எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

தேவை அறிவுரையா? அறிவா?

ஒரு ஊரில் இரக்க குணம் மிகுந்த மனிதன் ஒருவன் வாழ்ந்து வந்தான். உதவி என கேட்காதவர்களுக்கு கூட ஓடிச் சென்று உதவுவான். ஒருநாள் கடைத்தெருவில், பார்வையற்ற ஒருவன் வழி தெரியாமல் தவிப்பதை பார்த்தான். அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்று, தன்னுடன் சில நாட்கள் தங்கும்படி வேண்டினான்.

பார்வையற்றவனும் அதற்கு சம்மதித்து, அவனோடு தங்கினான். சில நாட்கள் கழிந்தன. பார்வையற்றவனுக்கு தொடர்ந்து அங்கே தங்குவதற்கு சங்கடமாய் இருந்தது. தன்னை அழைத்து வந்தவனிடம் தான் கிளம்புவதாக கூறினான். அவன், "இன்னும் சில நாட்கள் தங்கலாமே!" என்றான். பார்வையற்றவன், "இல்லை ஐயா! நான் இங்கு தங்கினால் உங்களுக்கும் சிரமம். எனக்கும் சோம்பல் வந்திடும். நான் சென்று என் பிழைப்பை பார்க்கிறேன்" என்றான்.

அவனது பேச்சு இரக்க குணம் கொண்டவனை மெய்சிலிர்க்க வைத்தது. அவன், "சரி, இப்போது இருட்டி விட்டது. அதனால் நாளை காலை விடிந்ததும் புறப்பட்டுச் செல்லுங்கள்" என்றான். அதைக் கேட்ட பார்வையற்றவன், "நான் பார்வையற்றவன். இரவுக்கும் பகலுக்கும் எனக்கு என்ன வேறுபாடு தெரியப்போகிறது?" எனக் கேட்டான்.

அவனது பேச்சைக் கேட்டு வியந்தவன், "இந்த விளக்கை மட்டுமாவது உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்" என்றான். "கண் பார்வை இல்லாதவனுக்கு இந்த விளக்கால் மட்டும் என்ன நன்மை ஏற்படப் போகிறது?" எனக் கூறி விளக்கை வாங்க மறுத்தான் பார்வையற்றவன்.

அதைக் கேட்ட இரக்க குணம் படைத்தவன், "இந்த விளக்கால் உங்களுக்கு எந்த பயனும் இல்லாமல் போகலாம். ஆனால், உங்கள் எதிரே வருபவர்களுக்கு நீங்கள் வருவது தெரியும் அல்லவா?" எனக் கூறி விளக்கை அவனிடம் கொடுத்து அனுப்பினான். அதற்கு மேலும் மறுக்க முடியாமல் விளக்கை எடுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான்.

அந்த ஊரைக் கடந்து சிறிது தூரம் சென்றிருப்பான். எதிரில் வந்த ஒருவன் பார்வையற்றவன் மீது மோதி கீழே விழுந்தான். "யாரது? கண் தெரியாமல் என் மீது மோதியது?" எனக் கத்தினான் பார்வையற்றவன். "நான் நேராக தான் வந்தேன். நீங்கள் தான் என் மீது மோதிவிட்டீர்கள்" என்றான் மற்றொருவன்.

பார்வையற்றவன், "எனக்குத்தான் கண் தெரியாது. உங்களுக்கும் கூடவா கண் தெரியாது?" என்றான். எதிரே வந்தவன், "நண்பரே! இந்த நள்ளிரவு இருட்டில் எனக்கு மட்டும் எப்படி வெளிச்சம் தெரியும்?" என வினவினான்.

"நீ கூறுவது சரிதான்! ஆனால் என் கையில் உள்ள விளக்கு கூடவா உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை?" எனக் கேட்டான். அவனது கையில் உள்ள விளக்கை பார்த்து விட்டு, "விளக்கு ஒன்றை நீங்கள் கையில் வைத்திருக்கிறீர்கள். ஆனால் அது அணைந்து உள்ளதே!" என்றான்.

அது கேட்டு கோபம் தணிந்த பார்வையற்றவன், "தவறு என்னுடையதே! நாம் அனைவரும் அவரவர் சுய அறிவை பயன்படுத்த வேண்டும். இரவல் அறிவுரையால் எந்த பயனும் இல்லை" எனக் கூறி தன் கையிலிருந்த விளக்கே தூக்கி எறிந்துவிட்டு கைத்தடியை ஊன்றியவாறு நடக்கத் துவங்கினான்.