எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 24 செப்டம்பர், 2016

உன்னை அறிந்தால்...

இரவு ஒன்பது மணிக்கு டாக்டரிடம் அப்பாயிண்ட்மென்ட் வாங்கியிருந்த போதிலும், அந்த கிளினிக்கிற்கு அவர் மாலை ஆறு மணிக்கெல்லாம் வந்துவிட்டார். ஒரு மூலையின் ஒதுக்குப்புறமான நாற்காலியில் அமர்ந்திருந்தார். பல நோயாளிகள் வருவதும், போவதுமாக இருந்த இடத்தில் அவர் அமைதியின் உருவமாக எவ்வித பரபரப்புமின்றி இருந்தார். சற்று உற்று கவனித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அவர் அமைதியாக இல்லை, சோகமாக இருக்கிறார் என்று. 

அவரை கவனித்தவர்கள் அவர் உட்கார்ந்திருக்கும் விதத்தைப் பார்த்து, 'அவருக்கு ஏதோ வியாதி உள்ளது போல, அதனால் தான் வேதனையுடனும், மனச்சோர்வுடனும் இருக்கிறார்' என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். மெதுமெதுவாக கூட்டம் குறைந்து போனது. கடைசியில் அவர் மட்டும் அமர்ந்திருந்தார். டாக்டரின் அழைப்பு மணி அடித்தது. மெதுவாக எழுந்து, தளர்ந்த நடையுடன் டாக்டரின் அறையை நோக்கி சென்றார்.

டாக்டரும் பகலில் இருந்து பல நோயாளிகளை கவனித்து வந்ததால் மிகுந்த களைப்புடன் இருந்தார். ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், புன்சிரிப்புடன் அவரை வரவேற்று பரிசோதிக்க தொடங்கினார். இடையிடையே பல கேள்விகளை கேட்டார். எல்லா பரிசோதனைகளும் நிறைவடைந்த பிறகு, டாக்டருக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது.


வந்தவருக்கு உடலில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. மனச்சோர்வின் காரணமாகவே இப்படி நோயாளி போல் காட்சியளிக்கிறார். இதற்கு மருந்து அவர் மனதை அமைதிபடுத்துவதை தவிர வேறில்லை என்பதை உணர்த்திய பின்பு, மேலும் தொடர்ந்தார்.
"முதலில் நீங்கள் உங்கள் மன இறுக்கத்தை போக்க வேண்டும். அதற்கு பக்கத்தில் உள்ள தியேட்டரில் பட்ஸ்பென்சர் என்னும் புதிய நகைச்சுவை நடிகர் நடித்த திரைப்படத்தை சென்று பாருங்கள். நன்றாக சிரித்தீர்கள் என்றாலே விரைவில் குணமடைந்து விடுவீர்கள்" என்றார்.

அதற்கு வந்தவர், "டாக்டர், அந்த பட்ஸ்பென்சரே நான்தான்" என்றார் பரிதாபமாக.

உன்னை நீ ரசிக்க பழகவில்லை என்றால், வேறு எந்த கலையையும் ரசிக்க முடியாது - நாஸ்ட்ராடாமஸ்