எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 17 செப்டம்பர், 2016

பயணத்தின் முடிவு

ஒரு பள்ளத்தாக்கை ஒட்டிய கிராமத்தில் வசித்த துறவி ஒருவர், தனது மடத்திற்கு ஒரு துறவி தேவைப்படுவதாகவும், அவரை உடனே அனுப்பி வைக்கும்படியும் தலைமை மடத்துக்கு தகவல் அனுப்பினார். தலைமை மடத்தின் குரு, எல்லா துறவிகளையும் அழைத்து, "நான் உங்களில் ஐந்து பேரை அந்த ஊருக்கு அனுப்பி வைக்கப் போகிறேன்" என்றார்.

"ஒருவர் தானே தேவைப்படுகிறது. ஏன் ஐவர் செல்ல வேண்டும்?" என அனைவரும் கேட்டனர். அதற்கு குரு, "அது உங்களுக்கு இப்போது புரியாது. வெகு தூரம் செல்ல வேண்டியதிருக்கும். வழியில் பல தடைகள் ஏற்படும். ஒருவர் சென்று சேர்வது கூட நிச்சயமில்லை" என்று கூறிவிட்டு ஐவரை தேர்ந்தெடுத்து அனுப்பினார்.

முதல் நாள் பயணத்தில், ஐவரும் ஒரு கிராமத்தை அடைந்தனர். அந்த கிராமத்து மக்கள், "இந்த கிராமத்தில் இருந்த துறவி இறந்துவிட்டார். உங்களில் ஒருவர் இனி அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என வேண்டினார்கள். ஐவரில் ஒருவன், "கடவுளின் விருப்பம் இதுவாக இருக்குமானால், நான் இங்கேயே இருக்கிறேன். நீங்கள் நால்வரும் புறப்படுங்கள்" என்றான். நால்வரும் பயணத்தை தொடங்கினர்.

அடுத்த நாள், ஒரு நகரத்தின் வழியாக அவர்கள் பயணித்தனர். அப்போது அந்த நாட்டின் அரசன் குதிரையில் வந்தான். நால்வரில் ஒருவரிடம் வந்து, "நீங்கள் மிகவும் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கிறீர்கள். என் மகளை திருமணம் செய்து கொண்டு, இந்த நாட்டை ஆள வேண்டும்" என்றான். அவனும் அதற்கு சம்மதித்து, அரசனுடன் சென்றுவிட்டான். மற்ற மூவரும் பயணத்தை தொடங்கினர்.

அடுத்த நாள், மூவரும் காட்டின் வழியாக பயணித்தனர். காட்டின் நடுவில், அழகான இளம்பெண்ணொருத்தியை பார்த்தனர். அவள், "என் பெற்றோர் பக்கத்து ஊருக்கு சென்றுள்ளனர். திரும்பி வரும் வரை என்னை இங்கேயே நிற்கும்படி சொன்னார்கள். ஆனால் எனக்கு தனியாக இருக்க பயமாக உள்ளது" என்றாள். அவள் அழகில் மயங்கி காதல் வயப்பட்ட ஒருவன், "நான் இவளுக்கு துணையாக இருக்கிறேன். நீங்கள் செல்லுங்கள்" என்றான். வேறு வழியின்றி இருவரும் பயணத்தை ஆரம்பித்தனர்.

மறுநாள் இருவரும் நாத்திகர்கள் வாழ்ந்த பகுதியில் பயணித்தனர். இந்த இருதுறவிகளையும் பார்த்து, "கடவுள் இல்லை. நீங்கள் கடவுளின் பெயரைக் கூறி மக்களை ஏமாற்றுகிறீர்கள்" எனக் கூறினார்கள். இதைக் கேட்ட ஒரு துறவிக்கு கோபம் வந்து, "கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபித்து, உங்கள் அனைவரின் மனதையும் மாற்றுவேன்" என சபதம் மேற்கொண்டு அங்கேயே தங்கிவிட்டார்.

கடைசியில், அந்த ஒரு துறவி மட்டும் பயணம் செய்து பள்ளத்தாக்கில் உள்ள மடத்தை அடைந்தான். அப்போது அவனுக்கு தன் குருவின் செயலுக்கான அர்த்தம் விளங்கியது.

இலக்கு ஒன்றை நோக்கி செல்லும் வழியில், பல தடைகளை கடக்க நேரிடும். ஆனால் நாம் இலக்கை மறந்து விட்டு, தடைகளை பார்த்து பயந்து நின்றுவிடுகிறோம் அல்லது ஒரு தடையை கடந்ததை பெரிதாக எண்ணி நின்றுவிடுகிறோம்.