நன்மையையும் தராது.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

கோணம்!!!

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தை சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர். அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவர்கள் தங்கியிருந்த ஊரின் தலைவருக்கு அறிஞரைப் பிடிக்காது. அவரை எப்படியாவது பிறர் முன்பு மட்டம் தட்டி தலைகுனிவை ஏற்படுத்த விரும்பினார். 

ஒருநாள் ஊர்த்தலைவர் அறிஞரைப் பார்த்துக் கிண்டலாக, ”ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!” என்றார்.


அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?” எனக் கேட்டார்.
பையன் ”தங்கம்” என சொன்னான். அவர், ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?” எனக் கேட்டார்.

பையன், ”தினமும் நான் பள்ளி செல்லும்போது ஊர்த்தலைவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறுகையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அழைத்து 'இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள்' என்பார். நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன். உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள். நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன். 


இது ஓராண்டாக நடக்கிறது. இதனால் தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான் நான் மதிப்பு வாய்ந்தது வெள்ளி என்று கூறினேன்” என்று விளக்கம் அளித்தான். இதைக் கேட்ட அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், ஆனால் நாம் தோற்பதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். அதை வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!

திங்கள், 6 பிப்ரவரி, 2017

சமநிலை !!!

ஒரு ஞானி கடவுளை தேடி நாடுநாடாக அலைந்து திரிந்து கொண்டிருந்தார். அவர் பல குருமார்களை சந்தித்தார். ஆனால் எதுவும் அவருக்கு திருப்தியளிக்க வில்லை. இதயத்தை அர்ப்பணிக்க கூடிய இடத்தை அவரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஏமாற்றத்தோடும் நிராசையோடும் அவர் வெளியே குருவை தேடுவதை நிறுத்தி விட்டு உள் குரலை கேட்பது என்று முடிவு செய்து, தனித்து இருப்பதற்காக காட்டுக்குச் சென்றார்.

அங்கு அவர் ஒரு மிக அழகான தேக்கு மரக் கூட்டத்தை கண்டார். பழமையான வயதான பல தேக்கு மரங்கள் ஒன்று கூடி ஒரு கூடாரம் போல உருவாகியிருந்தன. அதன் கிளைகள் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து இயற்கையின் மழை, காற்று, வெயில் ஆகிய எல்லாவற்றிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் உருவாகியிருந்தது. அருகில் ஒரு ஏரி இருந்தது. அந்த கூடாரம் மிகவும் அமைதியானதாக, காட்டின் நடுவில் யாரும் வராத இடத்தில் இருந்தது.



அந்த ஞானி அதனுள் சென்றார். அவருக்கு அந்த இடம் மிகவும் பிடித்தது. அதற்கே உரிதான அழகுடன் அந்த இடம் இருந்தது. அவர் அங்கே உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தார். வாரத்திற்கு ஒருமுறை அவர் அந்த இடத்தை விட்டு வெளியே வந்து பக்கத்து கிராமத்துக்குப் போய் கொஞ்சம் உணவு வாங்கி சாப்பிட்டு விட்டு திரும்பவும் வந்து உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து விடுவார். ஞானி கடவுளின் பெயரை மாதக்கணக்கில் உச்சரித்துக் கொண்டேயிருந்தார். அவர் மிகவும் அமைதியாகவும், சாந்தமானவராகவும், தன்மையானவராகவும், மாறுவதை அவர் உணர ஆரம்பித்தார். ஆனால் அவர் மகிழ்ச்சியாக இல்லை. அது போதாது.  முக்தி நிலை, ஞானமடைதல் அதற்கு இன்னும் வெகு தூரம் போக வேண்டும். 

வருடங்கள் கடந்தன. அந்த கூடாரம் ஒரு தூய்மையான இடமாக மாறி விட்டது. தேக்கு மரங்கள் மிகவும் வளமடைந்தன. அவை புதிதாக நிறைய கிளைகள் விட்டு, இலைகள் விட்டு செழிப்படைந்தன. அந்த கூடாரமே அழகால் நிரம்பியிருந்தது. ஆனால் அவரின் இதயம் மிகவும் வருத்தத்தில் இருந்தது. ஆனால் அவர் காத்துக் கொண்டேயிருந்தார். அவர் அவரால் செய்யக்கூடிய எல்லாவற்றையும் செய்து விட்டார். பதினெட்டு வருடங்கள்  கடந்துவிட்டன. ஆனால் அவர் முக்தி நிலை பெறவேயில்லை. அவர் ஆழ்ந்த மௌனத்திலும் அமைதியிலும் இருந்தார். ஆனாலும் அவர் ஞான நிலை கிட்ட வில்லை. எதுவும் அவருக்கு நிகழவில்லை.

ஒரு நாள் நடு இரவில் திடீரென அவருக்கு ஒரு பயம் எழுந்தது. அவர் சிந்தித்து பார்க்க ஆரம்பித்தார். "இந்த தேக்கு மரக் கூட்டம் எப்படி மழையையும், வெயிலையும் உள்ளே அனுமதிப்பதில்லையோ, அது போல எனது பிரார்த்தனையையும் வெளியே போக அனுமதிப்பதில்லையோ?  இதன் கிளைகள் மிகவும் அடர்த்தியாக உள்ளதால் எனது பிரார்த்தனைகள் உள்ளேயே நின்று
விடுகின்றதோ? இறைவனை போய் சேர வில்லையோ? எப்படி சூரிய ஒளி இந்த கூடாரத்துக்குள் ஊடுருவ முடிந்ததில்லையோ, அது போல எனது பிரார்த்தனை இறைவனைப் போய் சேர வில்லையோ?" என நினைத்தார்.


பயந்து போய் நட்ட நடு இரவில் இருளில் உடனே அந்த கூடாரத்தை விட்டு தப்பியோடி விட்டார். ஆனால் அதே சமயத்தில் அந்த அடர்ந்த
மரக் கூட்டத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள சாலையில் ஒரு பிச்சைக்காரன் ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்க்கு போய் கொண்டிருந்தான். திடீரென அவனுக்கு காட்டிற்க்குள் போக வேண்டுமென்ற தீவிர வேட்கை எங்கிருந்தோ தோன்றியது. 

"எதற்காக காட்டிற்க்குள் போக வேண்டும்?  அது ஆபத்தானது. அங்கென்ன வேலை?" என நினைத்தான். ஆனால் ஏதோஒன்று அவனை இழுத்தது. அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவன் பைத்தியம் பிடித்தாற்போல காட்டிற்க்குள் ஓடலானான். அவன் அந்த மரக்கூடாரத்தை நெருங்கியவுடன் அவனுக்கு புரிந்தது. அந்த மரக்கூடாரத்திலிருந்து "என்னிடம் வா" என ஒரு மெல்லிய குரல் வந்தது. 

அவன் அந்த மரத்தைச் சுற்றி ஒரு அதிர்வலை இருந்ததை உணர்ந்தான். இப்போது அந்த பயம் போய் விட்டது. அவன் அந்த
மரக்கூடாரத்தினுள் நுழைந்தான். நுழைந்த அந்த கணமே அந்த நிலைமாற்றமடைந்தான். ஒரு புதிய மனிதனாக பரிமணித்தான். அவனால் அவனை நம்பவே முடிய வில்லை. உண்மையில் அவன் கடவுளைப்பற்றி எனக் குறிப்பாக எதையும் நினைத்தது கிடையாது. மதத்தைப்பற்றி எந்த கொள்கையும் கிடையாது. என்ன நடக்கிறதென்றே அவனுக்கு புரியவில்லை. நிலைமாற்றமடைந்த அவன் பல்லாயிரம் தடவை அன்றைய இரவில் இறந்து பிறந்தான். பதினெட்டு வருடங்கள் அந்த சாதகன் அங்கே இருந்தான். எதுவும் நடக்கவில்லை. பதினெட்டு மணி நேரங்களில் அந்த பிச்சைக்காரன் புத்தனாகி விட்டான். அவன் எதுவும் செய்யவில்லை. 


பதினட்டு வருடங்கள் முயற்சி செய்தவனுக்கு எதுவும் நிகழ வில்லை, பிரார்த்தனையே செய்யாதவனுக்கு பதினட்டு மணி நேரங்களில் எல்லாமும் கிடைத்து விட்டது. இந்த கதையின் பொருள் என்ன? அந்த சாதகன் அதிகப்படியாக செய்தான். அவன் தன்னை சமமாக நிலை நிறுத்திக் கொள்ளவில்லை. அவன் அதிகமாக செய்தது எதுவும் செய்யாதது போன்றதுதான். அடைவதற்கான பேராசையினால், லட்சியத்தினால், அவன் எல்லைக்கே சென்று விட்டான்.

எப்போதெல்லாம் நீங்கள் மிகவும் செயல்படுபவனாக இருக்கிறீர்களோ, அப்போது இந்த உலகின் விஷயங்கள் அனைத்தும் ஒத்துவரும். ஆனால் அக உலகின் விஷயங்கள் நிகழாது போய் விடும். ஏனெனில் நீங்கள் மிகவும் பதற்றத்தோடும், தவிப்போடும் இருப்பதால் ஏற்றுக் கொள்வதற்க்குரிய நிலையில்லாமல் போய்விடுவீர்கள். செயலுக்கும் செயலற்ற நிலைக்கும் இடையில் சமனோடு யார் இருக்கிறார்களோ அவர்களால்தான் பெற்றுக் கொள்ள முடியும்.

சனி, 4 பிப்ரவரி, 2017

மனநிலை!!!

ஒரு முறை மாவீரன் நெப்போலியன் ரஷ்ய நாட்டின் மீது படையெடுத்தான். அப்போது தன் படை வீரர்களிடம் இருந்து அவன் பிரிந்துவிட்டான். அச்சமயம், ரஷ்ய போர் வீரர்கள் அந்தப் பக்கமாக வந்தனர். அவர்களை நெப்போலியன் கண்ட உடனே அங்கிருந்த கடைக்குள் புகுந்தான். அது ஒரு தையற்கடை. அந்த தையற்காரனிடம், தன்னை காப்பாற்றும்படி வேண்டினான். கடைக்காரனுக்கு ரஷ்ய வீரர்களைக் கண்டால் பிடிக்காது. எனவே, அவனுக்கு உதவி செய்ய சம்மதித்தான். அவன் நெப்போலியனை பெரிய பாயில் படுக்க வைத்தான். அதை சுருட்டி ஒரு மூலையில் வைத்தான்.

ரஷ்ய வீரர்கள் அவனுடைய கடைக்குள் புகுந்தனர். நெப்போலியன் அங்கு ஒளிந்து கொண்டிருக்கிறானா என்று கேட்டனர். தையற்காரன், "இங்கு யாரும் வரவில்லை'' என்றான். ரஷ்ய வீரரின் பார்வையில் மூலையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த பாய் பட்டது. உடனே தன் வாளை உருவி பாய்ச் சுருளைக்குள் சொருகினான். நல்லவேளையாக அது நெப்போலியன் உடம்பினுள் பாயவில்லை. பிறகு ரஷ்ய வீரர்கள் வெளியே சென்றனர். அச்சத்துடன் இருந்த நெப்போலியன் பாயிலிருந்து வெளியே வந்தான். தையல்காரனை நன்றி உணர்வோடு பார்த்தான்.


பிறகு தையற்காரனிடம், "நான் பிரான்ஸ் நாட்டின் பேரரசன். என்னைக் காப்பாற்றியதற்காக மூன்று வரங்கள் தருகிறேன். என்ன வேண்டும் கேள்'' என்றான். தையற்காரன் சரியான முட்டாள். "இக்கட்டடத்தின் கூரைப் பகுதி மழைக் காலத்தில் ஒழுகுகிறது. அதைச் சரி செய்ய வேண்டும்'' என்றான். ஆத்திரம் வந்தது நெப்போலியனுக்கு, "அது சரி செய்யப்படும். நீ நல்ல வரமா கேள்'' என்றான். 

"இந்தச் சாலையின் கீழ்க் கோடியில் இன்னொரு தையற்கடைக்காரன் உள்ளான். அவனால் என் பிழைப்பு கெடுகிறது. அவனை வேறு ஓர் இடத்திற்குப் போகும்படி செய்ய வேண்டும்'' என்றான். நெப்போலியனுக்கு அவனது முட்டாள்தனத்தை எண்ணி ஆத்திரம் பொங்கியது.
"சரி! அது நிறைவேற்றப்படும்! நீ எதைக் கேட்டாலும் என்னால் தர முடியும். நீ ஒரு பேரரசனிடம் கேட்கிறாய் என்பதை அறிந்து மற்றவர்களிடம் கேட்க முடியாததைக் கேள்'' என்றான் நெப்போலியன்.

"ரஷ்ய வீரர்கள் நீங்கள் ஒளிந்து கொண்டிருந்த பாயில் வாளைச் சொருகிய போது நீங்கள் எந்த மன நிலையில் இருந்தீர்கள்?'' என்றான். இதைக் கேட்டதும் கோபம் தலைக்கேறி, "ஏய் நீ ஒரு முட்டாள்! இந்தக் கேள்வியை எப்படி என்னிடம் கேட்கலாம். உன்னை தண்டிக்கப் போகிறேன்!'' என்று கத்தினான் நெப்போலியன்.

அச்சமயம் நெப்போலியனைத் தேடி அங்கு பிரெஞ்சு வீரர்கள் வந்தனர். அவர்களிடம், "இந்தத் தையற்காரனை சுட்டுக் கொல்லுங்கள்'' என்று கட்டளையிட்டான். உடனே வீரர்கள் தையற்காரனை வெளியில் இழுத்துச் சென்று சுவரின் முன்னால் நிற்க வைத்தனர். அப்போது தையற்காரனுக்கு உடல் வெலவெலத்தது. வியர்வைக் கொட்டியது. மனம் படபடத்தது. அவன் மன்னிப்பு கேட்கும் முன்னர் நெப்போலியன் அங்கிருந்து சென்றான்.


தையற்காரனை குறி வைத்து வீர்கள் "ஒன்று, இரண்டு'' என்று சொன்னார்கள். மூன்று சொல்லுவதற்குள், "நிறுத்து!'' என்ற குரல் கேட்டது.
அங்கு நெப்போலியனின் உதவியாளன் வந்தான். "பேரரசர் இவனை மன்னித்துவிட்டார். இவனை விட்டு விடுங்கள்'' என்று கூறி ஒரு துண்டு சீட்டை தையற்காரனிடம் தந்தான். அதில், "நான் எப்படிப்பட்ட மன நிலையில் இருந்தேன் என உனக்கு இப்போது புரிந்திருக்கும்!'' என்று எழுதியிருந்தது.

சந்தர்ப்பம் கிடைக்கும் போது  அதை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்ள தெரிய வேண்டும்.


வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

பாவ கணக்கு!!!

ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பலருக்கும் தானம் அளிப்பதில் பெரும் விருப்பமுடைய நல்ல மன்னன். அதிலும் குறிப்பாக வெளியூரில் இருந்து வரும் மக்களுக்கு அன்னதானம் செய்வதில் பெரும் விருப்பமுடையவன். தினந்தோறும் அதை மேற்கொள்பவன். ஒரு நாள் அதே போல அவன் அன்னதானம் செய்து கொண்டிருந்தான். அவன் தானம் செய்து கொண்டிருந்த இடத்துக்கு மேலே ஒரு கழுகு ஒரு பாம்பைக் கொன்று தன் அலகில் பிடித்தவாறு பறந்து கொண்டிருந்தது.

 மன்னன் உணவளிக்கும் பாத்திரத்தைக் கடந்த நேரத்தில் கழுகின் அலகிலிருந்த செத்த பாம்பின் வாயிலிருந்து ஒரு துளி கடுமையான விஷம் அந்தப் பாத்திரத்தில் இருந்த உணவுக்குள் விழுந்தது. சரியாக அந்த விஷம் இருந்த உணவைப் பெற்று உண்ட ஒரு வெளியூர்காரன் அதனால் இறந்து போனான். இறந்தவன் யமலோகத்தில் சித்திரகுப்தன் முன்பு கொண்டு செல்லப்பட்டான். சித்திரகுப்தனுக்கு அவன் இறந்ததற்கான கர்மவினையை யார்மேல் சுமத்தி அதற்கான தண்டனையை வழங்குவது என்று புரியவில்லை! 


பாம்பின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது இறந்து போயிருந்தது. கழுகின் மேல் குற்றமில்லை ஏனென்றால் அது தன் உணவை சுமந்து கொண்டு பறந்து கொண்டிருந்தது. சரி அடுத்தது மன்னன். மன்னன் தானம் கொடுக்கும் புண்ணிய மனம் படைத்தவன்! அவன் உணவில் விஷம் கலந்தது தெரியாமல்தானே அதை அந்த மனிதனுக்கு வழங்கினான். அப்படியானால் அந்தப் பாவம் மன்னனை எப்படி சேரும்??
குழம்பிப் போன சித்திரகுப்தன் யமதர்மனிடம் சென்று தன் சந்தேகத்தை கேட்டான். 

யமதர்மனும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின் “சித்திரகுப்தா! இதைப் பற்றி நீ பெரிதாக எண்ணாதே! இந்தக் கர்ம வினையின் தண்டனையை யாருக்கு வழங்கவேண்டுமென்று சிறிது காலத்தில் தானாகவே உனக்குத் தெரிய வரும்” என்றான். "சரி" என்று சித்திரகுப்தனும் திரும்பினான். சில நாட்கள் கழித்து, அதே நாட்டிற்கு நான்கு வெளியூர்காரர்கள் அரண்மனையைத் தேடி வந்து கொண்டிருந்தனர். வழி தெரியாமல் தேடினர். அங்கு பானை விற்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் அரண்மனைக்கு செல்லும் வழியைக் கேட்டனர். 


அந்தப் பெண்ணும் சரியான வழியை விரலை நீட்டிக் காட்டினாள். பின்பு, அவள் அந்த வெளியூர்காரர்களிடம், ”கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். இந்த மன்னன் வெளியூர்காரர்கள்களை சாகடிப்பது போலத் தெரிகிறது” என்றும் சொன்னாள். அந்தக் காட்சியைக் கண்ட சித்திரகுப்தன் தன் சந்தேகத்துக்கு விடை கிடைத்து விட்டதென்று மகிழ்ந்து அந்த பானை விற்கும் பெண் மேல் அந்தக் கர்ம வினையை ஏற்றி விட்டான்.

நமக்கு சம்பந்தம் இல்லாத, துன்பம் இழைக்காதவரைப் பற்றி, சரியான உண்மையை அறியாமல் இன்னொருவரிடம் பேசக்கூடாது. சிலருக்கு இது சுவராஸ்யமான விசயமாகும். ஆனால் அது பலருக்கு பல விதமான இன்னல்களை விளைவிக்கிறது என்று புரளி பேசுவோர் உணர்வதில்லை. 


வியாழன், 2 பிப்ரவரி, 2017

பணமும்... வாழ்க்கையும்...

பத்திரிக்கையில் வேலை செய்யும் ஏழை ஒருவன். அவனுக்கு ஒரு மனைவி, உடல் நலக்குறைவுடன் பேச முடியாத ஒரு குழந்தை. தனது  குழந்தைக்கு மருத்துவம் செய்யக்கூட அவனிடம் காசு இல்லை. பத்திரிக்கை அதிபரோ உதவவில்லை. ஒருநாள் அவனுக்கு அவசரமாக நூறு ரூபாயவது தேவைப்படுகிறது. நண்பர் 50 ரூபாய் கொடுக்கிறார். காரணம் ஏற்கனவே நிறைய வாங்கி விட்டான். 

அடுத்த நாள், “ குழந்தையிடம் காசு ஏதாச்சும் கொடுத்தீங்களா? “ என கேட்க்கிறாள் அவன் மனைவி. "என்னிடம் ஏது காசு? நான் கொடுக்கவில்லையே!" என்கிறான் அவன். குழந்தை கையில் நூறு ரூபாய் இருந்ததாக சொல்லி மனைவி பணத்தை அவனிடம் கொடுக்கிறாள். "எப்படி அந்த காசு வந்தது?" என அவர்களுக்கு புரியவில்லை. ஆனாலும், 'எப்படியோ காசு வந்தால் சரி' என நினைத்துக்கொண்டு அதை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.


இன்னொரு முறை 500 ரூபாய் தேவைப்படுவதாக புலம்புகிறான். அடுத்த நாள் பார்த்தால் , குழந்தை கையில் 500 ரூபாய் இருக்கிறது.
"இதெல்லாம் எப்படி வருகிறது?" என இருவருக்கும் புரியவில்லை. பழைய டீவியை மாற்றி எல் சி டி வாங்கினால் நன்றாக இருக்குமே என புலம்புகிறான். அடுத்த நாள் குழந்தை கையில் அதற்கு தேவையான பணக்கட்டு இருக்கிறது. தேவைப்படும்போதெல்லாம் காசு வருகிறது. குழந்தை கையில் யாராவது வைக்கிறார்களா என சோதித்துப் பார்க்கிறார்கள். ஒரு நாள் முழுக்க விழிப்பாக கவனிக்கிறார்கள். கண்டுபிடிக்க முடியவில்லை.  

இதற்கிடையில் , குழந்தைக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க கணவன் தாமதம் செய்வதை மனைவி கண்டிக்கிறாள். 'குழந்தை சரியாகி , பேச ஆரம்பித்தால், காசு எப்படி வருகிறது என சொல்லி விடுமோ?' என பயப்படுவதாக குற்றம் சாட்டுகிறாள். அதில் இருக்கும் உண்மை கணவனை அதிர்ச்சி அடைய வைக்கிறது. 


ஒரு கட்டத்தில் அந்த பத்திரிக்கை அதிபர் பத்திரிக்கை நடத்த முடியாமல் , இவனை நடத்த சொல்கிறார். அவனிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட நிபந்தனை விதிக்கிறான். அது ஏற்கப்படுகிறது. சில நாட்கள் கழித்து, தன் மனைவியின் விருப்பத்திற்காக குழந்தைக்கு வைத்தியம் பார்க்க முடிவு செய்கிறான் அவன். ஆனால், அந்த குழந்தையின் நோய்க்கு சிகிச்சை செய்ய அந்த ஊரில் டாக்டர்கள் இல்லை. கல்கத்தாவிற்கு போக வேண்டும். விமானத்தில் கிளம்ப அவனும், குழந்தையும் தயார் ஆகிறார்கள். வேண்டுமென்றே விமானத்தை தவற விடுகிறான். மனைவி திட்டுகிறாள். கடைசியில் ஒரு வழியாக கல்கத்தா செல்கிறான்.

டாக்டர் குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்து விட்டு , வெகு நேரம் கழித்து பேயறைந்த முகபாவத்துடன் வெளியே வருகிறார். "இத்தனை நாள் என்ன செஞ்சுக்கிட்டு இருந்தாய்? ஏன் முன்பே வரல?" என கடுமையாக திட்டுகிறார். "என்ன ஆச்சு?" பதறுகிறான் அவன். குழந்தை இறந்து வெகு நாட்கள் ஆகின்றன என்கிறார் டாக்டர். அந்த குழந்தை இறந்து ஒரு பண மெஷினாக மாறிவிட்டது. 



நாமும் அப்படித்தான் மாறி விடுகிறோம். வெகு சிலர்தான், சுயநலம் மறந்து பண மெஷினாக மாறாமல் மற்றவர்களுக்காக உழைக்கிறார்கள். வாழ்வதற்கு பணம் சம்பாதிக்கணுமேயன்றி, பணத்தை வாழ்க்கையாக பார்க்கக் கூடாது. பணத்தை விட அன்பு, பாசம், கருணை, மனிதாபிமானம், இரக்கம் போன்ற குணங்களுக்கு மதிப்பு அதிகம். 


புதன், 1 பிப்ரவரி, 2017

எண்ணங்களின் சக்தி!!!

ஒருநாள் அரசனும், மந்திரியும் நகர்வலம் வந்து கொண்டிருந்தார்கள். நகரின் ஒரு குறிப்பிட்ட கடையின் அருகில் வந்ததுமே, "மந்திரியாரே! ஏனோ தெரியவில்லை. இந்தக் கடைக்காரனை கொன்றுவிட வேண்டும் என்று எண்ணம் தோன்றுகிறது. ஆனால் இவன் எனக்கு யாரென்றுகூடத் தெரியாது; பேரும் அறிய மாட்டேன்!'' என்றான். மந்திரி வியப்புற்று யோசிக்கும்போதே கடையைக் கடந்து விட்டிருந்தனர் இருவரும். மறுநாள், மந்திரி மட்டுமே, மாறுவேடத்தில் அந்தக் குறிப்பிட்ட கடைக்கு வந்தான். 



அந்த கடைக்காரனிடம் சாதாரணமாகப் பேசினான். "எப்படி வியாபாரம் நடக்கிறது?" என்று கடைக்காரனிடம் யதார்த்தமாய் கேட்க, உரிமையாளனும், வருத்தத்துடன், "என் கடையில் வியாபாரமே இல்லை! நிறைய பேர் வருகிறார்கள். என் கடையில் உள்ள சந்தனக் கட்டைகளை முகர்ந்து நல்ல மணம் என்று பாராட்டுகிறார்கள். ஆனால் யாரும் வாங்குவது மட்டுமில்லை... 'சந்தனக்கட்டைகளை யார் வாங்க முடியும், அரச குடும்பம் தவிர...' என்கின்றனர். ஒருவேளை இந்த நாட்டின் மன்னன் இறந்தால், இல்லை அரண்மனையில் யாரேனும் மரணித்தால், என் சந்தனக் கட்டைகளை பிணத்தை எரிக்க வேண்டி அதிகம் வாங்குவர். நல்ல விலைக்கு விற்பேன். என் கஷ்டமும் தீரும்'' என்றான். 

இதைக் கேட்டதுமே, அமைச்சருக்கு முதல் நாள் அரசன் தன்னிடம் சொன்னதற்கான காரணத்தை உணர்ந்தான். இந்தக் கடைக்காரனின் தீய எண்ணமே, மன்னனுடைய மனதில் எதிர்மறை அதிர்வுகளை ஏற்படுத்தி, அவனை அறியாமலேயே 'கொல்ல' தூண்டியுள்ளது என்று உணர்ந்தான். இதை சுமூகமாகத் தீர்க்க நினைத்த மந்திரி, கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலை கொடுத்து வாங்கினான். 



அவற்றை, அரசனிடம் எடுத்துச் சென்று இதை, அந்தக் கடைக்காரன், பரிசுப் பொருளாகத் தந்தனுப்பியதாகச் சொல்லி அரசனிடம் அந்த மரத்துண்டங்களைத் தந்தான். நல்ல மணம் வீசிய அந்த சந்தன மரத்துண்டுகளைப் பார்த்த அரசன், 'இவனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏன்தான் தனக்கு வந்ததோ?' என்று வெட்கப்பட்டான். அரசன் சில பொற்காசுகளை மந்திரி மூலம் அந்தக் கடைக்காரனுக்கு அனுப்பி வைத்தான். 

மந்திரி மூலம் வந்த பொற்காசுகளைப் பெற்றவன், 'இத்தனை நல்ல மன்னனைத் தன் சுயநலத்துக்காக செத்துப் போக வேண்டும். அவன் அரண்மனையில் மரணம் நிகழ வேண்டும் என்று மிகக் கொடூரமாய் எண்ணினோமே' என்று வெட்கி மனம் குன்றினான். இறுதியில் மனந்திருந்தி தீய எண்ணங்களை விட்டொழித்தான். சில நாள்கள் கழித்து அதே கடையருகே உலா வருகையில் அரசர், கடைக்காரன் இருவர் மனத்திலும் நல்ல நட்பான எண்ணமும், புன்னகையும் மலர்ந்தது.

எண்ணங்கள் வலுவானவை. நம்மை வழி நடத்துவையும் அவையே. ஒருவர் கொண்டிருக்கும் எண்ணங்களே, அவர் நேர்மறையானவரா அல்லது எதிர்மறையானவரா என்பதை உறுதி செய்யும். நாம் பேசும் வார்த்தைகளுக்கு மட்டுமில்லை, மனதில் தோன்றும் எண்ணங்களுக்கும் கூட பிறரை  காயப்படுத்தும் சக்தி உள்ளது.