எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 5 செப்டம்பர், 2016

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...

விவசாயி ஒருவன் கடவுளிடம், "உனக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்? நீ நினைத்த போது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீச செய்கிறாய். உன்னால் மிகவும் தொந்தரவாக உள்ளது. பேசாமல், இந்த வேலைகளை வேறு யாரிடமாவது கொடுத்து விடு" எனக் கூறி குறைபட்டுக் கொண்டிருந்தான்.

அவனது பேச்சைக் கேட்ட கடவுள், "இன்று முதல் வெளிச்சம், காற்று, மழை ஆகியவை உன் கட்டுப்பாட்டில் இருக்கட்டும்" என வரம் அளித்துவிட்டுப் போய்விட்டார்.

அவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. மழை, வெயில், காற்று எல்லாம் அவன் கட்டுப்பாட்டில் இயங்கியது. அடுத்த பருவத்தில், அவன் சொன்ன போது மழை பெய்தது; நிறுத்தச் சொன்ன போது நின்றது. ஈரமான நிலத்தை உழுது, சரியான வேகத்தில் காற்றை வீசச் செய்து விதைகளைத் தூவினான். பயிர்களும் நன்கு வளர்ந்து, அழகாக காட்சியளித்தன.

அறுவடைக் காலம் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்துப் பார்த்துவிட்டு அதிர்ந்தான். உள்ளே தானியமே இல்லை. பிறகு ஒவ்வொரு கதிராக அறுத்துப் பார்த்தான். எதிலுமே தானியங்கள் இல்லை.

கோபத்தோடு கடவுளிடம் வந்து, "மழை, வெயில், காற்று அனைத்தையும் சரியான அளவில் பயன்படுத்தியும், பயிர் நன்கு விளையாதது ஏன்?" எனக் கேட்டான்.

கடவுள் புன்னகைத்துக் கொண்டே சொன்னார் : "நான் காற்றை வேகமாக வீசச் செய்யும் போது, கதிரெல்லாம் வேர்களை ஆழமாக பூமிக்குள் அனுப்பி நிலத்தைப் பிடித்துக் கொள்ளும். மழை குறைந்தால் வேர்களை தண்ணீர் இருக்கும் பக்கம் அனுப்பும். போராட்டம் இருந்ததால், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வலுவாக வளர்ந்தன.

ஆனால், நீ வசதியாக எல்லாமே அமைத்துக் கொடுத்ததால் அதற்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது. நன்கு வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அதற்குத் தெரியவில்லை".

நீங்கள் எதிர்பார்த்திராத பிரச்சனை ஏற்படும் போது, அதை அனுபவித்து கற்றுக்கொள்ள கிடைத்த வாய்ப்பாக எண்ணுங்கள். உங்கள் வளர்ச்சிக்கு அந்த அனுபவத்தை எப்படி பயன்படுத்தலாம் என்று பாருங்கள்.

சிக்கல் வரும்போது தான், நம் திறமை என்ன, நாம் எங்கே இருக்கிறோம் என்பதை அறிய இயலும்.

வாழ்க்கை எல்லா விதத்திலும் நமக்கு ஏற்றார் போல் அமைந்து விட்டால், அதைப் போன்ற வெறுமை வேறு எதுவும் இல்லை.