எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 27 அக்டோபர், 2016

புத்தரின் வாழ்வில்...

புத்தர் ஞானத்தை பற்றி தெரிந்து கொள்ள கிளம்புவதற்கு முன்தினம்தான் அவருக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தது. தனது வாரிசை, கிளம்புவதற்குமுன் ஒருமுறை காண விரும்பினார். அதனால் அவர் தனது மனைவியின் அறைக்கு சென்றார். அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். குழந்தை போர்வைக்குள் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.

அவர் போர்வையை விலக்கி குழந்தையின் முகத்தை ஒரு முறை காண நினைத்தார். ஏனெனில் அவர் திரும்ப வராமலும் போகலாம். அவர் புரிபடாத யாத்திரைக்குச் செல்கிறார். அவருக்கு என்ன நடக்கும் என்று அவருக்கே தெரியாது.

ஆனால் அவர் தனது குழந்தையின் முகத்தை பார்க்கவில்லை. ஏனெனில் யசோதரா எழுந்து அழுது, "நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எதற்கு இந்த துறவறம்?
நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?" என்று கதற தொடங்கிவிட்டால் என்ன செய்வது என்று பயப்பட்டார். அவள் முழு அரண்மனையையும் விழிக்க வைத்துவிடக் கூடும். தந்தை வந்துவிடுவார். எல்லாமும் முடிந்துவிடும். அதனால் அவர் நழுவி சென்றுவிட்டார்.


பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகு, ஞானமடைந்தபின் அவர் செய்த முதல் வேலை, தந்தையிடம், மனவியிடம், பனிரெண்டு வயதடைந்த மகனிடம் மன்னிப்பு கேட்க திரும்பி வந்ததுதான்.
அவர்கள் கோபமாக இருப்பார்கள் என்பதை அவர் அறிவார். தந்தை மிகவும் ஆத்திரமாக இருந்தார். புத்தரை பார்த்தவுடன், அரைமணி நேரம் திட்டி தீர்த்தார். 

பின் திடீரென 'தான் கூறிய எந்த விஷயமும் தன் மகனை தொடவில்லை. அவன் ஒரு பளிங்குச்சிலை போல
நிற்கிறான்' என்பதை உணர்ந்தார்.
தந்தை தன்னை கவனித்தவுடன் புத்தர், “இதைத்தான் நான் விரும்பினேன். கண்ணீரை  துடைத்துக் கொள்ளுங்கள். என்னைப் பாருங்கள். அரண்மனையை விட்டு சென்றபோது இருந்தவன் அல்ல நான். உங்களது மகன் முன்னரே இறந்து விட்டான். நான் தோற்றத்தில் உங்களது மகன்போல இருக்கலாம். ஆனால் எனது இருப்பு மிகவும் வேறுபட்டது. என்னைப் பாருங்கள்” என்றார்.

“நான் பார்த்துக் கொண்டிருந்தேன், அரைமணி நேரம் நான் உன்னைத் திட்டிக் கொண்டிருந்தேன். நீ எதுவுமே பேசவில்லை. நீ எவ்வளவு ஆத்திரக்காரன் என்று எனக்குத் தெரியும். உன்னால் அமைதியாக இருந்திருக்க முடியாது. இப்படி அமைதியாக இருந்தவிதமே நீ மாறிவிட்டாய்
என்பதை காட்டுகிறது. உனக்கு என்ன நிகழ்ந்தது?” என்று கேட்டார்.

புத்தர், “சொல்கிறேன். அதற்குமுன் நான் போய் என் மனைவியையும் மகனையும் பார்த்துவிட்டு வருகிறேன். நான் வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். அவர்கள் எனக்காக காத்திருப்பார்கள்” என்றார்.

அவரை பார்த்தவுடன் அவர் மனைவி, “நீங்கள் மாறியிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. இந்த பனிரெண்டு வருடங்கள் மிகவும் துன்பமான காலங்கள். நீங்கள் சென்று விட்டதல்ல காரணம். நீங்கள் என்னிடம் எதுவும் சொல்லாமல் சென்றதே காரணம். நான் உண்மையை தேட செல்கிறேன் என என்னிடம் கூறியிருந்தால் நான் உங்களை தடுத்து நிறுத்தியிருப்பேன் என நினைத்தீர்களா?

நீங்கள் என்னை கேவலப் படுத்தி விட்டீர்கள். நான் உங்களை தடுத்து நிறுத்தியிருக்க மாட்டேன்.  நான் நீங்கள் செல்ல அனுமதித்திருப்பேன். நான்
உங்களுக்கு விடை கொடுத்து, தேர் வரை வந்து வழியனுப்பி வைத்திருப்பேன்.
நீங்கள் அடைந்திருப்பது எதுவோ அதை இங்கிருந்தே அடைந்திருக்க முடியாதா என்பதுதான் இந்த பனிரெண்டு வருடங்களும் உங்களை நான் கேட்க துடித்துக் கொண்டிருந்த கேள்வி. இந்த அரண்மனை நீங்கள் ஞானம் பெறுவதை தடுத்து நிறுத்தி விடுமா?” என்று கேட்டாள்.

இது மிக புத்திசாலித்தனமான கேள்வி. இதை கௌதம புத்தர் ஏற்றுக் கொள்ள வேண்டி வந்தது. “நான் இங்கிருந்தே அடைந்திருக்கலாம். ஆனால் அப்போது எனக்கு எதுவும் தெரியாது. இப்போது
என்னால் ‘இங்கிருந்தே அடைய முடியும், எந்த மலைகளுக்கும் செல்ல வேண்டியதில்லை, எங்கேயும் செல்ல
வேண்டியதில்லை’ என இப்போது சொல்ல முடியும். 

ஆனால் அப்போது இதைப்
பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே.
நான் உன்னைப் பற்றியோ உன் தைரியத்தைப் பற்றியோ சந்தேகபடவில்லை.  நீ
எழுந்துவிட்டாலோ, நம் குழந்தையை நான் பார்த்துவிட்டாலோ, “நான் என்னுடைய பொறுப்புகளிலிருந்து தப்பிப் போவதா? என்று நான் யோசிக்க ஆரம்பித்து விடுவேன். என்னுடைய தந்தை விழித்துக் கொண்டு விட்டாலோ என்னால் போகவே முடியாது. நான் என்னைத்தான் நம்பவில்லை. உண்மையில் நான் என்னைப் பற்றித்தான் சந்தேகப்பட்டேன். என்னை மன்னித்துவிடு” என்று கூறினார்.

யசோதரா, “இதோ உங்கள் மகன், இவன் உங்களைப் பற்றிக் கேட்கும்
போதெல்லாம் நான், “பொறு, அவர் திரும்பி வருவார். அவரால் மனிததன்மையற்று, கருணையின்றி, கொடூரமாக நடந்து கொள்ள முடியாது. ஒரு நாள் அவர் திரும்பி வருவார். அவர் எதை உணர சென்றிருக்கிறாரோ அதற்கு நாள் பிடிக்கும். ஆனால் அதை உணர்ந்த உடனே அவர் செய்யும் முதல் விஷயம் இங்கே திரும்பி வருவதுதான்” என பதில் கூறுவேன். உங்களது மகனுக்கு நீங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள்? அவனுக்கு உயிர் கொடுத்திருக்கிறீர்கள். வேறு என்ன அவனுக்கு கொடுக்கப் போகிறீர்கள்?”
என்று கேட்டாள்.

புத்தரிடம் பிச்சைப் பாத்திரத்தை தவிர வேறு எதுவும் இல்லை. அவர் தனது மகனை அருகில் அழைத்தார்.
ராகுலை அருகில் அழைத்து பிச்சைப் பாத்திரத்தை அவன் கையில் கொடுத்தார். “என்னிடம் வேறு எதுவும் இல்லை. இதுதான் என்னிடமுள்ள ஒரே விஷயம். இனிமேல் நான் என் கைகளையே பிச்சைப் பாத்திரமாக உபயோகப் படுத்தி பிச்சை எடுத்துக் கொள்வேன். இந்த
பிச்சைப் பாத்திரத்தை உனக்கு கொடுத்ததன் மூலமாக நான் உனக்கு சந்நியாசம் கொடுத்துவிட்டேன். நான் கண்டறிந்த மிகப் பெரிய அரிதான விஷயம் இதுதான். நீயும் இதை
கண்டறிய வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்றார்.

அவர் தனது மனைவியிடம், “நீயும் எனது சந்நியாசிகளின் கூட்டத்தில் ஒரு பாகமாக தயாராகு” என்றார். தனது மனைவிக்கும் தீட்சையளித்தார்.