எனது வலைப்பதிவு பட்டியல்

சனி, 15 அக்டோபர், 2016

கனவுகள் மெய்படும்...

அவன் ஒரு உறுதியான இளைஞன். நிறைய சாதிக்க வேண்டும் என்ற வெறி அவனிடம் இருந்தது. ஆனால், அவன் அப்பா ஒரு சாதரண நெசவாளி. சராசரி அப்பாவின் மனநிலையில் தனது தொழிலில், தன் மகனையும் சிக்க வைக்க அவர் தீர்மானித்தார். அவனும் சிக்கிக் கொண்டான். அவன் கைகள் ஆடைகளை நெசவு செய்தபோதும் மனமோ கனவுகளை நெசவு செய்தது!

என்றாவது, எதிலாவது சாதிக்க வேண்டும் என்பதில் அவன் தெளிவாக இருந்தான். அவனுக்கு கடல் பயணம் மிகவும் பிடிக்கும். தன் நாட்டில் இருந்து, தரை மார்க்கம் தவிர, கடல் வழியாக இந்தியாவை அடைய வேண்டும் என்ற கற்பனையில் ஆழ்ந்தான். அதற்கான முயற்சியிலும் ஈடுபடத் தொடங்கினான்.


பல நாட்டு அரசர்களை சந்தித்தான். ஆனால் அவனுக்கு உதவ யாரும் தயாராக இல்லை. பத்து வருட போராட்டத்திற்கு பின், ஸ்பெயின் நாட்டு அரசி இஸ்பெல்லாவுக்கு அவன் மேல் நம்பிக்கை வந்தது. மூன்று கப்பலும், பயணத்திற்கு தேவையான பொருள்களையும் தந்து உதவினாள்.

அடுத்த பிரச்சனை ஆரம்பமாயிற்று. முன்பின் தெரியாத கடல்வழி பயணத்திற்கு, உயிரைப் பணயம் வைக்க எந்த கப்பல் மாலுமியும் தயாராக இல்லை. சிறை தண்டனைக் கைதிகளை அழைத்துப் போக தீர்மானித்தான். காற்றையும், கடலையும் கிழித்துக் கொண்டு அவன் கனவுப் பயணம் ஆரம்பமானது.

அடுத்த குழப்பம் தொடங்கியது. கிழக்கே இருக்கும் இந்தியாவை அடைய புறப்பட்ட பயணம் வழி தவறி மேற்கே நோக்கி சென்று விட்டது. ஆனால் அந்த தவறான பயணம் தான் 'அமெரிக்கா' என்ற நாட்டை கண்டுபிடிக்க காரணம் ஆயிற்று. அந்த ஏழை நெசவாளி - கொலம்பஸ் கண்ட கனவு நிஜமானது. ஒரு புதிய சரித்திரம் உருவானது.

நம்பிக்கை உள்ளவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பதும் நிரூபணமாயிற்று.

எதையாவது சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தால், கொலம்பஸ் மாதிரி அமெரிக்காவை கண்டுபிடிக்க வேண்டாம்... உங்களுக்குள் ஒளிந்திருக்கும் கொலம்பஸை கண்டுபிடியுங்கள்...