எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 16 நவம்பர், 2016

இடம்... பொருள்... ஏவல்...

நீதிபதி அவனை எந்த உணர்ச்சியும் இல்லாமல் பார்த்தார். “இந்தாப்பா. விசாரணை முடிஞ்சாச்சு. நீ ஏதாவது சொல்லனுமா?” என்றார். அவன் இல்லை என்று தலையாட்டினான்.

செய்யாத தப்புக்கு தண்டனை என்பதை விட, 'இரண்டு வருஷம் ஜெயிலில் இருக்கணுமா?' என்ற  அவஸ்தை தான் அவனுக்கு பெரிசாய் தெரிந்தது. ஜெயில் முதல் இரண்டு நாளைக்குத்தான் போரடித்தது. அப்புறம் சகஜமாகி விட்டது.

அன்றைக்கு நல்ல தூக்கம். முதுகில் ஏதோ ஏறுவதைப் போல் இருந்தது. உதறி எழுந்தான். அந்த மெல்லிசான வெளிச்சத்திலும் தரையில் ஒரு கட்டெறும்பு தெரிந்தது. லேசாக மினுமினுப்புடன் ஒரு கட்டெறும்பு. இதுவரை பார்த்ததில்லை. தூக்கம் கலைந்த ஆத்திரத்தில் அதை நசுக்க காலை நகர்த்தினான். “ஏய் என்னை கொல்லாதே” என ஒரு சத்தம் கேட்டது.

எறும்பு பேசியது !!! தரைக்குக் குனிந்தான். ”நான்தான் பேசினேன். கொஞ்சம் என்னை தூக்கி வச்சிக்கோ சொல்றேன்” என்றது எறும்பு. உள்ளங்கையில் அதை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தான். பிரமிப்பு நீங்காமல், “ஆமா.. நீ எப்படி பேசறே?” என்றான்.


”அதெல்லாம் உனக்கு எதுக்கு? நான் உன்னோட இங்கேயே இருக்கேன். உனக்கு பேச்சு துணையா” என்றது.
தனிமை தொலைந்த சந்தோஷம்!!! பேசும் எறும்பு!!!

அவனுக்கு தூக்கம் வரவில்லை. 
வெளியில் போனதும் இந்த எறும்பை வைத்து பெரிசா சம்பாதிக்கனும் என திட்டமிட்டான். யோசனை விரிவாகியது. மிச்சம் இருந்த நாளெல்லாம் எறும்புக்கு வித விதமாக பேச சொல்லிக் கொடுத்தான். சின்னதாய் ஒரு பாட்டு பாடும் அளவுக்கு எறும்பு தேறி விட்டது. சில நாட்களில் அவனும் விடுதலை ஆனான். 

முதல் வேலையாய் 'எறும்பு ஷோ' நடத்தணும் என்ற நினைப்பில் நடந்தவனுக்கு ஒரு நல்ல ஹோட்டல் கண்ணில் பட்டது. உள்ளே நுழைந்தான். டிபன் ஆர்டர் செய்துவிட்டு பாக்கெட்டில் இருந்து அந்த எறும்பை எடுத்து டேபிளில் விட்டு ஒரு காலி டம்ளரை கவிழ்த்து அதை பத்திரமாக்கினான். 

சர்வர் டிபன் கொண்டு வந்து வைத்துவிட்டு, சிநேகமாய் பார்த்து சிரித்தான். இந்த சர்வர் தான் பேசும் எறும்பை பார்க்க போகும் முதல் ஆள் என்று நினைத்து கவிழ்த்த காலி டம்ளரை திறந்து எறும்பைக் காட்டி, “இங்கே பார்” என்றான் பெருமையாக. சர்வர் தாமதிக்காமல் தனது நாலு விரலையும் சேர்த்து ஒரு அடி அடித்தார். அந்த எறும்பு நசுங்கி செத்துப் போனது.

எந்த ஒரு செயலை செய்வதற்கும் இடம், பொருள், ஏவல் முக்கியம். தக்க சமயத்தில், சரியான பொருளுடன் இடப்படும் கட்டளையானது, நிச்சயம் நல்ல முடிவையே தரும்.