எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 23 பிப்ரவரி, 2017

உண்மை!!!

ஒரு ஊரில் நன்றாக படித்த ஒருவன் இருந்தான். வேலை கிடைக்காமல் திருடனாகி விட்டான். அவன் ஏதேச்சையாக ஒரு துறவியை சந்தித்தான். அவர் அவனை திருத்த பல நல்லுரைகளைச் சொன்னார். துறவியின் போதனைகளில் ஈர்க்கப்பட்ட திருடன், "சுவாமி, உங்களுக்காக ஒரேயரு நல்ல விஷயத்தை மட்டும் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கிறேன்'' என்றான். 
"அப்படியானால், எந்த நிலையிலும் பொய்யே சொல்லாதே'' என்றார் துறவி. திருடனும் சத்தியம் செய்து கொடுத்தான். 

ஒருநாள் அவன் அரண்மனைக்கு திருடப் போனான். அங்கே இன்னொரு திருடனை சந்தித்தான். "இந்த அரண்மனையில் நான் வேலை பார்த்தவன். அதனால் உன்னை அரசரின் பொக்கிஷ அறைக்கே அழைத்துப்போகிறேன். நீ திருடு. நான் காவல் காக்கிறேன். திருடுவதில் ஆளுக்குப் பாதி'' என்றான். இவனும் 'சரி' என சம்மதித்தான். 

சுவர் ஏறிக்குதித்து கள்ளச்சாவி போட்டு திறந்து உள்ளே போனவனுக்கு ஆச்சர்யம். விலை உயர்ந்த ஆறு வைரங்கள் இருந்தன. 'ஆறு வைரங்களையும் எடுக்கக்கூடாது. தனக்கு இரண்டு, வழிகாட்டிய திருடனுக்கு இரண்டு, ராஜாவுக்கு இரண்டு விட்டுவிடுவோம்' என முடிவு செய்தான். அதன்படியே திருடிவிட்டு வெளியே வந்தான். வாசலில் காத்திருந்த திருடனுக்கு இரண்டை கொடுத்து விட்டு நடந்ததைக் கூறினான். 

அதைக் கேட்ட அவன், "பொய் சொல்லவில்லையே'' என்றான். உடனே முனிவருக்கு தான் செய்து கொடுத்த சத்தியத்தை கூறி, தன் முகவரியையும் தந்துவிட்டு இருளில் மறைந்து விட்டான். காவல் காத்த திருடன் உண்மையில் மாறுவேடத்தில் வந்திருந்த ராஜா. திருட்டிலும் நேர்மையாக நடந்து கொண்ட திருடனை வியந்தபடியே உறங்கச் சென்றார். 


மறுநாள் காலையில் அமைச்சரை அழைத்து பொக்கிஷ அறையை சோதிக்க அனுப்பினார். நான்கு வைரங்கள் திருட்டு போயிருந்ததை கவனித்த அமைச்சர், 'மிச்சமிருக்கும் இரண்டு வைரங்களையும் நாம் எடுத்துக் கொண்டு திருடன் மேல் பழி போட்டுவிடுவோம். யாருக்குத் தெரியப்போகுது?' என்று நினைத்து அமைச்சர் இரண்டு வைரங்களை திருடிக்கொண்டார். ராஜாவிடம், "ஆறு வைரங்களும் காணவில்லை'' என்றார். ராஜா அதிர்ச்சியடைந்தார்.

முகவரியை கொடுத்து நேற்றிரவு வந்த திருடனை பிடித்து வர உத்தரவிட்டார். திருடனும் நடந்தவற்றைச் சொல்லி, தன்னிடம் இருந்த இரண்டு வைரங்களை ராஜா எதிரில் வைத்தான். "நீ இன்னொரு திருடனுக்கு கொடுத்த இரண்டு வைரங்கள் இவைதானே'' என்று தன்னிடம் இருந்த இரண்டு வைரங்களை ராஜா காட்டினார். அதை பார்த்து திருடனும், அமைச்சரும் திகைத்து போயினர். இப்போது அமைச்சர் வசமாக மாட்டிக் கொண்டார். அவருடைய பதவியும் போனது. "பொய் சொல்லாத, பலசாலியான உன்னை அமைச்சராக்குகிறேன்'' என்று திருடனுக்கு பதவியும் கொடுத்தார் ராஜா. எத்தனை தப்புக்கு மத்தியிலும் பொய் சொல்வதில்லை என்கிற ஒரு நல்ல பழக்கம் திருடனை, அமைச்சராக்கியது.

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும் - வள்ளுவர்
பொய் சொல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; அது ஒருவன் அறியாமலேயே அவனுக்கு எல்லா நலன்களையும் கொடுக்கும்.