எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

அன்பின் அடையாளம்

பள்ளி ஒன்றில், ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அன்பு சம்மந்தப்பட்ட தலைப்பை பற்றி ஆசிரியரும் மாணவர்களும் விவாதித்தனர். அப்போது வகுப்பிலிருந்த மாணவன் ஒருவன்,  "நம் மீது அதிக பாசம் கொண்டவரை நாம் எப்படி அடையாளம் கண்டு கொள்வது?" என்று ஒரு கேள்வியை எழுப்பினான்.

ஆசிரியர், "உண்மையான பாசத்தை நீ அறிந்துக் கொள்ள விரும்புகிறாயா? சரி முதலில் நான் சொல்வதைச் செய். பிறகு அதன் அர்த்தத்தை நீயே புரிந்துக் கொள்வாய்.

நம் பள்ளி மைதானத்திற்குச் செல். அங்கு இருக்கும் புற்களை கீழ் நோக்கி பார்த்தவாரே நட. அதில் மிக அழகாக காட்சியளிக்கும் ஒரு புல்லை தேர்வு செய்து கொண்டு வா. ஆனால் நீ நடந்து முடித்த பாதையை திரும்பி பார்க்காதே. உன் முன்னால் இருக்கும் புல்லை மட்டுமே தேர்வு செய்து என்னிடம் கொண்டு வர வேண்டும்" என்றார்.

சில மணி நிமிடங்கள் கழித்து, மீண்டும் வகுப்பறைக்குள் நுழைந்தான் அம்மாணவன். ஆனால் அவன் கையில் எந்த ஒரு புல்லும் இல்லை.
ஆசிரியர், "நான் கொண்டு வரச் சொன்ன புல் எங்கே?" எனக் கேட்டார்.

மாணவன், "நான் புற்களை பார்த்தபடியே நடந்து கொண்டிருந்தேன். என் கண்களில் நிறைய அழகான புற்கள் தென்பட்டன. ஆனால் நீங்கள் கேட்டதோ மிக அழகான புல். ஆகையால் நான் தொடர்ந்து நடந்தேன். என் முன்னால் இருந்ததை விட, பின்னால் இருந்த புற்கள் சில அழகாக இருந்தன. ஆனால் நிபந்தனை படி நான் பின் நோக்கிப் பார்க்கக் கூடாது. மைதானம் முழுவதும் பார்த்தும் என்னால் எந்தப் புல்லையும் தேர்வு செய்ய முடியாமல் போனது" என்றான் சோகத்துடன்.

"அதுதான் நீ கேட்ட கேள்விக்கான பதில். நம் மீது அன்பு காட்டும் ஒருவர் நம் அருகில் இருக்கும் சமயத்தில் நாம் அவரை விட சிறந்த ஒருவரை தேடக் கூடாது. அவர்களின் பாசத்திற்கு மரியாதை செய்ய வேண்டும். வாழ்க்கையை பின் நோக்கிப் பார்த்து பாசத்தை எடை போட கூடாது.

இறந்த காலத்தை நாம் சரி செய்ய இயலாது. ஆனால், நிகழ்காலத்தில் இருப்பவரோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் சரி செய்து கொள்ள முடியும். அவர்களது பாசத்தை நிலைக்கச் செய்ய முடியும். நம் மீது அன்பு செலுத்த பலர் இருந்தாலும், நிகழ்காலத்தில் இருப்பவரே சிறந்தவர். நம் வாழ்க்கையின் சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டு நம் மீது பாசம் காட்டுபவருக்கு, நேர்மையாக நடந்துக் கொள்வதே சிறந்த குணமாகும்" என்றார் ஆசிரியர்.