எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 22 பிப்ரவரி, 2017

நம்மைச் சுற்றி...

அனைத்து செல்வ செழிப்பும் நிறைந்த ஒரு நாட்டின் அரசன் மிகவும் திறமையாக ஆட்சி செய்து வந்தான். அதனால் அந்த நாட்டு மக்கள் அனைவரும் கவலைகள் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அரசன் எப்போதும் அரண்மனை நாவிதன் ஒருவனிடம் சவரம் செய்து கொள்வான். அவ்வாறு ஒருநாள் சவரம் செய்து கொண்டிருந்த சமயத்தில், நாவிதனிடம் நாட்டு நிலைமை பற்றியும், மக்களின் நிலை குறித்தும் விசாரித்தான். 

அதற்கு நாவிதன், "மன்னா! உங்களின் ஆட்சியில் நாடு வளமாகவும், செழிப்பாகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் மக்களின் நிலைமைதான் மிகவும் மோசமாக இருக்கிறது" என்றான். இதைக் கேட்ட மன்னனுக்கு அதிர்ச்சி. நாவிதனிடம், "நான் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்கள் நலனில் மிகுந்த அக்கறை காட்டுகின்றேனே! இருந்தும் அவர்களுக்கு என்ன குறை?" எனக் கேட்டான்.


"மன்னா! மக்களுக்கான திட்டங்கள் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன. இருந்தும் என்ன பிரயோஜனம்? யாரிடமும் ஒரு குண்டுமணியளவு தங்கம் கூட இல்லையே!" எனக் கூறினான் நாவிதன். இதைக் கேட்ட மன்னனுக்கு ஒரு குழப்பம் ஏற்ப்பட்டது. நாவிதன் சென்றதும், மன்னன் தன் சேவகனை அழைத்து, "நீ இன்று இரவு நாவிதனுடைய வீட்டிற்கு சென்று நான் கொடுக்கும் தங்க கட்டியை யாருக்கும் தெரியாமல் வைத்துவிட்டு வர வேண்டும்" என கட்டளையிட்டான். அவனும் அவ்வாறே செய்தான்.

சில நாட்களுக்கு பிறகு, மன்னனுக்கு சவரம் செய்ய அரண்மனைக்கு அதே நாவிதன் வந்தான். மீண்டும் மன்னன் நாட்டு நிலைமை பற்றியும், மக்களின் நிலை குறித்தும் விசாரித்தான். இப்போது நாவிதன் மகிழ்ச்சியுடன், "அரசே! நாடும் மக்களும் மிகுந்த செழிப்போடு இருக்கின்றனர். மக்கள் அனைவரிடத்திலும் ஒரு கட்டி தங்கம் உள்ளது. எந்தக் குறையும் இல்லை" என்றான். நாவிதன் சென்றதும், மன்னன் மீண்டும் தன் சேவகனை அழைத்து, "இன்று இரவு நீ நாவிதனுடைய வீட்டிற்கு சென்று நான் கொடுக்கும் இரண்டு தங்க கட்டியை யாருக்கும் தெரியாமல் வைத்துவிட்டு வர வேண்டும்" என கட்டளையிட்டான். அவனும் அவ்வாறே செய்தான்.


அடுத்த சில நாட்களுக்கு பிறகு, மீண்டும் அரண்மனைக்கு வந்தான் நாவிதான். "இப்போது மக்களின் நிலைமை என்ன?" என்று கேட்டான் அரசன். நாவிதன், "மன்னா! நாட்டின் வளமையும், மக்களின் வளமையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இப்போது அனைவரிடத்திலும் இரண்டு கட்டி தங்கம் இருக்கிறது" என்றான். அவன் சென்றதும், சேவகனை அழைத்தான் அரசன். "இன்று இரவு நீ நாவிதனுடைய வீட்டிற்கு சென்று நான் கொடுத்த அனைத்து தங்க கட்டியையும் யாருக்கும் தெரியாமல் எடுத்து வர வேண்டும்" என கட்டளையிட்டான். சேவகனும் அவ்வாறே எடுத்து வந்து மன்னனிடம் கொடுத்தான்.

மீண்டும் சில நாட்களுக்கு பின்னர், அரண்மனைக்கு வந்த நாவிதனிடம் மக்களின் நிலைமை குறித்து விசாரித்தான் மன்னன். மிகுந்த வெறுப்புடன் நாவிதன், "நாட்டின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. திருடர்களின் தொல்லை அதிகரித்து விட்டது. மக்கள் அனைவரும் வறுமையில் வாடுகின்றனர்" என பதிலளித்தான். இதைக் கேட்ட மன்னன் சிரித்துக் கொண்டே நடந்த உண்மையை கூறினான். நாவிதனுக்கு தன் தவறு புரிந்தது.

நாமும் பல சமயங்களில் இவ்வாறு தான் நடந்து கொள்கிறோம். நாம் கஷ்டப்படும் சூழ்நிலையில், 'எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை?' எனப் புலம்புகிறோம். அல்லது நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களைக் கொண்டு 'இந்த உலகம் இப்படித்தான்' என முடிவு செய்து விடுகிறோம்.