எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

புரியாத பதில்

ஒரு ஊரில் இரண்டு துறவிகள் அவர்களுடைய சீடர்களுடன் வாழ்ந்து வந்தனர். ஒருநாள் சீடர்கள் இருவரும் வெளியே நடந்து சென்றனர்.

அப்போது ஒரு சீடன் மற்றொருவனிடம் "நீ எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?" எனக் கேட்டார்.

அதற்கு மற்றவன், "காற்று எங்கே இழுத்துச் செல்கிறதோ அங்கே" என்றான்.

அதன் அர்த்தம் புரியாத சீடன், குருவிடம் சென்று நடந்ததைக் கூறினான். தன் சீடன் முட்டாளாக்கப்பட்டதை அறிந்த குரு, "நாளையும் நீ அவனிடம் இதே கேள்வியைக் கேள். அவன் இதே பதிலைக் கூறுவான். அப்போது நீ, 'காற்று வீசாத போது என்ன செய்வாய்?' எனக் கேள்" என்று சொன்னார்.

அதே போல் மறுநாள் இரு சீடர்களும் சந்தித்தனர். தன் குரு சொன்னதைப் போல, இன்றும் அதே பதிலைச் சொல்வான் என்ற நம்பிக்கையில், "நீ எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?" எனக் கேட்டான்.

ஆனால் அந்த சீடன் மாறாக, "என் கால்கள் எங்கே செல்கிறதோ அங்கே" என்றான்.

சீடனுக்கு ஏமாற்றமாகப் போயிற்று. குருவிடம் நடந்ததைக் கூறினான். மீண்டும் தன் சீடன் முட்டாளாக்கப்பட்டதை அறிந்த குரு, "நாளையும் நீ அவனிடம் இதே கேள்வியைக் கேள். அவன் இதே பதிலைக் கூறுவான். அப்போது நீ, 'நீ கால்களின்றி ஊனமாகிவிட்டால் என்ன செய்வாய்?' எனக் கேள்" என்று சொன்னார்.

சீடனும் மறுநாள் அந்த சீடனை சந்தித்து, "நீ எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?" எனக் கேட்டார்.

இன்றும் நேற்று கூறிய பதிலைச் சொன்னால், தன் குரு சொன்ன பதிலைச் சொல்ல வேண்டும் என நினைத்த சீடனுக்கு ஏமாற்றமே கிடைத்தது. ஏனென்றால், "காய்கறி வாங்க சந்தைக்கு போகிறேன்" என பதில் சொன்னான் அந்த சீடன்.

இதுதான் உண்மையான வாழ்க்கை. ஒவ்வொரு விநாடியும் வாழ்வியல் முறைகள் மாறிக்கொண்டே வருகிறது. நாமோ இதை கவனிக்காமல் தயாரான பதிலை வைத்துக்கொண்டு பயணிக்க நினைக்கிறோம்.

எதிர்காலத்தை நீங்கள் கணிக்க வேண்டாம். அது எப்படி இருக்கும் என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது.

நீங்கள் நீங்களாக இருங்கள். இன்றைய உலகைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப உங்கள் பயணத்தை வழிவகுத்துக் கொள்ளுங்கள்.


(ஜென் கதைகள்)