எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

இப்படியும் சிலர்!!!

ஒரு வயதான முதியவர் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றார். வெயிலில் வந்த களைப்பு, அவர் முகத்தில் தெரிந்தது. அவர் அங்கு ஓர் இடத்தில் அமர்ந்து சர்வரை அழைத்து, "தம்பி! இங்கு சாப்பாடு என்ன விலை?" என்று கேட்டார். 

அதற்கு சர்வர் "50 ரூபாய்" என்றான். பெரியவர் தனது சட்டை பைக்குள் கை விட்டு பார்த்து விட்டு சர்வரிடம், "தம்பி அதற்கும் சற்று குறைவாக சாப்பாடு கிடைக்காதா?" என்றார்.


சர்வர் கோபமாக, "யோவ் ஏன்யா இங்க வந்து எங்க உயிர எடுக்கிறிங்க? இதை விட மலிவான ஹோட்டல் எவ்வளவோ இருக்கு அங்க போய் தொலைங்கயா" என்றான். பெரியவர், "தம்பி தெரியாமல் இங்கு வந்துவிட்டேன். வெளியே வெயில் வேறு அதிகமா இருக்கு. நான் இனி வேறு ஹோட்டலுக்கு செல்வது சற்று சிரமம்" என்றார்.

சர்வர், "சரி எவ்வோ பணம் குறைவா வச்சுயிருக்கீங்க?" என்று கேட்டான். பெரியவர், "என்னிடம் 45 ரூபாய் தான் இருக்கிறது" என்றார். சர்வர், "சரி தருகிறேன். ஆனால் உனக்கு தயிர் இல்லை. சரியா?" என்றான்.

பெரியவர் 'சரி' என சம்மதித்தார். அவனும் சாப்பாடு கொடுத்தான். பெரியவர் சாப்பிட்டு விட்டு அந்த சர்வரிடம் 50 ரூபாய் தாளைக் கொடுத்தார். சர்வர் மேலும் கோபம் ஆனான். "யோவ் 50 ரூபாய் வச்சுகிட்டு 45 ரூபாய் தான் இருக்கு'னு ஏன் சொன்ன? ஓ.. வெற்றிலை, பாக்கு வாங்குறதுக்கு 5 ரூபாய் தேவைப்படுதா? இந்தா மீதி 5 ரூபாய்" என்று மீதியை கொடுத்தான்.


பெரியவர், "வேண்டாம் தம்பி. அது உனக்குத் தான்! உனக்கு கொடுக்க என்னிடம் வேறு பணம் இல்லை" என்று சொல்லிவிட்டு வெயிலில் நடந்து சென்றார். சர்வருக்கு கண்களில் நீர் ததும்பியது.

யாரேனும் எந்த சூழ்நிலைகளில் எப்படி இருப்பார்கள் என்று நமக்கு தெரியாது! யாரையும் ஏளனமாக பார்ப்பதும் பேசுவதும் தவறு.