எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 10 ஆகஸ்ட், 2016

நன்றி சொல்வோம்

பிறர் நமக்கு ஏதேனும் வகையில் உதவி செய்ததை, மனதார ஏற்றுக் கொண்டதை வெளிப்படுத்தும் வார்த்தையே "நன்றி".

ஆனால் இன்று, இயந்திரத்தனமாக நாவிலிருந்து உச்சரிக்கப்படும் வார்த்தையாக உள்ளது.

இதயப்பூர்வமாக சொல்லப்படும் நன்றி, உடல் மொழியாக மாறி கேட்பவரின் இதயத்தை சென்றடையும்.

ஜப்பான் நாட்டில் நடைபெற்ற உண்மை கதை இது. இதனைப் படிக்கும் போது வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் நன்றாக சிந்தித்துப் பார்த்தால்,  சாதரணமாக நன்றி சொல்வதற்கும், மனமார வெளிப்படுத்துவதற்கும் உள்ள வேறுபாடு விளங்கும்.

ஒரு சிறிய ஓட்டல் முதலாளி அவர். காலை எழுந்தது முதல் இரவு உறங்கப் போகும் வரை வேளை இருக்கும். ஆனால் அவருக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். தன் வாழ்வில் ஒருமுறையாவது ஜென் துறவியை சந்திக்க வேண்டும் என்பது அவரது லட்சியம். இது அவர் கடையின் வேலையாட்கள் முதல் வாடிக்கையாளர்கள் வரை அனைவருக்கும் தெரியும்.

ஜென் துறவிகள்  சாதாரணமான குடிமக்களைப் போன்றே உடையணிவார்கள். எனவே அவர்களைக் கண்டுபிடிப்பது கடினம்.

வழக்கம்போல வாடிக்கையாளர்களை கவனித்துக் கொண்டீடிருந்த முதலாளி, இருவர் டீ குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனே அவருக்குள் உற்சாகம் கரை புரண்டோடியது. அவர் நீண்ட நாட்கள் எதிர்பார்த்த ஜென் துறவிதான் அவர்கள் இருவரும்.

முதலாளியின் ஆர்வத்தைப் பார்த்த துறவிகள், அவரை தங்கள் சீடனாக ஏற்றுக் கொண்டனர். ஓட்டல் பொறுப்பை மகனிடம் ஒப்படைத்துவிட்டு துறவிகளோடு செல்ல தயாரானார். அப்போது வாடிக்கையாளர் ஒருவர், "உங்களால் எப்படி இந்த ஜென் துறவிகளை கண்டுபிடிக்க முடிந்தது?" எனக் கேட்டார்.

அதற்கு அவர், "இருகைகளாலும் டீக்கோப்பையைப் பிடித்து, நன்றிப்பெருக்கோடு அருந்தும் விதத்தைப் பார்த்தே கண்டுபிடித்துவிட்டேன்" என்றார் அவர்.

அந்த முதலாளி பிற்காலத்தில் ஜென் துறவியாக மாறி, தன் அறிவுக் கண்ணை திறந்ததன் விளைவாக, "ஜென் டீ மெடிட்டேஷன்" என்ற தியான முறையை உருவாக்கினார்.  ஜப்பான் நாட்டில் இதனை 'ஜென் டீ திருவிழா' என இன்றும் கொண்டாடுகிறார்கள். இதில் கோப்பை டீயை நன்றிப்பெருக்கோடு இருகைகளில் ஏந்தி ரசித்துக் குடிப்பார்கள்.


(மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்)