எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 7 செப்டம்பர், 2016

தவறு செய்தால்...

சங்கரன்பிள்ளை என்பவர் தன் பக்கத்து வீட்டுக்காரர் தோட்டத்தில் பழங்கள் நிறைய கனிந்து தொங்குவதைப் பார்த்தார். கோணிப்பையை எடுத்து வந்தார். வேலி தாண்டிக் குதித்தார். மரத்திலிருந்த பழங்களைப் பறித்து  பையில் போட்டுக் கொண்டார். மீண்டும் வேலியைத் தாண்டி குதிக்கும் நேரத்தில், அந்த தோட்டத்தின் உரிமையாளரிடம் மாட்டிக் கொண்டார்.

"யார் அனுமதியுடன் இதைப் பறித்தாய்?"

"நான் பறிக்கவில்லை. பெரும் காற்று வீசியது. அப்போது இந்தப் பழங்கள் கீழே விழுந்து விட்டன" என்றார் சங்கரன்பிள்ளை.

"அப்படியானால் இந்த பையை எதற்காக எடுத்து வந்தாய்?"

"இதுவும் காற்றில் எங்கிருந்தோ பறந்து வந்தது"

"காற்றிலே பழங்களும், கோணிப்பையும் பறந்து வந்திருக்கட்டும். பழங்களை கோணியில் நிரப்பியது யார்?" என்று உரிமையாளன் கோபத்தில் கத்தினான்.

அதற்கு சங்கரன்பிள்ளை கலங்காமல் அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு, "அதுதான் எனக்கும் ஆச்சரியமாக உள்ளது" என்றார்.

தவறு செய்யும் நம்மில் பலரும் இப்படித்தான். கையும் களவுமாக பிடிபட்டாலும், தவறை ஏற்காமல் அதை நியாயப்படுத்த மேலும் மேலும் போராடுவோம்.

உறவினர்கள், நண்பர்கள், மேலதிகாரி, சக ஊழியர்கள், முன்பின் அறிமுகமில்லாதவர்கள் என்ற பாகுபாடு பார்க்காமல், தவறு செய்யும் போது அதை ஏற்க துணியுங்கள். அது உங்களைப் பற்றிய நன்மதிப்பையே உண்டாக்கும்.

தவறுகளை ஏற்றுக்கொள்வது என்பது எதிரிகளையும் நண்பர்களாக்கும். வாழ்க்கையின் அடுத்த உயரத்திற்கு கொண்டு செல்லும்.