எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 17 ஆகஸ்ட், 2016

பயன்துக்கார் செய்த உதவி

வீடு வீடாகச் சென்று பொருள்களை விற்கும் ஏழைச் சிறுவன் ஹோவார்டு கெல்லி. ஒருநாள் பள்ளிக்கூடத்தின் வழியே மிகுந்த பசியோடு நடந்து சென்று கொண்டிருந்தான். பக்கத்தில் இருந்த வீட்டிற்கு சென்று சாப்பாடு கேட்கலாம் என தீர்மானித்தான். அழகான இளம் பெண்ணொருத்தி அந்த வீட்டில் இருந்து வெளிப்பட்டதை பார்த்ததும் சாப்பாடு கேட்க மனமின்றி குடிநீர் மட்டும் கேட்டான்.

அவன் பசியில் களைப்படைந்ததை அறிந்த அவள் பெரிய கண்ணாடி தம்ளரில் பால் கொண்டுவந்து கொடுத்தாள். அவன் பாலை குடித்துவிட்டு, "நான் உங்களுக்கு எவ்வளவு பணம் தர வேண்டும்?" எனக் கேட்டான். அவள் "அன்பு காட்ட பணம் பெறும்படி என் அம்மா கற்பிக்கவில்லை" என பதிலளித்தாள். அவன் மனதார நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

பல வருடங்களுக்குப் பிறகு, அந்த பெண் குணப்படுத்த முடியாத ஓர் அரிய நோய்க்கு ஆளானாள். அவளுடைய அரிய வகை நோயை கண்டறிவதற்கு தலைசிறந்த மருத்துவர்கள் பலர் அழைக்கப்பட்டனர்.

டாக்டர். கெல்லியின் உதவியை நாடினர் மற்ற மருத்துவர்கள். கெல்லி அவளைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டார். அவளுடைய உயிரை எப்படியும் காப்பாற்றி விட வேண்டும் என தீர்மானித்தார். அவளுக்கு அளிக்கும் சிகிச்சையில் சிறப்பு கவனம் செலுத்தினார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த நோயை குணப்படுத்தும் வழியை கண்டுபிடித்தார்.

அந்தப் பெண்ணின் சிகிச்சை கட்டணத்திற்கான ரசீதில் எதையோ எழுதி அவளுடைய அறைக்கு அனுப்பி வைத்தார். மருத்துவக் கட்டணம் அதிகமாக இருக்கும் என நினைத்துக்கொண்டே அதைப் பிரித்தபோது அந்த குறிப்பு அவள் கண்ணில் பட்டது.

அதில் "ஒரு கோப்பை பாலைக் கொண்டு உங்கள் கட்டணம் செலுத்தப்பட்டுவிட்டது" என எழுதி கீழே டாக்டர். ஹோவர்டு கெல்லி கையெழுத்தைப் பார்த்தாள்.

பிறருக்கு உதவ பணம் தேவையில்லை. உங்களிடம் உள்ள பொருள்களைக் கூட உபயோகப்படலாம்.

நீங்கள் செய்யும் எதிர்பாராத உதவி தக்க சமயத்தில் உங்களுக்கோ உங்கள் அன்பிற்குரியவர்களுக்கோ விரைவில் பயனளிக்கும்.