எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 28 நவம்பர், 2016

தவறான எண்ணம்...

ஒரு துறவி ஒருநாள் நல்ல வெயிலில் நடந்து சென்றார். அப்போது அவரது செருப்பு அறுந்து போயிற்று. தொடர்ந்து நடக்க முடியாதவராக அருகே இருந்த செருப்பு தைப்பவனிடம் சென்றுகொடுத்தார். 

அவரோ அந்தச் செருப்பைப் பார்த்துவிட்டு, "ஐயா நிறைய தைக்கவேண்டியிருக்கிறது. நீங்கள் உங்கள் செருப்பை என்னிடம் தந்துவிட்டுச் செல்லுங்கள். நான் தைத்து வைக்கிறேன்" என்றார்.

துறவி அந்த செருப்புத் தைப்பவரிடம், "ஐயா! இந்த செருப்பை உங்களிடம் கொடுத்து விட்டு, இப்போது வெயிலில் நான் எவ்வாறு நடந்துபோவேன்?" என்றார். 


அதற்கு அந்த செருப்பு தைக்கும் தொழிலாளி, "ஐயா! உங்களுக்கு வேண்டுமானால் நான் வேறு செருப்புத் தருகிறேன். இதை அணிந்துகொண்டு செல்லுங்கள். மாலை வரும்போது இந்தச் செருப்பைத் தந்துவிட்டு, உங்கள் செருப்பைப் பெற்றுச் செல்லுங்கள்" என்றார்.

ஒரு நொடி சிந்தித்த அந்தத் துறவி,
"என்ன இன்னொருவர் செருப்பை நான் அணிவதா?" என்று சிந்தித்தார். அவர் மனதில்,
“இன்னொருவர் செருப்பை அணிவதற்கே இவ்வளவு சிந்திக்கிறோமே! இன்னொருவர் பற்றிய தவறான எண்ணங்களையும்,
அவர் மீதான கோபத்தையும்,
பொறாமையையும் இறக்கி வைக்காமல் தூக்கி சுமக்கிறோமே!!" என்று தோன்றியது.

இன்னொருவர் பற்றிய தவறான எண்ணங்களை நம் மனதில் சுமப்பது, இன்னொருவர் செருப்பை அணிவதுபோல இழிவானது