எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 1 ஆகஸ்ட், 2018

STANFORD - உருவான கதை


அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் உள்ள ஹார்வேர்ட் (Harvard) பல்கலைக்கழகத்திற்கு ஒரு தம்பதி வந்தனர். அங்கிருந்த உதவியாளரிடம், "ஹார்வேர்ட் பல்கலைக்கழகத் தலைவரைப் பார்க்க வேண்டும்" என்றனர்.

“தலைவர் உங்களுக்காக நேரம் ஒதுக்கி இருக்கிறாரா?” எனக் கேட்டார்.

“இல்லை” என்றனர். அவர்களை  பார்த்தார் உதவியாளர். அந்த பெண் சாயம் போன, அச்சடித்த பூக்கள் கொண்ட பருத்தியாலான உடையை அணிந்து இருந்தாள். கணவனோ நெசவில் நெய்த நூல் இழை இழையாகத் தெரியும் சூட் அணிந்து இருந்தார்.


‘இவர்கள் எல்லாம் இங்கு வரத் தகுதியற்றவர்கள்’  என மனதிற்குள் நினைத்தபடி, “இன்று முழுவதும் அவரை பார்ப்பது கடினம்…” என்றார்.
“பரவாயில்லை. நாங்கள் காத்திருக்கிறோம்” என்றனர்.

பலமணி நேரம் சென்றது. உதவியாளர் அவர்களைக் கவனிக்கவே இல்லை. தனது அலட்சியம் அவர்களை அந்த இடத்திலிருந்து அகற்றி விடும் என்று நினைத்தார். ஆனால் அவர்கள் அந்த இடத்தை விட்டு அசைவதாகவே தெரியவில்லை.

வேறு வழியில்லாமல் தலைவருக்கு செய்தி அனுப்பினார். தனது தகுதிக்கு அவர்களிடம் பேசுவதை தாழ்ந்தது என்று நினைத்தாலும், சரி என்று அவர்களைப் பார்க்க ஒப்புக்கொண்டார். மிகவும் கர்வத்துடன் ‘என்ன வேண்டும்?’ என்பது போல அவர்களை நோக்கி கேட்டார்.

அந்தப் பெண்மணி, “எங்களுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் ஒரு வருடம் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தான். இங்கு அவன் மிகச் சந்தோஷமாக இருந்தான். ஆனால் துரதிருஷ்டவசமாக, அவன் ஒரு வருடம் முன்னால் இறந்துவிட்டான். என் கணவருக்கும் எனக்கும் அவன் நினைவாக ஒரு கட்டிடம் அமைக்க விரும்புகிறோம்….” என்றார்.

தலைவர் தனது கண்களை உருட்டினார். “கட்டிடமா? இந்தக் கட்டிடங்களின் மதிப்பு என்ன தெரியுமா? 7½ மில்லியன் டாலர்கள்!”


ஒரு நிமிடம் அந்தப் பெண்மணி பேசவில்லை. தலைவருக்கு தாங்க முடியாத சந்தோஷம். அப்பாடா, இவர்கள் இடத்தைக் காலி செய்து விடுவார்கள் என்று ஆசுவாசப் பட்டார்.

பெண்மணி தனது கணவரைத் திரும்பிப் பார்த்துக் கேட்டார்: “ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பிக்க இவ்வளவு தான் ஆகுமா? அப்படியானால் நாமே ஏன் சொந்தமாக ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கக்கூடாது?”

அவள் கணவர் பெண்மணியின் கூற்றை ஆமோதிப்பது போலத் தலையை அசைத்தார். 
தலைவரின் முகம் அதிர்ச்சியில் சுருங்கியது. அவர் தனது அதிர்ச்சியிலிருந்து விடுபடும் முன் திரு. மற்றும் திருமதி. லேலண்ட் ஸ்டான்போர்ட் எழுந்து நடந்தனர்.


இவர்கள் 1891 ஆம் ஆண்டு, கலிபோர்னியாவில் ஸ்டான்போர்ட் (Stanford) பல்கலைக் கழகத்தை தொடங்கி, ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் தங்கள் மகனுக்குக் கொடுக்கத் தவறிய கௌரவத்தை நிலை நாட்டினார்கள். உலகின் தலைசிறந்த பல்கலைகழகமாக இன்று வரை ஸ்டான்போர்ட் (Stanford) திகழ்கிறது.


மேலும் சில தகவல்கள் :

ஸ்டான்போர்ட் (stanford) பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆராச்சிக்கான தலைப்பின் முடிவில், லாரி பேஜ்(Larry Page), சேர்ஜி பிரின்(Sergey Brin) என்பவரும் இணைந்து GOOGLE இணையதளத்தை உருவாக்கினர்.

உலகின் மிகப் பெரிய சமூக வலைதளமான FACEBOOK யை உருவாக்கிய Mark Zuckerberg ஸ்டான்போர்ட் (stanford) பல்கலைக்கழக மாணவர்.

முதலில் Facebook, ஸ்டான்போர்ட் (stanford) பல்கலைக்கழகத்தில் மட்டுமே பயன்படுத்தும் இணையதளமாக இருந்துள்ளது.


புதன், 25 ஜூலை, 2018

பெண்ணதிகாரம்

"ஒரு பெண்ணுக்கு உண்மையான மகிழ்ச்சியை தருவது எது?" என மகாராணி, ராஜாவிடம் கேட்டாள். ராஜா தனக்கு தெரிந்த எல்லா பதில்களையும் கூறி விட்டார். ஆனால் எந்த பதிலையும் ராணி ஏற்றுக் கொள்ளவில்லை. ராஜா, சரியான பதிலை கண்டுபிடித்து வருமாறு தனது அமைச்சர் ஒருவனுக்கு ஆணையிட்டார்.


அமைச்சரும் பல இடங்களுக்குச் சென்று பல்வேறு மனிதர்களை சந்தித்தான். ராணி கேட்ட கேள்வியை அவர்களிடம் கேட்டான். யாராலும் விடை சொல்ல முடியவில்லை. கவலையோடு காட்டில் சுற்றிக் கொண்டிருந்தான் அமைச்சர். அந்த வழியே வந்த வயதான கிழவி ஒருத்தி, அமைச்சரிடம் சென்று அவன் கவலைக்கான காரணத்தை கேட்டாள். நடந்தவற்றை கூறினான் அமைச்சர்.

கிழவி, "இந்த கேள்விக்கான விடை என்னிடம் உள்ளது. அதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், நீ என்னை இப்போதே திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்றாள். அமைச்சரும் அவள் கூறும் விடை சரியானதாக இருந்தால் திருமணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்தான்.


"ஒரு பெண் அவள் சம்பந்தபட்ட விஷயங்களை அவளே முடிவு எடுக்கும் அதிகாரத்தை அளிப்பதே மகிழ்ச்சியை தரும்" என பதில் அளித்தாள். இந்த பதிலை ராணியிடம் வந்து தெரிவித்தான் அமைச்சன். ராணியும் அதை சரி என ஒத்துக் கொண்டாள். தான் செய்திருந்த சத்தியத்தை நிறைவேற்ற காட்டிற்கு சென்றான் அமைச்சர்.

கிழவி அவனிடம், "எனக்கு அழகான பெண்ணாக மாறக் கூடிய சக்தி உள்ளது. அதைக் கொண்டு உனக்கு அழகான பெண்ணாகவும், பிறருக்கு வயதானவளாகவும் தெரிவேன். அல்லது பிறருக்கு அழகான பெண்ணாகவும், உனக்கு வயதானவளாகவும் தெரிவேன். நான் எவ்வாறு தோற்றமளிக்க வேண்டும் என்பதை நீயே முடிவு செய்" என்றாள்.

சற்று சிந்தித்து விட்டு அவன், "இது உன்னுடைய வாழ்க்கை. முடிவெடுக்கும் அதிகாரம் உனக்கு மட்டுமே உடையது" என்றான். மகிழ்ச்சியடைந்த அவள் வயதான தோற்றத்தை விட்டு விட்டு, இளம் பெண்ணாக மாறி திருமணம் செய்து கொண்டாள்.

பெண்களுக்கென பல உரிமைகள் சட்டத்தில் எழுதப்பட்டு நடைமுறை வாழ்க்கையில் இருக்கின்றன. ஆனால் பெண்ணதிகாரம் என்பது பெரும்பாலும் மறுக்கப்படுகிறது.