எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 17 அக்டோபர், 2016

வண்ணமும்... எண்ணமும்...

அமெரிக்காவில் உள்ள பள்ளிக்கூட வாசலில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு பலூன் வியாபாரி வண்ண வண்ண பலூன்களைப் பறக்கவிட்டிருந்தான். தன் வியாபாரம் குறையும் போதெல்லாம் கொத்துக் கொத்தாக சில பலூன்களை வானத்தில் பறக்க விடுவான். அதைப் பார்த்த குழந்தைகள் சந்தோஷமாக, கூட்டம் கூட்டமாக அவனை நோக்கி ஓடி வருவார்கள். வியாபாரம் பிரமாதமாக நடந்தது.

அவனிடம் பச்சை, நீலம், சிகப்பு, மஞ்சள், கருப்பு என பலவித வண்ணங்களில் பலூன்கள் இருந்தன. குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கினர். ஆனால் எந்த குழந்தையும் கறுப்பு நிற பலூனை மட்டும் கேட்கவே இல்லை. அது சோகமாய் வண்டியிலேயே குதித்துக் கொண்டிருந்தது.


ஒரு குழந்தை பலூன் வியாபாரியை பார்த்து, "உயரத்தில் பறக்கும் மற்ற நிற பலூன்கள் மாதிரி இந்த கருப்பு பலூனும் பறக்குமா? அல்லது கறுப்பால் உயரமாக பறக்க முடியாதா?" எனக் கேட்டது.

வியாபாரி சிரித்துக் கொண்டே, "கறுப்பாக இருப்பது உயரப் பறப்பதற்கு ஒரு தடையே அல்ல. மற்ற வண்ண பலூன்களைப் போன்றே கறுப்பு பலூனும் உயரத்தில் பறக்கும். உள்ளே இருக்கும் காற்றுதான் முக்கியம்" என்றான்.

அந்த குழந்தை, "அப்படியானால் அந்த கறுப்பு பலூனை எனக்கு தாருங்கள்" என்று மகிழ்ச்சியாக வாங்கிச் சென்றது. 

அந்தக் குழந்தை யார் தெரியுமா?

அமெரிக்காவின் நிறவெறியை தகர்த்து உடைத்த மார்ட்டின் லூதர் கிங்.


உங்கள் நிறத்தை, அழகை, அறிவை மற்றவர்களோடு ஒப்பிட்டு, தாழ்வாக நினைத்திருக்கிறீர்களா?

தாழ்வு மனப்பான்மை என்னும் பூதம் உங்களுக்குள் இருந்தால், அதை கொன்று விட்டு வெளியே வாருங்கள். ஒரு அற்புதமான வாழ்க்கை உங்களுக்காக காத்திருக்கிறது...