எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 20 பிப்ரவரி, 2017

தாமதம்!!!

மாலை நேரம். அந்த பூங்காவில் இருந்த மர பெஞ்சில், ஒரு ஆணும், பெண்ணும் அமர்ந்திருந்தனர். அந்த பெண் புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தாள். ஆண் குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தான். தற்செயலாக இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர். அந்த பெண் மீண்டும் புத்தகத்தை படிக்கத் தொடங்கினாள்.

அவன் தன் கடிகாரத்தை பார்த்துவிட்டு, கொஞ்ச தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவனை அழைத்தான். அந்த சிறுவனுக்கு ஆறு வயது இருக்கும். அவனிடம், "இன்னும் 5 நிமிஷம்" என்று கூறினான். அவனும் சிரித்துக் கொண்டே 'சரி' என்றபடி விளையாட்டை ரசிக்கத் தொடங்கினான். அருகில் அமர்ந்திருந்தவள் இதை கவனித்தாள்.


அவனிடம், "உங்கள் மகனா?" எனக் கேட்டாள். அவனும் "ஆம்" என்றான். அவள் அங்கே விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தையை காட்டி, "அது என்னுடைய மகள்" என்றாள். அந்த சிறுமியை பார்த்து விட்டு, "உங்கள் மகள் மிக அழகாக இருக்கிறாள்" என்றான் அவன். பிறகு இருவரும் தங்கள் குழந்தைகளைப் பற்றி பேசிக் கொண்டனர்.

சில நிமிடங்கள் கழித்து, மீண்டும் அவன் கடிகாரத்தை பார்த்து விட்டு, "வீட்டிற்கு போகலாம்" என்று தன் மகனை அழைத்தான். சிறுவன், "இன்னும் கொஞ்ச நேரம்..." என்றபடி அங்கிருந்து செல்ல மறுத்தான். அவனும், "சரி. விளையாடு. ஆனால் இதுதான் கடைசி முறை" என்றான். சிறுவன் மகிழ்ச்சியோடு விளையாட ஓடினான்.


இதைக் கேட்ட அவள், "உங்களுக்கு பொறுமை மிகவும் அதிகம்" என்றாள் அவனிடம். அவன், "போன வருடம், ஒருநாள் இதே போன்று என் மகனை பூங்காவில் விளையாட அழைத்து வந்திருந்தேன். அவன் இன்னும் கொஞ்ச நேரம் விளையாடி விட்டு வருவதாக என்னிடம் சொன்னான். ஆனால், நான் வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றேன்.

பாதி தூரம் சென்றிருந்த சமயத்தில், ஒரு லாரி என் வண்டியில் மோதி விபத்து ஏற்பட்டது. எனக்கு காயம் அதிகமில்லை. ஆனால் என் மகனுக்கு தலையில் அடிபட்டது. மிகப் பெரிய போராட்டத்திற்கு பிறகு தான் மருத்துவர்களால் அவனைக் காப்பாற்ற முடிந்தது. ஒருவேளை அன்று அவனை கொஞ்ச நேரம் விளையாட அனுமதித்திருந்தால், அந்த விபத்து ஏற்படாமல் இருந்திருக்கும்" என்றான்.

நீங்கள் விரும்பிய ஒன்று கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால், கவலைப்படாதீர்கள். நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பான ஒன்று காத்திருக்கிறது என்று கருதுங்கள்