எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

இப்படியும் சில மனிதர்கள்...

ஒரு மிகப் பெரிய தொழிலதிபரின் வீடு. அந்த வீட்டின் வாயிற்காவலனாக அவன் வேலை பார்த்து வருகிறான். தொழிலதிபர் வீட்டிற்குள் வரும்போதும், வெளியே போகும்போதும் வணக்கம் கூறிவிட்டு கதவை திறந்து விடுவது அவன் வேலை. ஆனால் ஒருமுறை கூட அவரிடமிருந்து பதிலுக்கு வணக்கம் வந்ததில்லை. ஏன் ஒரு புன்னகை கூட கிடையாது. சம்பளம் தரும்போது கூட எதுவும் பேசமாட்டார். அவனும் இவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டான். அந்த வீட்டில் வேலை செய்யும் பிறரிடம் கூட பேசமாட்டான். 'தான் உண்டு. தன் வேலை உண்டு' என்றிருப்பான்.

ஒருநாள் அவன் வேலையை முடித்து வீட்டிற்கு செல்லும் சமயத்தில் ஒரு பிளாஸ்டிக் பை வாசலுக்கு வெளியே இருந்ததைப் பார்த்தான். அதை எடுத்து பிரித்துப் பார்த்தான். உள்ளே சில காய்கறிகளும், பழங்களும் இருந்தன. யாரெனும் தவற விட்டிருக்கலாம் என்று நினைத்து அவன் வீட்டிற்கு எடுத்துச் சென்று மனைவியிடம் கொடுத்தான்.

ஆனால் அதற்கு அடுத்த நாளும் அதே போல் ஒரு பையில் காய்கறிகளும், பழங்களும் இருந்தன. அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. அந்த பையை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் நடந்ததை சொன்னான். அவன் மனைவி, "யாரும் வேண்டுமென்றே தினமும் பையை வைக்க மாட்டார்கள். தெரியாமல் தவறவிட்டதாகத்தான் இருக்க வேண்டும்"  எனக் கூறினாள். அவனுக்கும் அது சரியெனப்பட்டது.

மறுநாள் அதேபோல் ஒரு பை இருந்தது. அந்த வீட்டிலிருந்த மற்ற வேலையாட்களிடம் கேட்டான். அதைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை. மீண்டும் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று மனைவியிடம் கொடுத்தான். அவள், "தினமும் ஒரே இடத்தில் இந்த பை இருக்கிறது என்றால், அது நமக்காக யாரோ உதவி செய்வதற்காகத் தான் வைக்கிறார்கள். எனவே, அதை நாம் ஏற்றுக் கொள்வதில் தவறொன்றும் இல்லை" என்றாள்.

அவன் மனைவியின் வார்த்தை சரியெனப்பட்டாலும், முகம் தெரியாத ஒருவரின் உதவியை ஏற்றுக் கொள்ள தயங்கினான். தனக்கு உதவுபவர் யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சித்தான். ஆனால் அதை யார் வைக்கிறார்கள், எப்போது வைக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

தினமும் அந்த இடத்தில் ஒரு பை இருப்பதும், அதை அவன் வீட்டிற்கு எடுத்துச் செல்வதும் வழக்கமாயிற்று. ஆனால், இப்போது சில நாட்களாக அந்த பை அங்கு இல்லை. தினமும் காய்கறியும், பழமும் இலவசமாக கிடைத்ததால், பணத்தை சேமித்து வந்த அவன் மனைவிக்கு இப்போது பணத்தை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. கணவனிடம், "சம்பளத்தை உயர்த்தி தரும்படி கேளுங்கள்" என வற்புறுத்தினாள்.

அவனும் அந்த தொழிலதிபரின் மனைவியிடம் சம்பளத்தை உயர்த்தி தரும்படி கேட்டான். அவள், "இத்தனை வருடங்கள் உனக்கு இந்த சம்பளம் போதுமானதாகத் தானே இருந்திருக்கிறது. இப்போது ஏன் உயர்த்தி தரச் சொல்லி கேட்கிறாய்?" என்றாள். அவனும் வேறு வழியின்றி, தினமும் வாசலில் இருக்கும் அந்த பையை பற்றிக் கூறினான்.

அவனிடம், "உனக்கு எப்போதிலிருந்து அந்த பை கிடைக்காமல் போனது?" எனக் கேட்டாள். அவன் தேதியை சொன்னான். சிறிது நேரம் யோசித்து விட்டு, திடீரென அழத் தொடங்கினாள் அவள்.

காரணம், அன்று தான் அவளது கணவன் இறப்பதற்கு முன்னால், நோய்வாட்டப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நடந்தது மெல்ல மெல்ல அவனுக்கு புரியத் தொடங்கியது. வேறு எதுவும் பேசாமல் சென்று விட்டான்.

சில நாட்களில், தொழிலை அவரது மகன் கவனிக்க தொடங்கி விட்டான். தந்தையைப் போலவே தான் மகனும். வணக்கம் கூறினால், எதுவும் பதில் வணக்கம் சொல்லவும் மாட்டான்; புன்னகைக்கவும் மாட்டான். மீண்டும் வாசலில் காய்கறிகளும், பழங்களும் கொண்ட பை ஒன்று வைக்கப்படுவது வழக்கமாகி விட்டது.

இப்போது அவனுக்கு அந்த பையை வைப்பது யார் என்பது தெரியும். ஆனால், பாவம்!!! தந்தையைப் போல் மகனுக்கும் பேச முடியாது என்ற செய்தி மட்டும் தெரியாது...

உங்களிடம் மகிழ்ச்சியாக சிரித்து பேசும் அனைவரும் நல்லவர்கள் இல்லை; வெறுப்பையும், கோபத்தையும் பொழியும் அனைவரும் கெட்டவர்கள் இல்லை.