எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

99-கிளப் உறுப்பினர்கள்

(99-கிளப்பில் நீங்கள் உறுப்பினராக இருக்கிறீர்களா? இதைப் படித்ததும் அதிலிருந்து வெளியேறிடுங்கள். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் பிரேவிசிக்க ஒரு வாய்ப்பு கொடுங்கள்)

முன்னொரு காலத்தில் வாழ்ந்த அரசன் ஒருவன் தன் நாட்டை சிறப்பாக ஆண்டு வந்தான். எல்லா வளங்களும் நிறைந்திருந்த போதும் அவனுக்கு மன நிறைவும், மகிழ்ச்சியும் ஏற்படவில்லை.

ஒருநாள் அவன் அரசவை பணியாளன் மகிழ்ச்சியோடு பாடியபடி வேளை செய்வதை பார்த்தான். ஒரு நாட்டின் தலைவனான நான் மகிழ்ச்சியற்று மனச்சோர்வுடன் இருக்கும்போது, ஒரு சாதாரண வேலையாளோ மிகவும் மகிழ்ச்சியாக இருக்க எப்படி முடிகிறது என்று தோன்றியது. அதை அவனிடம் சென்று கேட்டான்.

அதற்கு அவன், "அரசே, எனக்கோ என் குடும்பத்திற்கோ பெரிதாக எதுவும் தேவைப்படவில்லை. நாங்கள் தங்குவதற்கு ஒரு வீடும், உணவும் இருந்தாலே போதுமானது" என்று சென்னான். ஆனால் அவனுடைய பதில் அரசனுக்கு திருப்தியாக இல்லை. அரசவை அமைச்சர் ஒருவனிடம் நடந்ததைக் கூறினான் அரசன்.

அதைக் கேட்ட அமைச்சர், "அரசே, அந்த வேலைக்காரன் இன்னும் 99-கிளப்பில் பங்குபெறவில்லை என நினைக்கிறேன்" என்றான்.
"99-கிளப்பா? அது என்ன?" என்று அரசன் விசாரித்தான். அமைச்சர் "அதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால், 99 தங்க காசுகளை ஒரு பையில் போட்டு அந்த வேலைக்காரன் வீட்டு வாசலில் வைக்கச் சொல்லுங்கள்" என்றான். அரசனும் அவ்வாறே செய்தான்.

தன் வீட்டு வாசலில் பையைக் கண்ட வேலைக்காரன், அதை வீட்டிற்குள் எடுத்துச் சென்று திறந்து பார்த்தான். உள்ளே இருந்த தங்கத்தைப் பார்த்ததும் மகிழ்ச்சி பொங்கியது. அவற்றை எண்ணத் தொடங்கினான். மொத்தம் 99 காசுகள் இருந்தது. "யாரும் 99 காசுகளை மட்டும் வைத்திருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம். அந்த நூறாவது கடைசி தங்க காசு எங்கே போனது?" என சிந்தித்தான். வீடு முழுவதும் தேடினான். ஆனால் அவனுக்கு அந்த கடைசி தங்க காசு கிடைக்கவில்லை.

களைத்து சோர்ந்தவன் கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தான். எப்படியாவது உழைத்து ஒரு தங்க காசை சம்பாதித்து தன் சேகரிப்பை பூர்த்தி செய்து விட வேண்டும் என தீர்மானித்தான்.

அன்று முதல் அந்த வேலைக்காரனின் வாழ்க்கையே மாறிவிட்டது. அவன் அதிகமாக உழைத்தான். அந்த நூறாவது தங்க காசை உருவாக்க தன் குடும்பத்தினர் யாரும் உதவவில்லை என குற்றம் கூறினான். இப்போதெல்லாம் அவன் வேலை செய்யும் போது பாடுவதே இல்லை.

இந்த மாற்றத்தைக் கண்ட அரசன் திகைத்துப் போனான். இதைப் பற்றிஅமைச்சரிடம் கேட்டான்.

"அரசே, இப்போது அவன் 99-கிளப்பில் அதிகாரப்பூர்வமாக சேர்ந்துவிட்டான். 99-கிளப் என்பது மகிழ்ச்சியாக இருப்பதற்கான வசதி படைத்தும் மன நிறைவு காண முடியாதவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயராகும். அவர்கள் எப்போதுமே கூடுதலான 1-ல் ஆசை வைப்பவர்கள். 'கடைசியாக அந்த ஒன்னு மட்டும் கிடைக்கட்டும். பிறகு நான் மகிழ்ச்சியாக வாழ்வேன்' என தங்களுக்குள் சொல்லிக் கொள்வார்கள்" என விளக்கமளித்தார் அமைச்சர்.

நம் வாழ்வில் உள்ள மிகச் சிறியதை வைத்துக் கொண்டும் நம்மால் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

ஆனால் கொஞ்சம் பெரிதாய், சிறப்புடையதாய் வேறொன்று கிடைத்ததும் நாம் அந்த அதிகத்திற்கு ஆசைப்பட தொடங்கி விடுவோம்.

நாளுக்கு நாள் வளரும் தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் நம் தூக்கத்தை, சந்தோஷத்தை இழக்கிறோம். நம்மைச் சுற்றி இருப்பவர்களை துன்புறுத்துகிறோம்.

இந்த '99-கிளப்'பில் நீங்களும் இருந்தால், உடனடியாக வெளியேறிடுங்கள்.