எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

நீ நீயாக இரு

துறவி ஒருவர் தன் சீடர்களோடு காட்டின் வழியே போய்க்கொண்டிருந்தார். ஒரு பெரிய அரண்மனை கட்டுவதற்கான வேலை நடந்து கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கானோர் மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர். காடு முழுதும் வெட்டப்பட்டுவிட்டது.
ஒரு பிரம்மாண்டமான மரம் மட்டும் அப்படியே இருந்தது.

நூறு பேருக்கும் அதிகமாக அதன் நிழலில் உட்காரலாம். அவ்வளவு பெரிய மரம் அது. இதைப் பார்த்த துறவி தன் சீடர்களை அனுப்பி, காட்டில் இருந்த மரங்கள் முழுதும் வெட்டிய பின், இந்த ஒரு மரத்தை மட்டும் வெட்டாமல் விட்டு வைத்திருக்கும் காரணத்தை தெரிந்துவரச் சொன்னார்.

அவர்களும் போய், "ஏன் இந்த மரத்தை மட்டும் விட்டு வைத்திருக்கிறீர்கள்?" எனக் கேட்டனர். அதற்கு அவர்கள், "இது உபயோகமில்லாத மரம். கிளைகள் அனைத்தும் வளைந்து நெளிந்து உள்ளது. என்ன செய்வது இதை வைத்துக்கொண்டு? நேராக இருந்தாலாவது தூண்கள் செய்யலாம். அதுவுமில்லை. சிறிய மரச்சாமான்கள் செய்வதும் சிரமம். வெட்டி எரிக்கலாம் என்றால் வெளிவரும் புகையில் கண் கெட்டுப் போகும். இந்த மரத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. அதனால்தான் இதை வெட்டவில்லை" என்றனர்.

சீடர்கள் இந்த பதிலை துறவியிடம் சென்று சொன்னார்கள். அதைக் கேட்ட துறவி,  "பிழைத்திருக்க வேண்டுமானால் இந்த மரத்தைப் போலத்தான் இருக்க வேண்டும். நேராக இருந்தால் வெட்டி தூண் செய்திருப்பார்கள். அழகாக இருந்தால் சந்தையில் விற்றுவிடுவார்கள். நீ நீயாக இரு. பிரயோசனம் இல்லாதவனாக இருந்து அனுபவி. இந்த மரத்தைப்போல் பிரயோசனம் இல்லாமல் இருந்துவிட்டால் யாரும் எந்த தொந்தரவும் செய்யமாட்டார்கள். நன்றாக வளரலாம். நூற்றுக்கணக்கானோர் உன் நிழலில் இளைப்பாறலாம்" என்றார்.

பயனுள்ளதாக வாழ்வதைப் பற்றி நினைக்காதீர்கள். ஆனந்தமாக இருப்பதை எண்ணிப் பாருங்கள். ஆனந்தமாக இருங்கள். அதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கை என்பது ஒரு கவிதையைப் போல், பாடலைப் போல், நடனத்தைப் போல், சாலையோர பூக்களைப் போல் இருக்க வேண்டும். பிறருக்காக இல்லாமல், தன்னையே அனுபவித்துக் கொண்டு தனக்காகவே வாழ வேண்டும்.

(வெற்றியின் அபாயம்)