எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

மறைந்த மனித நேயம்!!!

ஒரு நாட்டின் ராஜா, நிர்வாகம், வீரம், மனிதாபிமானம், புத்திசாலித்தனம், நீதி மற்றும் நேர்மை ஆகியவற்றில் சிறந்து விளங்குபவன். மாறுவேடத்தில் நகர்வலம் வந்து மக்களின் பிரச்சனைகளை அறிந்து களைவது வழக்கமாக கொண்டிருக்கின்றான். ஒருமுறை, நகர்வலத்தின்போது, கால் ஊனமுற்ற ஒருவன் நடக்க முடியாமல், சிரமபட்டு கொண்டு இருப்பதை பார்த்து 'அவனுக்கு உதவலாமே' என்ற எண்ணத்தில், அவனையும் தன்னுடைய குதிரையில் அமர்ந்துகொள்ள அழைக்கின்றான். 

உண்மையில் அவன் ஒரு திருடன், வந்திருப்பது ராஜா என்றறியாமல் குதிரையை அபகரிக்கும் நோக்குடன், ஊனமுற்றவன்போல நடிக்கின்றான். திருடனும் ராஜவின் அழைப்பினை ஏற்று, ராஜாவை கீழே இறங்கி, குதிரை மேல் ஏற உதவுமாறு கேட்கின்றான். ராஜாவும் கீழேஇறங்கி அவனை ஏற்றிவிட்டு, அவர் ஏற எத்தனிக்கையில், திருடன் ராஜவின் குதிரையை ஓட்டிககொன்டு சென்றுவிடுகின்றான். ராஜா திகைத்து நின்றுவிட்டு, பிறகு நடந்தே அரண்மனைக்கு சென்றுவிடுகின்றார்.


பின்நாளில் அதே திருடன் வேறொரு குற்றத்திற்காக காவலர்களிடம் மாட்டி தண்டனைக்காக ராஜாவிடம் அழைத்து வரப்பட்டான். அவனை அடையாளம் கண்ட ராஜா, அவனுக்கு சிறை தண்டனை கொடுத்தார். பிறகு சிறைச்சாலைக்கு சென்று அவனிடம் தான் மாறுவேடத்தில் வந்தபொழுது தன் குதிரையை அவன் ஏமாற்றி திருடிச்சென்றதை சொன்னார். 

உடனே அந்த திருடன், ராஜாவின் கால்களில் விழுந்து 'மன்னியுங்கள்' என்று கதறினான், உடனே ராஜா அவனை மன்னித்துவிட்டதாக கூறி, படாரென அவன் காலில் விழுந்து, "கல்வி, கேள்வி, மனித நேயம் அனைத்திலும் சிறந்தவன் நான். அவைகளனைத்தும் என் நாட்டு மக்களிடையேயும் தழைத்தோங்க வேண்டும் என்று நினைப்பவன். யாரோ ஒருவன் கஷ்டப்படுபவன் போல ஏமாற்றி திருடிவிட்டான் என்று மக்கள் அறிந்தால், அடுத்து உண்மையில் கஷ்டப்படுபவர்களுக்கு, யாரும் உதவ மாட்டார்கள். மனித நேயம் மறைந்துவிடும், எனவே என்னிடம் குதிரையை திருடிய விதத்தினை யாரிடமும் கூறிவிடாதே!" என்று கெஞ்சுகின்றார். 


அந்த திருடன் அப்படியே திகைத்து நின்றுவிட்டு, "அடடா! இப்படிப்பட்ட மன்னனின் ஆட்சியிலா இப்படி ஒரு காரியம் செய்தோம்?" என வருந்தினான். அப்படியே கண்ணீர்விட்டு கதறி அழுது, "ராஜா! என்னை மன்னியுங்கள். இனிமேல் இப்படி செய்யமாட்டேன்" என்று சொல்லி, அக்கனம் முதல் திருந்தி நல்லவனாகிவிடுகின்றான்.

ஒருவர் நம்மை ஏமாற்றி விட்டால், இந்த உலகத்தில் உள்ள அனைவருமே ஏமாற்றுக்காரர்கள் என முடிவு செய்து விடுகிறோம். இதன் விளைவு இன்றைய காலக்கட்டத்தில் மனிதனை மனிதனாக மதிப்பதில்லை. ஒருவரை ஒருவர் நம்பும் சூழ்நிலை இல்லை. அன்பு, பாசம் போன்ற உணர்வுகள் மறக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வருகின்றன. மனித மனமானது அதிக வருமானம், பணம், பேராசை, பதவி மோகம், கேளிக்கை  என ஒரு ஆடம்பரமான வாழ்க்கையைத் தேடி அலைகிறது.