எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 21 அக்டோபர், 2016

சிறந்த மனிதன்!!!

ஒரு பேராசிரியர் இருந்தார். பாரீஸ் பல்கலைக்கழகத்தின், தத்துவத் துறையின் தலைவர் அவர். ஒருநாள் தன் மாணவர்களிடம், "நான்தான் இந்த உலகத்திலேயே மிகச் சிறந்தவன்" எனக் கூறினார். மாணவர்களால் இதை நம்பமுடியவில்லை. 

பல்கலைக்கழகத்திலேயே மிக அலட்சியப்படுத்தப்பட்ட துறை அவர் துறை தான். அவரிடம் படிப்பதற்கு கூட யாரும் வரமாட்டார்கள். அவர் சொன்னதைக் கேட்டு சிரித்துக் கொண்டே, "நீங்கள் தான் உலகத்தில் மிகச் சிறந்தவரா? அப்படியானால் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்கள் எல்லோரும் சிறந்தவர்கள் இல்லையா?" எனக் கேட்டனர்.

அவர், "பொறுங்கள். நான் ஆதாரம்  இன்றி எதையும் சொல்லமாட்டேன். இதை நிரூபித்து காட்டுகிறேன்" என்று சொல்லிவிட்டு சென்றார். மறுநாள் வகுப்பிற்கு உலகவரைபடத்தை கொண்டு வந்தார்.


மாணவர்களை அழைத்து, "உலகத்திலேயே மிகச் சிறந்த நாடு எது?" எனக் கேட்டார். 
"பிரான்ஸ்" என்றார்கள். காரணம் அவர்கள் அனைவரும் பிரெஞ்சுக்காரர்கள்.

"பிரான்ஸில் மிகச் சிறந்த நகரம் எது?" என்றார்.
"பாரிஸ்" என்றார்கள். அவர்கள் எல்லோரும் பாரீஸ் நகரத்தை சேர்ந்தவர்கள்.

"பாரீஸில் மிகச் சிறந்த இடம் எது?" என்றார்.
"பல்கலைக்கழகம்" என்றார்கள். பாரீஸின் புகழ் பெற்ற அறிவுக் கோவில் அது.

"பல்கலைக்கழகத்தில் சிறந்த துறை எது?" என்றார். 
"தத்துவத் துறை" என்றார்கள். அதுதான் மிகப் பழமையான துறை.

"நான்தானே அந்த துறையின் தலைவர். அப்படியானால் நான் தான் உலகின் மிகச் சிறந்த மனிதர்" என்றார்.

இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறந்தவர்கள் தான். அதை உணர்ந்துவிட்டால், எத்தகைய சூழ்நிலையும் எதிர்கொள்ளும் சக்தி தானாக வந்துவிடும்.