எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 22 நவம்பர், 2016

தவறவிட்டவர்கள்!!!

ஆற்றங்கரை ஓரமாக வந்துகொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது. அது வைரம் என்றறியாமல், 'விலை போகுமா?' என்ற சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான்.

அவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த
வியாபாரி ஒருவன், இருபது ரூபாய்க்கு தன்னிடம் அதை விற்குமாறு கேட்டான். ஆனால் வழிபோக்கனோ, 'பேரம் பேசித்தான் பார்ப்போமே' என்ற எண்ணத்துடன் 25 ரூபாய் கேட்டான். ஐந்து ரூபாய் அதிகம் கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும் 20 ரூபாய்க்கு பேரம் பேசினான்.


இதைக் கவனித்த மற்றொரு வியாபாரி 25 ரூபாய் கொடுத்து அந்த வைரைத்தை வாங்கிக்கொண்டு சென்றான்.
ஆத்திரமடைந்த வியாபாரி, அந்த வழிப்போக்கனை பார்த்து, “அட முட்டாளே! அதன் மதிப்பு பல ஆயிரம் பெறும். அறிவில்லாமல் விற்றுவிட்டாயே!” என்று திட்டினான்.

அதற்கு அவன், “அந்தக் கல்லுக்கு என்னுடைய மதிப்பு அவ்வளவுதான். ஆனால் அது வைரம். அதன் மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான் மிகப்பெரிய முட்டாள்” என்றான்.

சிலர் இப்படித்தான் உண்மையான மதிப்பு தெரிந்தும், கிடைத்ததை விட்டுவிட்டுத் தவிக்கிறார்கள்...!