எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 19 செப்டம்பர், 2016

தற்காலிகமா? நிரந்தரமா?

அவன் ஒரு வைர வியாபாரி. தன்னிடம் உள்ள வைரங்களை விற்று விட்டு, பாலைவனத்தின் வழியாக பயணம் செய்து கொண்டிருந்தான். ஒட்டகத்தின் மேல் அமர்ந்து, பணப்பையை ஒட்டகத்தின் வயிற்றுப் பகுதியில் கட்டியிருந்தான்.

பாலைவனத்தில் ஒட்டக சவாரி செய்வதில் ஒரு பிரச்சனை இருக்கிறது. ஒட்டகம் திடீரென ஓர் இடத்தில் அமர்ந்துவிடும். அதை எழுப்பி மீண்டும் பயணத்தை ஆரம்பிப்பது என்பது சிரமமான காரியம். அப்படித்தான் அவன் ஒட்டகமும், பாலைவனத்தின் நடுவில் திடீரென நடப்பதை நிறுத்துவிட்டு உட்கார்ந்துவிட்டது.


வைர வியாபாரி ஒட்டகத்தை நடக்க வைக்க நிறைய முயற்சிகளை மேற்கொண்டான். ஆனால் அந்த ஒட்டகம் எழுந்திரிப்பதாக இல்லை.  திருடர்கள் யாரேனும் வந்து தன்னிடமுள்ள பணத்தை திருடிவிடுவார்களோ என்ற பயம் ஒரு பக்கம். இன்னும் சிறிது நேரத்தில் இருட்டி விடும்.
பாலைவனத்தில் இரவு நேரங்களில் தட்பவெட்பம் தலைகீழாக மாறிவிடும் என்பது அவனுக்கு தெரியும். 'குளிரில் உறைந்து இறந்து விடுவோமோ?' என்ற பயம் ஒரு பக்கம் எழுந்தது.

அவன் 'என்ன செய்வது?' என தெரியாமல் அல்லாடிக் கொண்டிருந்தான். அப்போது வழிப்போக்கன் ஒருவன் அந்தப் பக்கமாக வந்தான். வியாபாரியிடம், "உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா?" எனக் கேட்டான். முதலில் தயங்கியவன், பிறகு வேறு வழியின்றி அவனிடம் ஒட்டகத்தைப் பற்றி கூறினான்.

அவன், "இவ்வளவுதானா? எனக்கு  ஒரு மந்திரம் தெரியும். அந்த மந்திரத்தை சொன்னால், ஒட்டகம் எழுந்து நடப்பது என்ன? ஓடவே செய்யும். ஆனால்..." என இழுத்தான் வழிப்போக்கன். வியாபாரிக்கு அவன் பணத்திற்காகத் தான் அவ்வாறு இழுக்கிறான் என்பதை புரிந்தது. இக்கட்டான சூழ்நிலையில் இருந்ததால், "உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்" என்றான். வழிப்போக்கன், "எனக்கு நீங்கள் ஐந்து பொற்காசுகள் தந்தால் போதும்" என்றான்.

ஐந்து பொற்காசுகள் என்பது வியாபாரிக்கு மிகவும் சாதாரணம். மகிழ்ச்சியுடன் பொற்காசுகளை எடுத்துக் கொடுத்தான். வழிப்போக்கனும் ஒட்டகத்தின் காதில் அந்த மந்திரத்தைச் சொன்னான். ஒட்டகமும் எழுந்து ஓடத் தொடங்கியது. ஆனால் அவன் போக வேண்டிய பாதைக்கு நேர் எதிராக.

வியாபாரிக்கு முதலில் எதுவும் புரியவில்லை. பின்பு, சுதாரித்துக் கொண்டு ஒட்டகத்தின் பின்னால் ஓடினான். பணத்தை மட்டுமாவது எடுத்து விட முயற்சித்தான். மணற்பகுதி என்பதால் ஓட முடியவில்லை.

மீண்டும் வழிப்போக்கனிடம் வந்து, "தயவுசெய்து அந்த ஒட்டகத்தை நிறுத்த ஏதேனும் மந்திரம் இருந்தால் கூறுங்கள்" என்றான். "ஒட்டகத்தை நிறுத்த ஒரு மந்திரம் உள்ளது. ஆனால் அதை உபயோகிக்க வேண்டுமானால், நீங்கள் எனக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் தரவேண்டும்" என்ற வழிப்போக்கனின் பதிலைக் கேட்ட வியாபாரி மயங்கி விழுந்தான்.

நம் வாழ்வில் தற்காலிக பிரச்சனைகளுக்கான தீர்வைத் தேடி, நிரந்தர பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கிறோம்.

ஒரு தீர்வை தேர்ந்தெடுப்பதற்கு முன்னால், அது 'நிரந்தரமான தீர்வா?' என்பதை உறுதி செய்யுங்கள்.