எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

வெற்றிக்கு செல்லும் வழி

நீங்கள் அவமதிக்கப்பட்டவரா? பிறரால் அலட்சியப்படுத்தப்பட்டவரா? அவமானங்களை சந்தித்திருக்கிறீர்களா?

இந்த கேள்விக்கெல்லாம் பதில் 'ஆம்' என்றால், நீங்கள் அதிர்ஷ்டசாலி. முன்னேற்றத்திற்கான மூலப்பொருள் உங்களிடம் உள்ளது.

அவமதிப்பு... அலட்சியம்... அவமானம்... இவை நெஞ்சில் நின்று எரியும் நெருப்புகள். அவமதிப்பை வெற்றிக்கான வழியாக்குங்கள்.

அவமதித்தவர்களை பழிவாங்க நினைப்பது அறிவீனம். அவமதித்தவரும் ஏற்கும்படியாக வளர்வதே அங்கீகாரம்.

கவியரசர் கண்ணதாசன் பற்றி அவரது மகன் காந்தி கண்ணதாசன் சொன்ன செய்தி இது :

தனது பதினான்கு வயதில் சினிமாக் கனவுகளோடு சென்னை வந்தார் கண்ணதாசன். அன்று இரவு, தங்க இடம் இல்லாமல் மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே படுத்து உறங்கி இருக்கிறார்.

நள்ளிரவில் ரோந்து போலீசார் அவரை எழுப்பி விசாரித்துள்ளனர். ஒருநாள் மட்டும் தங்க அனுமதி தரும்படி கெஞ்சி கேட்டுள்ளார் கண்ணதாசன்.

'இங்க தங்கனும்னா நாலணா காசு கொடு' என கேட்டிருக்கிறார் காவலர். கொடுப்பதற்கு காசு இல்லாமல் அழுதுகொண்டே சென்றுள்ளார் அவர்.

பின்னர் வளர்ந்து கவியரசாகி 'சுமைதாங்கி' என்கிற சொந்த படத்தை எடுத்தார். அதில் கதாநாயகன் தனியாக நடந்து வருவது போல் ஒரு காட்சி அதே காந்தி சிலை அருகே படமாக்கப்பட்டது.

நள்ளிரவில் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் இரவு ஏழு மணி போல் காட்டவேண்டும் என்பதற்காக வரிசையாக ஏழு கார்களை நிற்க வைத்து காட்சியை எடுத்து முடித்துவிட்டனர்.

வீட்டில் படத்தை பார்த்துக் கொண்டிருந்த கண்ணதாசன் தன் பிள்ளைகளிடம், "இந்த காட்சியில் வரும் கார்கள் அனைத்தும் நம்முடைய கார்கள். வாழ முடியும் என்ற நம்பிக்கையில் சென்னைக்கு வந்த என்னை நாலணா இல்லை என்பதற்காக போலீஸ் நடக்க வைத்தது. ஆனால் இன்று, அதே இடத்தில் என் கார்களை ஓடவிட்டு படம் எடுத்துள்ளேன். என் நம்பிக்கை ஜெயித்துவிட்டது" என்று கூறியுள்ளார்.

எங்கு அவமானப்பட்டாரோ அங்கேயே தன் வெற்றியை அரங்கேற்றியுள்ளார் கவிஞர்.

அவமானம் என்பது மூலதனம். இதைப் புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்.


(வெற்றி நிச்சயம்)