எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 13 செப்டம்பர், 2016

உன்னை நீ சரி செய்து கொள்!

அந்த ஊருக்கு துறவி ஒருவர் வந்திருந்தார். மக்கள் அனைவரும் அவரை சந்தித்து, தங்கள் பிரச்சனைகளை கூறினர். அவர்களின் பிரச்சனைகள் தீர்வதற்கான வழிமுறைகளை கூறுவார். அந்த ஊர் மக்கள் அனைவரும் நல்ல முறையில் உபசரித்து வந்தனர்.
ஒருநாள் அந்த துறவியைப் பார்க்க, ஒரு அம்மா தனது எட்டு வயது மகனுடன் வந்திருந்தார். துறவியிடம், "சுவாமி! என்னுடைய மகன் மிக அதிகமாக இனிப்பு பண்டங்களை சாப்பிடுகிறான். சிறுவயதில் இவன் இனிப்பு பதார்த்தங்களை விரும்பி சாப்பிடும் போது நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இப்போது இவன் ஆரோக்கியத்தை நினைத்தால், எனக்கு கவலையாக இருக்கிறது. நான் சொன்னால்கேட்க மாட்டான். நீங்கள் தான் இவனுக்கு புத்திமதி கூற வேண்டும்" என்றார் அந்த அம்மா.
துறவி, "நீங்கள் பத்து நாட்கள் கழித்து உன் மகனை அழைத்துக் கொண்டு இங்கே வாருங்கள்" என்றார். அந்த அம்மாவும் அதே போல், பத்து நாட்கள் கழித்து தன் பையனுடன் துறவியைப் பார்க்க வந்தாள்.
துறவியிடம் தன் பிரச்சனையைக் கூறினாள். அவர், "மூன்று நாட்களுக்குப் பிறகு வாருங்கள்" என்றார். துறவி சொன்னதை ஏற்று, அவளும் மூன்று நாட்களுக்குப் பின் குழந்தையுடன் வந்தாள். பிரச்சனையை சொன்னதும், "இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள்" என்றார் துறவி.
இரண்டு நாட்களுக்கு பிறகு வந்த அந்த அம்மாவிடம், "நம்பிக்கையோடு நாளை வாருங்கள். உங்கள் மகனிடம் நான் பேசுகிறேன்" என்றார் துறவி. அதேபோல் மறுநாள் மகனை அழைத்துக் கொண்டு வந்தாள் அந்த அம்மா. துறவி அந்த சிறுவனிடம், "தம்பி, இனிப்பு உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அதிகம்  சாப்பிட்டால் அது உடல் நலத்தை பாதிக்கும்..." என நீண்ட அறிவுரையை கூறி அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்தார்.
இதை பார்த்துக் கொண்டிருந்த துறவியின் சீடன் ஒருவன் குழப்பமடைந்தான். தன் குழப்பத்தை தீர்க்க துறவியிடம் சென்று, "குருவே! இனிப்பு சாப்பிடக் கூடாது என்ற அறிவுரையை நீங்கள் அவர்கள் வந்த முதல் நாளிலேயே அந்த பையனிடம் சொல்லியிருக்கலாமே! ஏன் இத்தனை நாட்கள் அவர்களை அலைக்கழித்தீர்கள்?" என்று கேட்டான்.
அதற்கு துறவி, "நான் ஒருவருக்கு அறிவுரை வழங்க வேண்டுமானால், முதலில் நான் அதனை பின்பற்றி இருக்க வேண்டும். இனிப்பு அதிகம் சாப்பிடும் நான் எவ்வாறு அந்த சிறுவனுக்கு அறிவுரை கூற முடியும்? நான் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்த எனக்கு சில நாட்கள் தேவைப்பட்டன. அதனால் தான் அவர்களை சில நாட்களுக்குப் பிறகு வர சொல்லி அறிவுரை கூறினேன்" என்றார்.