எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

நல்லவனா??? கெட்டவனா???

கடவுள் மிகவும் கோபக்காரர்.
ஒருநாள்  அவர் கோமோரா மற்றும் சோடாம் நகர
மக்கள் மீது கோபம் கொண்டு அந்த நகரங்களை அழிக்க முடிவு செய்கிறார். அப்போது ஒரு ஹசிடீஸ் ஞானி கடவுளை
அணுகி, "சோடாம் நகரத்தில் ஒரு நூறு நல்லவர்களும் ஒரு ஆயிரம் கெட்டவர்களும் இருப்பதாக வைத்துக்கொண்டால் நீங்கள் அந்த நகரத்தை அழிக்கும்போது அந்த நூறு நல்லவர்களும் சேர்ந்து அழிந்து போவார்கள் அல்லவா?" எனக் கேட்டார்.

கடவுள் யோசித்தார். "நான் இப்படி
சிந்திக்கவில்லை. சரி போகட்டும், நான் அழிக்காமல் விடுகிறேன், ஆனால் நீ எனக்கு நூறு நல்லவர்களை காட்ட வேண்டும்" என்றார்.

ஞானி, "பொறுங்கள். என்னால் நூறு பேர்களை காட்ட முடியாமல் போகலாம். ஆனால் பத்து நல்லவர்கள் மட்டும் இருந்தால் அந்த நகரத்தை அழிப்பது முறைதானா? நீங்கள் அந்த நகரத்தை அழிக்கும்போது அந்த பத்துபேரும் சேர்ந்து அழிந்து போவார்களே!" என்று கேட்டார்.

கடவுள், "நான் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். சரி நூறோ பத்தோ எண்ணிக்கை முக்கியமல்ல. ஆனால் நீ எனக்கு பத்து நல்லவர்களை காட்ட வேண்டும்" என்றார்.

ஞானி, "சிறிது பொறுங்கள். இன்னும் ஒரே ஒரு கேள்வி பாக்கியிருக்கிறது. ஒரே ஒரு நல்லவன் இருந்தால் நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நூறாயிரம் மக்களின் கெட்டதனத்தை விட ஒரே ஒரு நல்லவனின்
நல்லதன்மை மதிப்பு வாய்ந்தது அல்லவா? கேடு நினைப்பது ஒரு எதிர்மறையான குணம் அதற்கு
மதிப்பு கிடையாது. ஆனால் நல்லதன்மைக்கு மதிப்பு உண்டல்லவா? நீங்கள் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இருக்கக்கூடாது. அந்த ஒரு நல்லவனை நீங்கள் ஒதுக்கி விட
முடியாது" என்றார்.

கடவுள், "உன்னுடைய தர்க்கம்
சரியானதுதான். ஆயிரமோ, நூறோ, ஒரே ஒருவனோ, நான் நல்லவர்கள் பக்கம்தான். ஆனால் நீ ஒரு நல்லவன் இருக்கிறான் என்பதை நிரூபித்தாக வேண்டும்" என்றார்.

ஞானி, "இதோ நானிருக்கிறேன். நான் வேறு எங்கும் போக வேண்டிய அவசியமில்லை. என்னால் ஆயிரம் பேர்களையோ, நூறு பேர்களையோ கண்டு பிடிக்க
முடியாமல் போகலாம். நான் நல்லவனான கணத்திலிருந்து
யாரையும் நல்லவன் கெட்டவன் எனப்பிரிப்பதுப் பார்ப்பதை நான் நிறுத்திவிட்டேன். என்னைப் பொறுத்தவரை எல்லோரும்
நல்லவரே! 

நான் யாரிடமும் கெட்டதனத்தை பார்ப்பதில்லை. ஏனெனில் கெட்டதன்மை என்பது ஒரு
நிழல் போன்றது. மேலும் அது ஒரு மனிதனின் உண்மை தன்மை ஆகாது. கெடுதல் உண்டாக்கும்
செயல்களை அவன் செய்திருக்கலாம். ஆனால் அது அவனது இருப்பையே கெடுத்திருக்காது. நல்லவன் கெட்டவன் என்பதை எப்படி தீர்மானிக்க முடியும்? 

தீர்மானிக்க வழியே இல்லை. சில நேரங்களில் மிக அழகானவர்களாக, நல்லவர்களாக,
புனிதர்களாக இருக்கும் மக்கள் செய்யும் செயல்கள் சில நேரங்களில் கெடுதலாக தோன்றுகிறது. மன்னிக்க
முடியாத விஷயமாக ஆகிறது. 

அதனால்தான் நான் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வந்தேன். நான் இரண்டு
நகரங்களிலும் இருக்கிறேன். வருடத்தில் பாதி நாள் அந்த நகரத்திலும் மீதி நாள் இந்த
நகரத்திலும் இருப்பேன். என்னையும் சேர்த்து நீங்கள் அழித்து விடப் போகிறீர்களா?"
எனக் கேட்டார்.

இதன்பின் கடவுள் அந்த இரண்டு
நகரங்களையும் அழிக்கும் எண்ணத்தை கைவிட்டு விட்டதாக ஹசிடீஸ் கதை கூறுகிறது.


நீ நல்லவனாகும்போது, நீ
தீர்மானிப்பதை விட்டு விடுகிறாய் மக்களை எடை போடுவதை விட்டு விடுகிறாய். ஏனெனில்
எடை போடுவது செயல்கள் மூலம்தான்.  
செயல்கள் நீர்மேல் வரையும் கோலம்
போன்றது. அதை நீ முடிக்கும் முன்னே அது அழிந்து விடும். இருப்பு செயல்களை கடந்தது.
அது அழியாதது. நீ செய்வதை பொறுத்தது அல்ல அது. நீ யார் என்பதே கேள்வி.