எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

அழகின் ரகசியம்

துறவி ஒருவர் தன் சீடர்களோடு பயணம் செய்தார். இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால் சத்திரம் ஒன்றில் தங்குவதற்கு முடிவு செய்தனர். அந்த சத்திரத்தில் இருந்த வாயிற்காவலன் மிகவும் சோகமாக காணப்பட்டான்.

அதை கவனித்த துறவி, அவனை அழைத்து அவன் சோகத்திற்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு அவன், "எனக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தி மிகவும் அழகாக இருப்பாள். மற்றொருத்தி மிகவும் அசிங்கமாக இருப்பாள். ஆனால் எனக்கு அசிங்கமாக இருப்பவளையே பிடிக்கும். அழகாக இருப்பவளை பார்த்தால் எரிச்சலாக இருக்கும்" என்றான்.

துறவிக்கு சற்று குழப்பமாக இருந்தது. இருவரின் குணாதிசயங்களைப் பற்றியும் கேட்டுவிட்டு, "அழகானவளுக்கு தான் அழகு என்ற கர்வத்தில் இருப்பதால், அவள் முகமும், செயலும் அசிங்கமாக தெரிகிறது. ஆனால், அசிங்கமானவளோ தான்  அசிங்கம் என்ற எண்ணத்தால் மிகவும் எளிமையாக இருக்கிறாள். அது அவள் முகத்திலும், செயலிலும் வெளிப்பட்டு அழகாக தெரிகிறது" என்றார்.

இதைக் கேட்ட காவலன், தன் பிரச்சனை தீர்ந்ததைப் போல் உணர்ந்தான். மறுநாள் துறவி தன் சீடர்களுடன் பயணத்தை தொடங்கினார். பல வருடங்களுக்கு பிறகு, துறவி மீண்டும் அந்த சத்திரம் வழியாக வந்தார். அப்போதும் அந்த வாயிற்காவலன் சோகமாகவே இருந்தான். அவனை அழைத்து இப்போது மீண்டும் அவன் சோகமாக இருப்பதன் காரணத்தைக் கேட்டார்.

அவன், "சாமி, நீங்கள் என்னிடம் சொன்னதை நான் என் மனைவிகளிடம் சொன்னேன். அன்றிலிருந்து அழகானவளுக்கு தன் அழகின் மீதிருந்த கர்வம் நீங்கி எளிமையாகி விட்டாள். அது அவளை முன்பு இருந்ததை விட அதிக அழகாக்கி விட்டது. ஆனால், அசிங்கமானவளுக்கு எளிமையாக இருப்பதால் கர்வம் உண்டாகி, மிக அசிங்கமாக தெரிகிறாள். இப்போது என்ன செய்வது?" எனக் கேட்டான்.

"வேண்டாமப்பா! நான் ஒன்று சொல்ல, அது மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்துவிடப் போகிறது" என்றபடி நடக்க ஆரம்பித்தார் துறவி.

'முட்டாள் தன்னை முட்டாள் என உணரும் பட்சத்தில் புத்திசாலி ஆகிறான். புத்திசாலி தன்னை புத்திசாலி என உணரும் பட்சத்தில் முட்டாள் ஆகிறான்' - A.P.J.   அப்துல்கலாம்.