எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 11 செப்டம்பர், 2016

சொர்க்கமா? நரகமா?

ஒரு அரசியல்வாதி சாகும் தருவாயில், "நான் செய்த
பாவங்களுக்கு நரகத்திற்குத்தான் செல்ல
வேண்டியிருக்கும்" என நினைத்தார். ஆனால் அவர் இறந்தவுடன் சொர்க்கத்திற்கு
அனுப்பப்பட்டார். அவருக்கு ஒரே வியப்பு. ஏதோ தவறு
நடந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அங்கிருந்தவர்களிடம்,"வாழ்நாள் முழுவதும் நான்
நல்ல செயல்கள் எதுவும்
செய்ததில்லை. எப்படி சொர்க்கம் வந்தேன்?" என்று கேட்டார்.

அவர்கள்,"வாழ்நாள்
முழுவதும் நீ நரகத்தில் இருந்துவிட்டாய். அதனால்
உனக்கு சொர்க்கம்
அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் நீ இருந்தது ஒரு நவீன
நரகம். இங்கு எங்கள் நரகம் எல்லாம் பழமையாகவே இருக்கிறது. இன்னும் இங்கே
பழைய தண்டனைகளையே
அளித்துக் கொண்டு இருக்கிறோம். பூமியில் நீங்கள்
அதையெல்லாம் நவீனமாக
மாற்றிவிட்டீர்கள். உன்னை நரகத்தில் போட்டால், 'இது தான்
நரகமா?' என்று எங்களைப்
பார்த்து சிரிப்பாய். அதனால் கடவுளுக்கே என்ன செய்வது என்று தெரியாமல் உன்னை சொர்க்கத்திற்கு அனுப்பச் சொல்லிவிட்டார்" என்றார்கள்.

மக்கள் இன்னும் நரகம் எங்கோ இருக்கிறது என்று நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள். நாம் வாழ்வதே நரக வாழ்க்கை தான். இதை விடக் கொடிய நரகம் இன்னொன்று இருக்க முடியாது.

ஆனால் நாம் வாழும் இடத்தை சொர்க்கமாக்குவதும் நம் கையில் தான் உள்ளது.