எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 10 செப்டம்பர், 2016

மாத்தி யோசி!!!

நண்பர்கள் இருவர் வேலை நிமித்தமாக ஆப்பிரிக்காவிற்கு பயணம் செய்தனர். இருவரும் இருவேறு ஷூ தயாரிக்கும் நிறுவனங்களில்,விற்பனைப் பிரிவின் அதிகாரிகளாக வேலை பார்த்து வந்தனர். அதில் ஒன்று அமெரிக்க கம்பெனி. மற்றொன்று இங்கிலாந்து கம்பெனி.

இரு அதிகாரிகளும் தங்கள் கம்பெனி ஷூக்களை ஆப்பிரிக்காவில் விற்பனை செய்ய முடியுமா என ஆராய்ச்சி செய்யவதற்காக செல்கின்றனர். கப்பல் ஆப்பிரிக்காவைச் சென்றடைந்தது. ஊருக்குள் நுழைந்த இருவருக்கும் அங்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அதன் காரணம், அங்குள்ள பெரும்பாலான மக்கள் வெறும் கால்களுடனேயே நடமாடினர். ஆப்பிரிக்காவில் உள்ள பல்வேறு நகரங்களுக்கும் சென்று பார்த்தனர். எல்லா இடத்திலும், மக்கள் காலணிகள் கூட இல்லாமல் வெறும் காலுடனே இருந்தனர்.

ஏமாற்றத்தினால் இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. அலுவலகத்திற்கு என்ன பதில் சொல்வது என்ற சிந்தனையிலேயே இருந்தனர். மறுநாள் அமெரிக்க கம்பெனி அதிகாரி சற்று உற்சாகமாக காணப்பட்டார். ஆனால், இங்கிலாந்து கம்பெனி அதிகாரியோ சோர்வுடனே இருந்தார்.

பிறகு, இங்கிலாந்தில் இருக்கும் தன் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, "சார், நீங்கள் எந்த சரக்கையும் அனுப்ப வேண்டாம். இங்கிருக்கும் ஆப்பிரிக்கர்கள் யாரும் செருப்பே அணிவதில்லை.  எப்படி ஷூ போடுவார்கள்?" எனக் கூறி விட்டார்.

அமெரிக்க அதிகாரி அதே வேளையில் தன் மேலாளரிடம், "சார், உடனே இரு மடங்கு சரக்குகளை அனுப்பி வையுங்கள். செருப்பே போடாதவர்களுக்கு ஷூவை அறிமுகம் செய்வது மிகவும் எளிய காரியம். போட்டியே இல்லாததால், நாம் சொல்வதுதான் விலை. நமக்கு நல்ல எதிர்காலம் உள்ளது" என்றார்.

பிரச்சனைகளை ஒரே கண்ணோட்டத்தில் பார்த்தால், அது எப்போதும் சிக்கலாகவே தெரியும். மாறுபட்டு சிந்தியுங்கள். எளிதில் தீர்வு கிடைக்கும்.