எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

எதை நினைக்கிறாயோ...

ஒரு சின்ன ஊர். அங்கே ஒரு பள்ளிக்கூடம். அதிகமாக யாரும் அங்கே படிக்க வருவதில்லை.
பெற்றோர்களுக்கும் அக்கறை இல்லை. ஏதோ பள்ளிக்கூடம் என ஒன்று இருப்பதால், தங்கள் பிள்ளைகளை அங்கே அனுப்பி வைத்தார்கள் அவ்வளவுதான்.

வகுப்புக்கு வந்த ஒரு மாணவன் மிகவும் மந்தமாக உட்கார்ந்திருந்தான். ஆசிரியர் அவனை கவனித்தார்.
"என்னப்பா... இப்படி உக்கார்ந்திருக்கே! படிப்பில் கவனமில்லையா?" எனக் கேட்டார். அவன், "ஐயா! என் கவனமெல்லாம் எங்க வீட்டுலேயே இருக்கு!" என்றான்.

"அப்படி என்ன உங்க வீட்டுல இருக்கு?" எனக் கேட்டார். அவன்,
"ஐயா! நேத்து எங்க அப்பா புதுசா ஒரு பசுமாடு வாங்கிட்டு வந்தார். அதை எங்க வீட்டு வாசல்ல கட்டி போட்டிருக்கார். என் நினைவெல்லாம் பசுமாடு மேலேயே இருக்கு" என்றான்.


ஆசிரியர் கோபமடைந்தார். யோசித்து விட்டு, "தம்பி ! ஒண்ணு செய். நான் உனக்கு ஒரு வாரம் லீவு தர்றேன். நீ நம்ம ஊர் எல்லையில ஒரு மலை இருக்கே, அங்க ஒரு குகை இருக்கு. அதுல போய் உக்கார்ந்துக்க! ஒரு வாரம் பூரா மாட்டை பத்தியே நினை. பிறகு வா ...!" என்றார். அதற்கு அவனும், "சரி.. சார்!" என்று சொல்லிவிட்டு புறப்பட்டான்.

ஆசிரியர் நினைத்து கொண்டார்
"ஆசை தீரும் வரையில் அவன் மாட்டை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பான். பிறகு கொஞ்ச நேரத்திலேயே மறந்து விடுவான்" என்று.

ஒரு வாரம் கழிந்தது .
ஆசிரியர் வகுப்பறையில் நுழைந்தார் .
அந்த மாணவன் வெளியே நின்று கொண்டு இருந்தான்.
அவர் அவனிடம்
"என்னப்பா! மாட்டை பத்தி யோசித்து முடிச்சிட்டியா? இப்போ மாட்டை பத்தின நினைவில்லையே?" எனக் கேட்டார். அவன் இல்லை என தலை ஆட்டினான். 

"அப்பறம் ஏன் இன்னும் வெளியே நிற்கிறாய்?" என்றார்.
அவன், "சார், நான் உள்ளே வரலாம்னு தான் நினைக்கிறேன். ஆனா என் தலைல இருக்கற கொம்பு உள்ள வர முடியாதபடி மேலே இடிச்சிகிட்டு நிக்குது" என்றான்.

ஆசிரியர் திகைத்து நின்றார். மாட்டை பற்றியே சிந்தித்து சிந்தித்து, இவன் தான் அதுவாக மாறிவிட்டதாக உணர்கின்றான்.

விவேகானந்தர் சொல்லுவர் :
"நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய்" என்று.

நாம் யாரை பத்தி அடிக்கடி நினைத்து கொண்டு இருக்கிறோமோ, பேசி கொண்டு இருக்கிறோமோ அவர்களுடைய குணாதிசயம் நமக்கு வந்துவிடும். நாம் அவர்களாகவே மாறுகிறோம்.