எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 14 செப்டம்பர், 2016

அதிசயத்தை நிகழ்த்த வேண்டுமா???

'மிகச் சிறந்த வில்லாளன்' என்ற பட்டத்தைப் பெற்ற இளைஞன் ஒருவன், அரசவைக்கு வந்தான்.
அரசரிடம், "அரசே! நான் பல நாடுகளில் நடைபெற்ற வில் வித்தை போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளேன். உங்கள் நாட்டில் என்னை தோற்கடிக்கும் திறமை யாருக்காவது இருக்கிறதா? அப்படி யாரும் இல்லாவிட்டால் நானே சிறந்த வில்லாளன் என உங்கள் நாடு முழுதும் அறிவிக்க வேண்டும்" என்றான்.

கண்களை கட்டிக் கொண்டு வானத்தில் பறக்கும் பறவையை வீழ்த்தும் அளவு திறமை பெற்றிருந்தான் அந்த வீரன்.
அவனது திறமைகளைப் பற்றி அறிந்த அரசன் என்ன செய்வது என தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தான். அமைச்சர் ஒருவர் அரசனிடம், "அரசே! நாம் நாட்டின் எல்லை பகுதியில் உள்ள மலையில், வயதான கிழவர் ஒருவர் இருக்கிறார். அவரைப் போன்று வில் வித்தையில் சிறந்தவர் உலகிலேயே யாரும் கிடையாது. இந்த வீரனை அவரிடம் அனுப்புங்கள்" என்றார்.

அரசனும் இதை அந்த வீரனிடம் சொன்னான். வீரனும் அந்த பெரியவரை பார்க்கச் சென்றான். அந்த பெரியவருக்கு கிட்டத்தட்ட தொன்னூற்று ஐந்து வயதிற்கு மேல் இருக்கும். மலை உச்சியில் உள்ள குகையில் வாழ்ந்து வந்தார் அவர். ஆனால் அந்த குகையில் வில் அம்பு எதுவும் இல்லை.

பெரியவர், "நீ வருவாய் என்ற தகவல் கிடைத்தது. நான் உனக்கு ஒரு சோதனை வைக்கப் போகிறேன். அதில் நீ தேர்ச்சி பெற்றால் 'நீதான் இந்த உலகின் சிறந்த வில்லாளன்' என ஒத்துக் கொள்கிறேன்" என கூறி மலை உச்சிக்கு அவனை அழைத்துச் சென்றார்.
பாதம் பாதி வெளியே இருக்கும்படி மலையின் விளிம்பில் சாதாரணமாக நின்றார். இளைஞனைப் பார்த்து, "என் அருகில் வந்து நில்" என்றார். அவன் பயந்து கொண்டே இரண்டு அடி எடுத்து வைத்தான். கீழே குனிந்து பார்த்தான். கால்கள் நடுங்கத் தொடங்கின.  பெரியவரிடம், "என்னால் முடியாது. சற்று கவனம் சிதறினாலோ, காற்று பலமாக வீசினாலோ கீழே விழுந்து இறந்து விடுவேன்" என்றபடி பின்னால் சென்று விட்டான்.

"வில் வித்தை மனிதனுக்கு கற்றுத் தருவது அசையாத நம்பிக்கை. தளராத இதயம். எனக்கு வில்லும் அம்பும் தேவையில்லை. என் திறமையை பார்" என்றார் பெரியவர். வானத்தில் சில பறவைகள் பறந்து கொண்டிருந்தன. அவற்றை உற்றுப் பார்த்தார். சில நிமிடங்களில் அவை கீழே விழுந்து இறந்தன.

பெரியவர் திரும்பி அந்த இளைஞனைப் பார்த்து, "நீ அசையாமல் இருந்தால் பார்வையே போதும். அம்பு தேவையில்லை. என்னைப் பொறுத்தவரை இது குழந்தைகளின் விளையாட்டு. நீ திரும்பிச் சென்று பயிற்சி செய். ஆழ்ந்த பயிற்சியின் மூலம் நீ சிறந்த வில்லாளன் ஆகலாம்" என்றார்.

'பிடித்த கலையை கற்றுக் கொள்வது முடிவு இல்லை. அதனுள் ஆழமாக செல்ல வேண்டும். ஒவ்வொரு கலையும், படைப்பும் உங்களை, எங்கே மௌனமும் அமைதியும் இருக்கிறதோ அங்கே கொண்டு சேர்க்கும். அதன் மூலம் உங்களால் பார்க்க முடியாததையும் பார்க்க முடியும்'
- ஓஷோ