எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

கணிப்போம்... புறக்கணிப்போம்...

கோடிக்கணக்கான சொத்தை அப்படியே விட்டு விட்டு, ஆசையை துறந்து ஆன்மீகத்தில் ஈடுபட்ட பட்டினத்தாரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் இது.


ஒருநாள் பட்டினத்தார் வயல் வரப்பில் தலையை வைத்து படுத்திருந்தார். அந்த வழியாக இரண்டு பெண்கள் நடந்து வந்தார்கள். அவர்களில் ஒருத்தி, "யாரோ மகான் போல் உள்ளது" என்றபடி அவரை வணங்கி, வரப்பிலிருந்து இறங்கி கீழே நடந்தாள்.

மற்றொருத்தியோ, "தலையணை வச்சு தூங்குற சுகம் மாதிரி வரப்புல படுத்து தூங்குறான். ஆசை பிடிச்சவன். இவனெல்லாம் சாமியாரா?" என கடுமையாக தாக்கி பேசினாள். அவர்கள் அங்கிருந்து போனதும் எழுந்து உட்கார்ந்தார் பட்டினத்தார். "இந்த அறிவு இது நாள் வரை நமக்கு வரவில்லையே!" என நினைத்து வரப்பிலிருந்து இறங்கி, கீழே தலையை வைத்து படுத்தார்.

சற்று நேரம் கழித்து, மீண்டும் அந்த இரண்டு பெண்கள் அதே வழியில் வந்தனர். கீழே படுத்திருந்த பட்டிணத்தாரை பார்த்து, முதல் பெண் "நீ சொன்னதை கேட்டு, கீழே இறங்கி படுத்துட்டாரு. இவர் பெரிய மகான் தான்" என்றாள்.

ஆனால் மற்றொருத்தி, "தன்னைப் பத்தி யாரு என்ன பேசுறாங்கன்னு கேட்டு, அதைப் பத்தி கவலைப்படுறான். இவனெல்லாம் ஒரு சாமியாரா?" என்றாள். இதைக் கேட்ட பட்டினத்தாருக்கு தலை சுற்றியது. 

நாம் எப்படி இருந்தாலும் உலகம் நம்மை விமர்சிக்கும்.

தரமானவர்களின் விமர்சனங்களை மதிக்க வேண்டும். நாம் பாதிக்கப்பட வேண்டும் என்றே பிறர் செய்யும் விமர்சனங்களால் நாம் பாதிக்கப்படக் கூடாது. அப்படிப்பட்ட விமர்சனங்களை புறக்கணியுங்கள்.