எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

இலக்கை நோக்கி

இந்தியர்களின் பாரம்பரிய மிக்க கலைகளில் ஒன்றான வில் வித்தையை கற்க, வெளிநாட்டுக்காரர் ஒருவர் மிகுந்த ஆவல் கொண்டார். வில் வித்தையில் சிறந்து விளங்கும் குரு ஒருவரிடம் வந்து, "எனக்கு வில் வித்தையை கற்றுக் கொடுக்க முடியுமா?" எனக் கேட்டார்.

"என்னை நன்கு கவனித்து வில் வித்தையை கற்றுக் கொள். நீ எவ்வளவு ஆழமாக கவனிக்கிறாய் என்பதைப் பொறுத்தது நீ கற்றுக் கொள்வது" என்று குரு சொன்னார்.

முதல் நாள், "இலக்கை குறி வைத்து அம்பு எய்வது எப்படி?" என்பதை செய்து காட்டினார். பிறகு மாணவர்களை அழைத்து முயற்சி செய்ய சொன்னார். ஆனால் அந்த வெளிநாட்டுகாரருக்கு குறி தப்பிக் கொண்டே இருந்தது. பல நாட்கள் குரு செய்வதைப் பார்த்து அப்படியே செய்தாலும் குறி தவறவே செய்தது.

ஒருநாள் அவன் குறி தவறாமல் அம்பு எய்திவிட்டான். அவனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. குருவிடம் சென்று, "குருவே, நான் வில் வித்தையை கற்றுவிட்டேன்" என்று கூறி வில்லையும் அம்பையும் எடுத்து குறி பார்க்க தொடங்கினான். குரு, "நீ இன்னும் தேர்ச்சி பெறவில்லை" எனக் கூறினார்.

அம்பு எய்வதற்கு முன்பே ஏன் குரு அவ்வாறு கூறினார் என்று அவன் யோசித்தான். கடைசியில் தனக்கு வில் வித்தை கற்கும் திறமை இல்லை என முடிவெடுத்து அங்கிருந்து கிளம்பினான். புறப்படுவதற்கு முன்னால் குருவிடம் சென்று அவர் சொல்லிக் கொடுக்கும் விதத்தை உற்று நோக்கினான். இதுவரை கவனித்திராத ஒன்றை அப்போது பார்த்தான்.

குருவிடம் சென்று, "இப்போது நான் வில் வித்தையை கற்றுவிட்டேன்" எனக் கூறி, வில் அம்பை எடுத்து குறி பார்க்க ஆரம்பித்தான். அம்பு சரியாக இலக்கில் பாய்ந்தது. இதை கவனித்த குரு, "நீ இப்போது தேர்ச்சி பெற்றுவிட்டாய்" என்றார்.

இலக்கை நோக்கி சரியாக அம்பை எய்வதை விட, இலக்கை நோக்கி வைக்கும் குறி மிக முக்கியமானது என்பதை உணர்ந்தான் அந்த வெளிநாட்டுக்காரன். இலக்கின் மீது தெளிந்த மனதோடு குறி வைப்பதே வில் வித்தை கலை.

இதே போல், நம் வாழ்க்கையிலும் பல இலக்குகள் இருக்கலாம். நாம் தெரிந்து கொள்ள வேண்டியது : நம் இலக்குகளை எந்தச் சூழ்நிலையில் அடைய முயல்கிறோம்? இலக்கை அடைய நாம் அமைதியான, மன ஓய்வுடன் இருக்கிறோமா? என்பதைத்தான்.