எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 19 அக்டோபர், 2016

உண்மையான அமானுஷ்யம்!!!

"சொல்லும்மா, என்ன ஆச்சு?" நூற்று பத்து என்று காட்டிய தெர்மா மீட்டரை உதறிக் கொண்டே கேட்டார் டாக்டர்.
"இவரு என் புருஷங்க. ஊரை விட்டு பத்து மைல் தள்ளியிருக்கிற கரும்பாலையில வேலை பார்க்கிறாரு. தினமும் வீட்டுக்கு லேட்டாதான் வருவாரு. நேத்து ராத்திரி ரெண்டு மணி ஆயிட்டது. இவர காணும். நான் பதறிப் போய் நாலு பேர கூட்டிக்கிட்டு ரோட்ல தேடிக் கிட்டே போனா நல்லூர் கேட் பக்கத்துல இவரு ரோட்டுல விழுந்து கிடக்குறாரு. இவர பேய் அடிச்சிடுச்சுங்க" என்றாள்.

"என்னது, பேயா ?" அதிர்ந்தார் டாக்டர்.


மனைவி கொடுத்த தைரியத்தில், மெதுவாக பேச தொடங்கினான் அவன். "ஆமாம் டாக்டர். நேத்து பாக்டரியை விட்டு கிளம்ப பத்து மணி ஆயிருச்சுங்க.  வழியெல்லாம் கும்மிருட்டு. பாலத்துக்கிட்ட ஒரு வயசான கிழவி உட்கார்ந்தபடியே ரெண்டு கையாலும் நடந்துக்கிட்டே ரோட்டை கிராஸ் பண்ணிச்சு.  நெத்தில பட்டையா துண்ணூறு. வெத்தில போட்ட பல்லுன்னு பாக்கவே பயங்கரமா இருந்திச்சு. சரி, ராத்திரில கிழவி போகுதுன்னு மனசை தேத்திக் கிட்டு சைக்கிளை கிளப்புனேன். மனசுல அந்த கிழவி முகம் வந்துகிட்டே இருந்தது.

நம்ம நல்லூர் ரெயில் கேட் தாண்டி கொஞ்ச தூரம் போயிருப்பேங்க... சொன்னா நம்ப மாட்டீங்க, அந்த கிழவி மறுபடியும் ரோட்டை க்ராஸ் பண்ணுது. ஆனா இந்த முறை இடது வலமா! அப்படி கிராஸ் பண்றப்ப, ஒரு தடவ என்னய பார்த்து சிரிச்சுது பாருங்க... யம்மாடி! என் ஈரக்கொலையே வெளியில வந்த மாதிரி ஆயிட்டது. அப்ப அலறிக்கிட்டு சைக்கிளோட விளுந்தவன்தான்...!" எனக் கூறினான்.

"முருகன்! பேய், பிசாசெல்லாம் ஒண்ணுமில்லே! நீங்க ரொம்ப பயந்ததினால, பிரமை ஏற்பட்டிருக்கு. இந்த மாத்திரைகளை சாப்பிடுங்க. நல்லா ரெஸ்ட் எடுத்துக்குங்க. ரெண்டு நாள்ல சரியாயிடுவீங்க" என்றார் டாக்டர்.

மறுநாளும் காய்ச்சல் தொடர்ந்தது. உடனடியாக பேயோட்டுவதற்கு பூசாரி வரவழைக்கப்பட்டார். முருகனுக்கு வேப்பிலையடிக்கப்பட்டது.

ஒரு வார லீவுக்கு பிறகு, வேலைக்குச் சென்றான். அவன் நண்பன் விஷயம் தெரிந்து ஓடோடி வந்தான்.
"மடையா! அந்த கிழவி பேயுமில்லே. பிசாசுமில்லே! நல்லா உசுரோடதான் இருக்குது. நீ ரெண்டு இடத்துல பார்த்ததும் ஒரே கிழவிதான். மொதல்ல பார்த்தது அது பஸ்ல ஏறத்துக்கு முன்னால. அடுத்தது, அது பஸ்ஸை விட்டு இறங்கிப் போகும் போது" என்றான். முருகனுக்கு உடனே காய்ச்சல் விட்டுவிட்டது.

பயந்த சுபாவமுடியவர்களுக்கு இதைப் போன்ற சில அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம்.
கண் முன்பாக ஏதேனும் ஒரு மனிதரின் உருவம் தோன்றுவது போல் இருப்பதற்கு "மென்டல் ஹலூசினேஷன்" என்று பெயர்.  பயத்தின் உச்சத்தில், அந்த கற்பனை உருவம் ஒரு முப்பரிமாண பிம்பமாக மாறி கண்முன் நிஜ உருவம் போல் தோன்றும்.