எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 16 ஜனவரி, 2017

அழிவுப் பாதை

இரண்டாம் உலகப் போர் உக்கிரம் அடைந்திருந்த நேரம். எதிரியின் தாக்குதலில் இருந்து தங்களது போர் விமானங்கள் தப்பிக்கும் வழிகள் குறித்து அமெரிக்கா தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தது. பொருட்செலவும் தொழில்நுட்பமும் கொண்டு தயாரிக்கப்படும் விமானங் களை பார்த்து, பராமரித்து, பொக்கிஷம் போல் பாதுகாத்தால்தான் போரிட முடியும். அதோடு வெற்றி பெற அமெரிக்கா விமானங்களையே பெரிதும் நம்பியிருந்தது.

எதிரிகளின் தாக்குதலை சமாளித்து விமானங்களின் ஆயுளை அதிகரிக்க குண்டு துளைக்காத கவசம் போன்ற ஆர்மர் தகடுகளை விமானங்கள் மீது ஒட்ட அமெரிக்கா முடிவு செய்யப்பட்டது. ஆர்மர் தகடுகள் ஏகத்திற்கு கனமானவை. மொத்த விமானத்தையும் அதை கொண்டு மூடினால் அத்தனை கனத்தை சுமந்து விமானத்தால் பறக்க முடியாது. என்ன செய்வது என்று சிந்தித்து போரில் விமானம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை மட்டும் ஆர்மர் தகடுகளால் மூடுவது என்று முடிவு செய்தனர். பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் எது என்பதை எப்படி இனம் கண்டுகொள்வது?


போரிலிருந்து திரும்பி வந்த விமானங்களை பிரித்து மேய்ந்து ஆராய்ந்தனர். அந்த விமானங்களில் குண்டு, தோட்டாக்கள் எங்கு துளைத்திருந்தன என்று தேடி அப்படி தாக்குதலுக்கு ஆளான பகுதிகளே பாதிக்கப்படக் கூடியவை என்று அப்பகுதிகளை மட்டும் ஆர்மர் தகடுகள் வைத்து மூட முடிவு செய்தனர்.

ஆய்வாளர்கள் நினைத்து போல் இதுதான் சரியான தீர்வு என்று நீங்களும் நினைத்தால் பேரழிவில் முடிந்திருக்கும். இரண்டாம் உலகப் போரின் போக்கே மாறியிருக்கும். அப்படி எதுவும் நடக்காமல் தடுத்து நிறுத்தியவர் ‘ஆப்ரஹாம் வால்ட்’ என்ற புள்ளியல் நிபுணர். போர்க்களத்தில் எதிரிகள் தாக்கு தலில் இருந்து தப்பி வந்த விமானங்கள் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டதை கவனித்தார் வால்ட். போரில் அடி பட்டு விழுந்து நொறுங்கிய விமானங்களை யாரும் சிந்திக்காததை உணர்ந்தார். அடிபட்டும் தொடர்ந்து பறந்து தப்பிக்க முடியும் என்பதையே போரிலிருந்து திரும்பிய விமானங்களும் அதன் பாதிக்கப்பட்ட பகுதிகளும் காட்டுகின்றன என்பதை புரிந்துகொண்டார்.


விமானப் படையிடம் அவர்கள் திட்டமிட்டதற்கு முழுவதும் எதிர்மறையான செயலை செய்வதே புத்திசாலித்தனம் என்பதை எடுத்துரைத்தார். திரும்பிய விமானங்களில் எந்த பகுதிகளில் குண்டு துளைக்கவில்லையோ அந்த பகுதிகளே பாதிக்கப்படக்கூடியவை என்றார். திரும்பி வராத விமானங்கள் அப்பகுதிகளில் அடிபட்டதால்தான் விழுந்திருக்கும் என்று விளக்கினார்.

ஆகவே திரும்பிய விமானங்களில் எந்த பகுதிகளில் அடிபடவில்லையோ அப்பகுதிகளில் மட்டும் ஆர்மர் கவசம் கொண்டு மூடினால் போதும் என்றார். அவர் கூறியது போல் விமானங்கள் ஆர்மர் கொண்டு மூடப்பட்டு பல நூறு விமானங்களும் விமானிகளின் உயிர்களும் காப்பாற்றப்பட்டன.

அப்பொழுது புதியதாய் பிறந்து மெதுவாய் வளர தொடங்கி இன்று உலக ராணுவ அமைப்புகளாலும் பன்னாட்டு நிறுவனங்களாலும் பயன்படுத்தும் செயல்பாட்டு ஆராய்ச்சி (Operations Research) என்ற இயலின் முதல் பங்களிப்பாக இந்த நிகழ்வு கருதப்படுகிறது.


அமெரிக்க படைத் தளபதிகள், உத்தியமைப்பவர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் தவறாக திட்டம் போட காரணமாக இருந்து எது? ஆய்வுகளை மீறி அழிவுப் பாதையில் அனைவரையும் அழைத்துச் சென்றது எது?

‘எஞ்சியிருத்தல் சார்புநிலை’ (Survivorship bias) என்கிறார்கள் உளவியலாளர்கள். திரும்பி வந்த விமானங்களை மட்டுமே அனைவரும் ஆராய திரும்பி வராத விமானங்களை கணக்கில் எடுக்காமல் இருந்ததே தவறுக்கு காரணம். 

வெற்றியை மட்டுமே பார்க்க பழகியிருக்கும் நாம் தோல்விகளை பார்ப்பதில்லை. இதுவே எஞ்சியிருத்தல் சார்புநிலையின் ஆதார தத்துவம். போரில், வாழ்க்கையில், வியாபாரத்தில் எல்லா இடங்களிலும் இதே கதைதான். பல சமயங்களில் வெற்றிகளை விட தோல்விகள்தான் நமக்கு அதிக பாடங்களை கற்றுத் தருகிறது. அதை நாம் உணர்வதும் இல்லை. கற்கவேண்டிய முக்கியமான பாடங்களை கற்பதும் இல்லை.

தோல்விகளை விட வெற்றிகளைத் தான் இந்த சமுதாயத்தின் கண்கள் பார்க்கின்றன. கண்ணில் தெரியும் வெற்றியை மட்டுமே மனம் ஆராய்கிறது. கண்ணிற்கு தெரியாமல் மறையும் தோல்விகளும் அதிலிருந்து கற்க வேண்டிய பாடங்களும் நம் கண்களுக்கு தெரிவதில்லை.