எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

கோபத்தை வெளிப்படுத்துங்கள்

மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர் ஒருவருக்கு வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செய்ய வேண்டியிருந்தது. விமான நிலையத்திற்கு வந்து விமானத்தின் வருகைக்காக காத்திருந்தார்.

அப்போது விமானம் வர ஒரு மணி நேரம் தாமதமாகும் என்ற அறிவிப்பு வந்தது. அதற்கு மார்க்கெட்டிங் மேலாளர் "நல்லது"  என்றார். அதைக் கேட்ட அருகிலிருந்த சக பயணி ஒருவர், "விமானம் தாமதமாக வருவதற்குப் போய் நல்லது என்கிறீர்களே!" என்றார்.

அந்த மேலாளர், "எனக்கு வானிலை மோசமாக இருந்தாலோ, இயந்திர கோளறாக இருந்தாலோ விமானத்தில் பயணம் செய்வது பிடிக்காது. ஒருவேளை நாம் பயணம் செய்யப் போகும் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் அல்லது வானிலை மோசமாக இருக்கலாம். அதன் காரணமாகவே விமானம் தாமதமாக வர நேர்ந்திருக்கிறது. எனவே தான், நான் நல்லது எனக் கூறினேன்" என விவரித்தார்.

அவர் பேச்சைக் கேட்ட சக பயணி அமைதியடைந்தார். ஒரு மணி நேரம் கழிந்த பிறகு, விமானம் வர இன்னும் இரண்டு மணி நேரமாகும் என மற்றொரு அறிவிப்பு வந்தது. இப்போது அந்த மார்க்கெட்டிங் மேலாளர் "மிக்க நன்று" என்றார்.

சக பயணி, "இப்போதும் உங்களால் எப்படி அமைதியாக இருக்க முடிகிறது? ஏன் மிக்க நன்று என சொன்னீர்கள்?" எனக் கேட்டார்.

"நான் வெளிநாட்டில் என் அலுவலகம் சார்பாக ஒரு கலந்தாய்வில் பங்கேற்கப் போகிறேன். அதில் நான் பேச வேண்டியவற்றை படித்து பயிற்சி செய்ய இப்போது எனக்கு நேரம் கிடைத்துள்ளது. அதனால் தான் மிக்க நன்று எனக் கூறினேன்" என்றார் மார்க்கெட்டிங் மேலாளர்.

சற்று நேரத்திற்குப் பிறகு, மீண்டுமொரு அறிவிப்பு வந்தது. விமானம் வர இன்னும் தாமதமாகும் என்று. பயணிகள் அனைவரும் வெறுப்பின் உச்சத்தில் மிகுந்த கோபத்தில் இருந்தனர். சக பயணி மேலாளரிடம் வந்து, "இப்போதும் உங்களுக்கு கோபம் வரவில்லையா?" என்றார்.

மேலாளர், "அட போங்க சார்! முதல் இரண்டு அறிவிப்பு வந்த போது நான் நல்லது எனக் கூறியதே என் கோபத்தை குறைப்பதற்காக கையாண்ட யுக்தி தான்" என்றார் சலிப்புடன்.

நாம் கோபத்தில் இருக்கும் போது வெளியிடும் வார்த்தைகள் நம்மை மட்டுமின்றி நம்மை சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும் ஆற்றல் கொண்டது.

கோபமாக இருக்கும் நேரத்தில், உங்கள் கோபத்தை வெளிப்படுத்த இழி சொற்களைப் பேசாமல் எதிர்மறை வார்த்தைகளை உபயோகிக்க முயலுங்கள்.
இதன் மூலம் உங்களால் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கலாம்.