எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

நிலவரம் !!!

ஒரு மேடைபேச்சாளர் தன்னுடைய சட்டைபையிலிருந்து ஒரு 500 ரூபாய் தாளை எடுத்து "இது என்ன?" என பார்வையாளர்களை பார்த்து கேட்டார். அனைவரும் "இது ஒரு 500 ரூபாய் தாள்" என கூறினார்கள். பின்னர் அதனை தரையில் கசக்கி வீசி எறிந்தபின் "அது என்ன?" என கேட்டார். அப்போதும் அனைவரும், "இது ஒரு 500 ரூபாய் தாள்" என கூறினார்கள். பிறகு அதன்மீது ஒரு முத்திரையை குத்தி, "இப்போது இது என்ன?" என கேட்டார் இப்போதும் அனைவரும் "இது ஒரு 500 ரூபாய் தாள்" என கூறினார்கள்.


உடன் அம்மேடை பேச்சாளர், "பார்த்தீர்களா... ஒரு 500 ரூபாய்தாளானது நாம் என்ன செய்தாளும் அது தன்னுடைய மதிப்பை மாற்றி கொள்ளாமல் தக்கவைத்து கொண்டுள்ளது. அவ்வாறே நாம் அனைவரும் நம்முடைய குணத்தை திறனை எந்த  சூழ்நிலை வந்தாலும் எந்த சூழலிலும் மாற்றிகொள்ளாமல் அவரவர்களின் தனித்தன்மையை பராமரிக்கவேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

பின்னர் "இந்த 500 ரூபாய் யாருக்கு வேண்டும்?" என கேட்டார். உடன் அனைவரும் "எனக்கு... எனக்கு..." என கைகளை உயர்த்தினர். ஆயினும் ஒரு இளம் வாலிபன் தடதடவென மேடைக்கு ஓடிவந்து, அந்த 500 ரூபாய் தாள் தனக்கு வேண்டுமென தன்னுடைய கையை நீட்டி பறித்து கொண்டார். 



உடன் அம்மேடை பேச்சாளர், "பார்த்தீர்களா... நம் அனைவருமே அந்த 500 ரூபாய் தாளை விரும்புகின்றோம். ஆனால் இந்த இவ்வளவு பெரிய கூட்டத்தில் ஒரே ஒருவர் மட்டும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார். ஆம்! நம்மை சுற்றி ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அவைகளை ஒரு சிலர் மட்டுமே பயன்படுத்தி கொண்டு, தம்முடைய வாழ்வை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்கின்றனர்.
மற்றவர்கள் அந்த வாய்ப்பு நம் கையில் தானாக வந்த விழும் அதன்பின் நாம் பயன்படுத்தி கொள்வோம் என சோம்பேறியாக இருக்கின்றோம் என்பதே உண்மை நிலவரமாகும்" என்றார்.