எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 8 செப்டம்பர், 2016

தீதும்... நன்றும்...

காலை ஏழு மணி. அந்த மிகப் பெரிய தொழிலதிபர் வீட்டுக்கும் வாசலுக்குமாக நடந்து கொண்டிருந்தார். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அவர் விமான நிலையத்தில் இருந்தாக வேண்டும்.

காலை ஆறு மணிக்கு வர வேண்டிய டிரைவர் இன்னும் வரவில்லை. அவர் புலம்பிக் கொண்டிருந்த போதே வாசலில் டிரைவர் வரும் சத்தம் கேட்டது. டிரைவரை திட்டியவாரே வண்டியில் ஏறினார். பாதி தூரத்தில் வண்டி திடீரென நின்று விட்டது. தொழிலதிபருக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது.

டிரைவரைப் பார்த்து, "எனக்கென எமன் போல் வந்து தொலைத்தாயே! உன்னால் எனக்கு பல கோடி இழப்பாகப் போகிறது" என்று திட்டினார்.

அப்போது அந்த தொழிலதிபரின் நண்பர் தற்செயலாக அந்த வழியில் வந்தார். தான் விமான நிலையம் வழியாகத் தான் போவதாகவும், வழியில் இறக்கி விடுவதாகவும் கூறினார். அவரும் ஏறிக் கொண்டார்.

விமான நிலையம் வந்தது. தொழிலதிபர் தன் நண்பரிடம், "கடவுள் போல் சரியான நேரத்தில் வந்து உதவி செய்தாய். இதை நான் எப்போதும் மறக்க மாட்டேன்" என்றார்.

பயணம் தொடங்கிய சில மணி நேரத்தில், விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பதாக ஒரு அறிவிப்பு வந்தது. பயணிகள் அனைவரும் பயத்தின் உச்சத்தில் இருந்தனர்.

"தாமதமாக வந்து அந்த டிரைவர் கடவுள் போல் என்னை காப்பாற்ற முற்பட்டிருக்கிறான். ஆனால், இடையில் வந்த நண்பன் எமன் போல் இந்த விமானத்தில் ஏற்றி விட்டானே!" என புலம்பினார்.

அரை மணி நேரத்திற்குள் கடவுளாகத் தெரிந்தவர் எமனாகி விட்டார். எமனாக தெரிந்தவர் கடவுளாகி விட்டார்.

நன்மை தீமையாக மாறுவதும், தீமை நன்மையாக மாறுவதும் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளைச் சார்ந்தது.