எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 1 செப்டம்பர், 2016

நல்ல ஈகோ... கெட்ட ஈகோ...

பிரம்மச்சாரி ஒருவன் பூனை ஒன்றை ஆசையாக வாங்கினான். அது மிகவும் துறுதுறுவென சுற்றித் திரிந்தது. அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என யோசித்தான்.

அப்போது அவனுக்கு நன்கு பழக்கப்பட்ட யோகி ஒருவரின் நினைவு வந்தது. உடனே பூனையை தூக்கிக்கொண்டு அந்த யோகியிடம் சென்றான்.

பூனையின் நடவடிக்கைகளைப் பார்த்த யோகி, "இது மிகவும் தந்திரமான பூனையாக இருக்கிறது. ஆகவே இதற்கு ஈகோ எனப் பெயர் வை" என்றார். யோகியின் யோசனைப்படி அந்தப் பூனைக்கு ஈகோ என்றே பெயரிட்டான்.

ஒரு சில மாதங்கள் கடந்தன. ஈகோவின் ஆட்டம் அதிகரித்து விட்டது. அவன் தூங்கும் நேரம் வயிற்றில் அமர்ந்து கத்தியது. அவன் கைகளைப் பிராண்டியது. ஓயாமல் கத்திக் கொண்டே அவனைச் சுற்றிச் சுற்றியே வந்தது.

எப்பொழுதும் அமைதியான சுழலில் வாழ்ந்து பழகிய அவனால், இதன் அட்டகாசத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. தனக்கு மனைவி இருந்தால் கூட இந்த அளவு கொடுமை செய்ய மாட்டாள் என நினைக்கும் அளவு துன்பத்தை அனுபவித்துவிட்டான் அவன்.

கடைசியில் பொறுமையை இழந்து, யோகியிடம் சென்று, "ஈகோவால் எனக்கு மிகுந்த தொல்லையாக உள்ளது" எனக் கூறினான். அவர், "அதை தூரமாக சென்று விட்டுவிடு" என்றான்.

அவன், "நான் விட்டாலும் அது மீண்டும் என்னிடமே வந்துவிடுகிறது" என்றான். யோகி, "அப்படியானால் அடர்ந்த காட்டிற்குள் சென்று விட்டுவிடு" என்றார்.

அவனும் பூனையை தூக்கிக் கொண்டு காட்டிற்கு சென்றான். நடுகாட்டிற்கு சென்ற பிறகு தான் பாதை மாறி வந்ததை உணர்ந்தான். அடர்ந்த காடு என்பதால், அவனுக்கு திரும்பும் வழி தெரியவில்லை; மிருகங்களை நினைத்து பயமும் உண்டானது.

கடைசியில், அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. பூனையை கீழே இறக்கி விட்டான். அது சரியான பாதையில் ஓடத் தொடங்கியது. அதைப் பின்பற்றிக் கொண்டே வீட்டிற்கு சென்றுவிட்டான். மறுநாள் யோகியிடம் சென்று காட்டில் நடந்ததைக் கூறினான்.

அதைக் கேட்ட யோகி சிரித்துக் கொண்டே, "உன் பூனைக்கு ஈகோ என்ற பெயர் பொருத்தமாக உள்ளது. மனதில் உள்ள ஈகோவும் இப்படித் தான் மனிதர்களை ஆட்கொண்டு இருக்கிறது. அவர்களே அதை அழிக்க முயன்றாலும் முடிவதில்லை. சில சமயம் அது மனிதர்களைத் துரத்துகிறது; சில சமயம் மனிதர்கள் அதைத் துரத்தும் நிலைக்கு ஆளாகிறார்கள். இந்த பூனை ஈகோவினால் சில நன்மைகள் நேரலாம். ஆனால், மனதில் உள்ள ஈகோ என்னும் குணத்தால் துன்பத்தை தவிர வேறு எதுவும் ஏற்படப் போவதில்லை" என்றார்.