எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

கோணம்!!!

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தை சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர். அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவர்கள் தங்கியிருந்த ஊரின் தலைவருக்கு அறிஞரைப் பிடிக்காது. அவரை எப்படியாவது பிறர் முன்பு மட்டம் தட்டி தலைகுனிவை ஏற்படுத்த விரும்பினார். 

ஒருநாள் ஊர்த்தலைவர் அறிஞரைப் பார்த்துக் கிண்டலாக, ”ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!” என்றார்.


அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?” எனக் கேட்டார்.
பையன் ”தங்கம்” என சொன்னான். அவர், ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?” எனக் கேட்டார்.

பையன், ”தினமும் நான் பள்ளி செல்லும்போது ஊர்த்தலைவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறுகையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அழைத்து 'இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள்' என்பார். நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன். உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள். நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன். 


இது ஓராண்டாக நடக்கிறது. இதனால் தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான் நான் மதிப்பு வாய்ந்தது வெள்ளி என்று கூறினேன்” என்று விளக்கம் அளித்தான். இதைக் கேட்ட அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், ஆனால் நாம் தோற்பதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். அதை வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!