எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 15 செப்டம்பர், 2016

நடப்பது நடக்கும்...

குறுநில மன்னர்களில் ஒருவன், விக்ரமாதித்த மன்னனை பார்க்க அரண்மனைக்கு வந்தான். விக்ரமாதித்தன், "நான் இப்போது தேவலோகத்திற்கு சுற்றுப் பயணம் செய்யப் போகிறேன். நீ மற்றொரு நாள் வந்து என்னைப் பார்" என்றார். அந்த மன்னன், "அரசே! நான் இதுவரை தேவலோகத்தை பார்த்ததில்லை. நீங்கள் அனுமதித்தால் நானும் உங்களோடு வரலாமா?" எனக் கேட்டான். விக்ரமாதித்தனும் அதற்கு சம்மதித்து உடன் அழைத்துச் சென்றார்.

இருவரும் தேவலோகத்திற்குள் நுழைந்தனர். அங்கே கரிய நிறத்தில், கோர பற்களோடு, பார்த்தாலே மிரளும் அளவிற்கு மிகப் பெரிய உருவத்தில் ஒரு பூதம் நின்றிருந்தது. அதைப் பார்த்த குறுநில மன்னனுக்கு பயத்தில் மயக்கமே வந்துவிடும் போல தோன்றியது.
பூதம் அந்த குறுநில மன்னனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது.

விக்ரமாதித்தனிடம் பூதத்தை காட்டி "இது யார்?" எனக் கேட்டான் மன்னன். "இவன்தான் இங்குள்ள பூதங்களின் தலைவன். எமதர்மனின் கட்டளையை நிறைவேற்றுவதே இவன் வேலை" என்றான் விக்ரமாதித்தன்.
இப்போது அந்த மன்னன் பயத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான். விக்ரமாதித்தனிடம் தன்னை மீண்டும் பூலோகத்தில் கொண்டுபோய் விடும்படி கெஞ்சினான். விக்ரமாதித்தன் அவனது பயத்தை போக்க, பல செயல்களை செய்தார். ஆனாலும் அவன் கேட்பதாக இல்லை. கடைசியில் தேவர்களை அழைத்து அந்த மன்னனை பூலோகத்தில் விட்டு வரும்படி கூறினான். அவர்களும் அவனை தூக்கிக் கொண்டு போய் அரண்மனை மாடியில் விட்டு வந்தனர்.

விக்ரமாதித்தன் கோபத்தோடு அந்த பூதத்தை பார்த்து, "எதற்காக நீ அந்த மன்னனை கோபமாக பார்த்தாய்?" எனக் கேட்டான். அதற்கு அந்த பூதம், "அரசே! நான் அந்த மன்னனை கோபமாக பார்க்கவில்லை. ஆச்சரியமாகவே பார்த்தேன். இன்று எமதர்மர் என்னை அழைத்து, 'இந்த மன்னனின் ஆயுள் முடிந்து விட்டது. இவனை பூலோகத்திற்குச் சென்று அழைத்து வா' எனக் கட்டளையிட்டார். ஆனால் நான் அழைத்து வருவதற்கு முன்பே, தேவலோகத்தில் இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். 'எமதர்மரின் கட்டளையை நிறைவேற்ற முடியாமல் போய் விடுமோ?' என நான் நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில், அவன் மீண்டும் பூலோகத்திற்கே சென்றுவிட்டான். இப்போது என் வேலை சுலபமாயிற்று" எனக் கூறியது.

சிறது நேரத்தில், "அரண்மனை மாடியில் இருந்து இறங்கும் போது, தவறி விழுந்த குறுநில மன்னன் இறந்தான்" என்ற செய்தி விக்ரமாதித்தனுக்கு வந்தது.

எது நடக்க வேண்டும் என விதித்திருக்கிறதோ, அது நிச்சயம் நடந்தே தீரும்.