எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 8 செப்டம்பர், 2016

மனதின் மந்திரம்

கடவுளிடம் ஒருவன் பல ஆண்டு காலம் தவமிருந்து வணங்கி வந்தான். ஒருநாள் கடவுள் அவன் எதிரே தோன்றினார். அவன், "கடவுளே! நான் எதைக் கேட்டாலும் அது உடனே நிறைவேறும்படி வரம் தாருங்கள். இதற்காகவே நான் இத்தனை ஆண்டுகள் தவமிருந்தேன்" என்றான்.

கடவுள் அவனிடம் ஒரு அழகான சிப்பியைக் கொடுத்து, "இந்த சிப்பியிடம் எதை வேண்டுமானாலும் கேள். உடனே நீ கேட்டது கிடைத்துவிடும்" எனக் கூறி மறைந்தார்.

சிப்பியை பெற்றுக் கொண்ட அவன், அதை சோதித்துப் பார்த்தான். நல்ல சாப்பாடு கேட்டான். கிடைத்தது. மிகப் பெரிய மாளிகை ஒன்றைக் கேட்டான். கிடைத்தது. தனக்கு சேவை செய்ய சேவர்களை கேட்டான். உடனே கிடைத்தார்கள். அன்றிலிருந்து அவன் வெகு ஆடம்பரமாக வாழத் தொடங்கினான்.

ஒருநாள் சந்நியாசி ஒருவர் தங்குவதற்கு இடம் கேட்டு அவன் மாளிகைக்கு வந்தார். அவனும் இடம் கொடுத்தான். இரவில் இருவரும் சாப்பிட்டு விட்டு பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது சந்நியாசி அவனிடம், "உன்னிடம் உள்ள சிப்பியைப் பற்றி எனக்கு தெரியும். ஆனால் அதெல்லாம் ஒன்றுமில்லை. நானும் பல வருடங்கள் தவமிருந்து கடவுளிடம் வரம் பெற்றேன். அதன் பயனாக கடவுள், எனக்கும் ஒரு பெரிய சிப்பியை கொடுத்தார். நாம் எதைக் கேட்டாலும் இரண்டு மடங்கு தரும் சக்தி வாய்ந்தது" என்றார்.

அவனிடம் உள்ள ஒரு சிப்பியிலேயே இரண்டாவது முறை கேட்டால் கிடைத்துவிடும். ஆனால், பேராசை என்னும் பூதத்தின் பிடியில் சிக்கியதால் அதையெல்லாம் யோசிக்கும் அறிவு அவனுக்கு வேலை செய்யவில்லை.

சந்நியாசியிடம், "நாம் சிப்பிகளை மாற்றிக் கொள்வோமா? நீங்களோ சந்நியாசி. எதுவும் வேண்டாம் என்று துறவை மேற்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு சிறிய சிப்பியே போதுமானது தானே" என்றான்.

அதற்கு அந்த சந்நியாசியும் சம்மதித்தார். இருவரும் சிப்பிகளை மாற்றிக் கொண்டார்கள். மறுநாள் காலையில், அவன் அந்த பெரிய சிப்பியிடம் "எனக்கு ஒரு லட்சம் ரூபாய் வேண்டும்" எனக் கேட்டான். சிப்பியோ, "அது என்ன ஒரு லட்சம்? நான் உனக்கு இரண்டு லட்சம் தருகிறேன்" என்றது.

அவனுக்கு ஒரே ஆனந்தம். "அதுவும் நல்லது தான். இரண்டு லட்சமே தா" என்றான்.

"அது என்ன இரண்டு லட்சம்? நான் உனக்கு நான்கு லட்சம் தருகிறேன்" என்றது சிப்பி.

அவனுக்கு சற்று குழப்பம் ஏற்பட்டது. "சரி, நான்கு லட்சம் தா" என்றான்.

சிப்பி, "அது என்ன நான்கு லட்சம்? நான் உனக்கு எட்டு லட்சம் தருகிறேன்" என்றது.

இப்படி பேசிக் கொண்டே இருந்ததே தவிர எதுவும் தரவில்லை. அவன் சிப்பியை எடுத்துக் கொண்டு சந்நியாசியிடம் ஓடினான். அவரோ விடிவதற்கு முன்பே அங்கிருந்து கிளம்பி போய்விட்டார்.

நம் மனமும் இந்த பெரிய சிப்பியை போல் தான் செயல்படும். ஒரு செயலைச் செய்ய முற்படும் போது, மனம் "நாளை செய்து கொள்ளளாம்" என்று சொல்லும். நிறைய வாக்குறுதிகள் தரும்.

ஆனால் அந்த 'நாளை' என்பது வருவதே இல்லை. மெதுமெதுவாக நம்பிக்கையே வாழ்க்கை ஆகி விடுகிறது. அந்த நம்பிக்கையும் நிறைவேறுவதில்லை.